எல்லாமே ‘லக்கி பாஸ்கர்’ ஆக முடியுமா? காசுக்கு ஆசைப்பட்டு கஞ்சா கடத்தல்..கொத்தாய் சிக்கிய கேரள கேங்!
தேனி: ஆந்திராவில் இருந்து 26.5 கிலோ கஞ்சா கடத்திவரப்பட்ட வழக்கில் தேடப்பட்டு வந்த குற்றவாளி கேரளாவில் கைது செய்யப்பட்டுள்ளார். லக்கி பாஸ்கர் பட பாணியில் சீக்கிரம் பணக்கரனாக ஆசைப்பட்டு நண்பனின் நண்பரோடு சேர்ந்து கஞ்சா கடத்தி கல்லா கட்ட நினைத்தவர் போலீசில் சிக்கி சின்னாபின்னாமானது எப்படி என்பது குறித்து பார்க்கலாம்..
தேனி மாவட்டம் தேவதானப்பட்டி போலீசார் தேனி - திண்டுக்கல் எல்லையில் உள்ள சோதனைச் சாவடியில் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியாக வந்த கேரள பதிவு எண் கொண்ட காரை நிறுத்தி சோதனை செய்தனர்.

காரில் வந்த கேரள மாநிலம் கொல்லத்தைச் சேர்ந்த சஜூ (35) மற்றும் சோனி (32)ஆகியோரை போலீசார் விசாரணை செய்தனர். அதில் அவர்கள் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்தனர். போலீசார் காரை சோதனை செய்ததில் அந்தக் காரில் 7 பொட்டலங்களாக சுமார் 26.500 கிலோ கஞ்சா இருப்பது தெரிய வந்தது.
காருடன் கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். இதில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின. கேரள மாநிலம் திருவனந்தபுரம் மாவட்டம் வர்க்கலா என்ற பகுதியைச் சேர்ந்த சஜூ என்பவர், ஆந்திர மாநிலம் நெல்லூர் அருகே பிரம்மதேவ் என்னும் பகுதியில் உள்ள ஒரு கம்பெனியில் வேலை செய்து வந்தார். அப்போது அவருக்கு ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த சூரஜ் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. சூரஜ் ஒடிசாவில் இருந்து கஞ்சா வாங்கி வந்து ஆந்திராவில் சில்லறை விற்பனையில் ஈடுபட்டு வந்துள்ளார்.
மேலும் சஜுவின் நண்பரான கேரள மாநிலம் கொல்லத்தைச் சேர்ந்த ராஜேஷ் என்பவரும் கொல்லம் பகுதியில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வந்துள்ளார். இதனைத் தொடர்ந்து சஜு மற்றும் சூரஜ் ஆகியோருடன் இணைந்து ஒடிசாவில் இருந்து கஞ்சாவை வாங்கி வந்து கேரளாவில் விற்பனை செய்ய ராஜேஷ் முடிவு செய்தார்.
அதன் பேரில் ராஜேஷ் தனது நண்பரான சோனி என்பவரை ஆந்திராவுக்கு அனுப்பினார். அங்கு சஜூவை சந்தித்த சோனி ராஜேஷின் நண்பர் என அறிமுகமானார்.பின்னர் சஜு மற்றும் சோனி ஆகியோர் சூரஜ் ஒடிசாவில் இருந்து கொண்டு வந்த கஞ்சாவில் 26 ஒரு கிலோ கஞ்சாவை வாங்கி வரும் வழியில் தேவதானப்பட்டி சோதனை சாவடியில் பிடிபட்டதும் தெரியவந்தது.
இதனைத் தொடர்ந்து சஜு(35), சோனி (32),சூரஜ் , மற்றும் ராஜேஷ் ஆகிய நான்கு பேர் மீது வழக்குப்பதிவு செய்த தேவதானப்பட்டி போலீசார் சஜூ மற்றும் சோனி ஆகியோரைக் கைது செய்தனர். அவர்களிடமிருந்து 26.5 கிலோ கஞ்சா, ரூ.12,500 ரொக்க பணம், இரண்டு செல்போன்கள் மற்றும் கஞ்சா கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட கார் ஆகியவற்றை செய்தனர். கடத்தி வரப்பட்ட கஞ்சாவின் மதிப்பு 26.5 லட்சம் என போலீசார் தெரிவித்தனர்.
இந்த வழக்கில் சஜூ மற்றும் சோனி ஆகியோரை ஆந்திராவிற்கு கஞ்சா வாங்குவதற்காக அனுப்பிய கேரள மாநிலம் கொல்லத்தைச் சேர்ந்த ராஜேஷ் என்ற கஞ்சா வியாபாரியை பிடிக்க தனிப்படையினர் தீவிரமாக தேடி வந்த நிலையில், நேற்று கொல்லம் பகுதியில் தலைமறைவாக இருந்த ராஜேஷை தேனி தனிப்படையினர் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட ராஜேஷை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய நிலையில் நீதிமன்ற உத்தரவின் பேரில் ராஜேஷ் சிறையில் அடைக்கப்பட்டார். பிடிபட்ட கஞ்சாவின் அளவு 26.5 கிலோ என்பதால் இந்த வழக்கு மதுரை மாவட்டத்தில் உள்ள போதைப்பொருள் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications