தேனி மாவட்ட தி.மு.கவில் உட்கட்சி குழப்பம்.. முடிவுகள் நிறுத்தம்- தலைமை வரை போன புகார்.. காரணம் என்ன?
தேனி: தமிழ்நாடு முழுவதும் தி.மு.க உட்கட்சி தேர்தல் நடைபெற்று வருகிறது. இதையொட்டி தேனி மாவட்டத்தில் கட்சிக்குள் பெரும் கலவரமே நடந்து வருகிறது.
தேனி தெற்கு மாவட்டத்தில் தி.முகவினர், அக்கட்சியின் மாவட்ட நிர்வாகிக்கு எதிராக சாலை மறியல் போராட்டம் நடத்தியுள்ளனர்.
தேனி வடக்கு மாவட்டத்தில் உட்கட்சித் தேர்தல் முடிவுகள் வெளியிடப்படாமல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
சட்டசபை ஜால்ரா சபையாகிவிட்டது! திமுக அமைச்சர்களில் பாதிபேர் அதிமுக! கேஜிஎப் டயலாக் பேசிய ஜெயக்குமார்
தேனி வடக்கு
தேனி வடக்கு மாவட்டத்தில் சத்தமே இல்லாமல் உட்கட்சித் தேர்தல் நடைபெற்றுள்ளது. ஆனால் வெற்றி பெற்ற நிர்வாகிகளின் பெயர்கள் இதுவரை அறிவிக்கப்படாமல் ரகசியமாகவே வைக்கப்பட்டுள்ளதுதான் தொண்டர்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.
வார்டு செயலாளர்கள், நகர செயலாளர்கள், பேரூர் கழக செயலாளர்கள் என எந்தப் பட்டியலும் இன்னும் அறிவிக்கப்படாததால் போட்டியிட்ட நிர்வாகிகள் கைகளைப் பிசைந்து வருகின்றனர்.
காரணம் என்ன
கட்சி கட்டுப்பாட்டை மீறியதாக தேனி மாவட்ட தி.மு.க நிர்வாகிகள் 3 பேர் சமீபத்தில் சஸ்பெண்டு செய்யப்பட்டனர். நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் தி.மு.க தலைமை கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கிய இடங்களில் தி.மு.க.வினர் போட்டியிட்டு வெற்றி பெற்றதால், அப்பதவிகளை ராஜினாமா செய்த திமுக தலைவர் ஸ்டாலின் உத்தரவிட்டார்.
ஆனால், பல இடங்களில் நிர்வாகிகள் ராஜினாமா செய்யவில்லை. அங்கெல்லாம் கட்சி நடவடிக்கை மேற்கொண்டது. அந்த வகையில், தேனி நகர செயலாளர் பாலமுருகன், பெரியகுளம் நகர பொறுப்பாளர் முரளி, போடி நகர பொறுப்பாளர் செல்வராஜ் ஆகியோர் கட்சியில் இருந்து தற்காலிகமாக நீக்கப்பட்டனர்.
மீண்டும் சேர்க்க
இந்த நிர்வாகிகள் முந்தைய தேர்தல்களில் சிறப்பாகப் பணியாற்றி தி.மு.கவுக்கு வெற்றியைத் தேடித் தந்தவர்கள் என தலைமைக்கு கூறப்பட்டுள்ளது. அதனால் இவர்களுக்கு மீண்டும் பொறுப்பு வழங்க வேண்டும் எனப் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
ஆனால், கூட்டணிக் கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்ட தொகுதிகளை ஆட்களை நிறுத்தி குழப்பம் ஏற்படுத்தி தலைவருக்கு தர்மசங்கடம் விளைவித்தவர்களுக்கே மீண்டும் பொறுப்பு வழங்கினால் கட்சி கட்டுப்பாடு குலையும் என மூத்த நிர்வாகிகள் சிலர் கருதுகின்றனர்.
விசாரணை குழு
இந்த பிரச்சினை காரணமாகவே தேனி வடக்கு மாவட்ட தி.மு.கவில் உட்கட்சி தேர்தல் முடிந்தும் இன்னும் நிர்வாகிகள் விவரம் அறிவிக்கப்படாமல் இருந்து வருகிறது.
விரைவில் தலைமை உத்தரவின்பேரில் ஒரு குழு தேனிக்கு வருகை தர இருப்பதாகவும், அந்தக் குழு அளிக்கும் விசாரணை அறிக்கையின் அடிப்படையில், மீண்டும் அந்த நிர்வாகிகளுக்கு பதவிகள் வழங்கப்படலாம் என்றும் தகவல் கசிந்துள்ளது.
தேனி தெற்கு
இதேபோல, தேனி தெற்கு மாவட்டத்தில் இன்னொரு குழப்பம் நிலவுகிறது. தி.மு.கவில் உள்ள தலித் சமூகத்தினரை மாவட்ட நிர்வாகி ஒருவர் விமர்சித்ததாக கூறப்படுகிறது. இதனால் அவரைக் கண்டித்து தி.மு.க தலைவர் ஸ்டாலின் மற்றும் அம்பேத்கர் படங்களை ஏந்தியபடி தொண்டர்கள் சாலை மறியல் போராட்டம் நடத்தியுள்ளனர்.
இந்த விவகாரம் ஸ்டாலின் காதுக்கும் கொண்டு செல்லப்பட்டுள்ளது. இதுகுறித்து விசாரணை நடத்தவும் கட்சியின் சீனியர்களுக்கு ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளாராம். இப்படி தொடர் பிரச்சனைகளால் தேனி மாவட்ட தி.மு.க அரசியல் களம் தகிக்கிறது.