ஓபிஎஸ் மனைவிக்கு அஞ்சலி செலுத்த நள்ளிரவில் பெரியகுளம் சென்ற டிடிவி தினகரன்.. கையை பிடித்து ஆறுதல்
தேனி: அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வத்தின் மனைவி திருமதி விஜயலட்சுமி நேற்று காலை மாரடைப்பால் உயிரிழந்தார். அவரது உடல் இன்று நல்லடக்கம் செய்யப்படுகிறது.
Recommended Video
முன்னதாக, பெரியகுளத்தில் வைக்கப்பட்டுள்ள அவரது உடலுக்கு அம்மா மக்கள் முன்னேற்றக் கழக கட்சி பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார்.
அப்போது ஓபிஎஸ் கையை பிடித்து ஆறுதல் கூறியுள்ளார் டிடிவி தினகரன்.

ஓபிஎஸ் மனைவி மறைவு
அதிமுக ஒருங்கிணைப்பாளரும், எதிர்கட்சி துணைத் தலைவருமான ஓ.பன்னீர்செல்வத்தின் மனைவி விஜயலட்சுமி (66) கடந்து ஒரு வாரகாலமாகவே உடல் நலக்குறைவால் பெருங்குடியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். ஆனால், நேற்று காலை சிகிச்சையின் போது மாரடைப்பு ஏற்பட்டு காலமானார்.

பல தலைவர்கள்
விஜயலட்சுமியின் உடலுக்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அதிமுக ஒருங்கிணைப்பாளரும் எதிர்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி, சசிகலா, விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், பாஜக தலைவர் அண்ணாமலை உட்பட பலரும் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர்.

ஸ்டாலின், சசிகலா நேரில் ஆறுதல்
ஸ்டாலின் மற்றும் சசிகலா சென்றபோது ஓபிஎஸ் உடைந்து அழுதுவிட்டார். அவரின் கைகளை பிடித்து ஸ்டாலின் ஆறுதல் கூறினார். சசிகலாவும் அவ்வாறு ஆறுதல் தெரிவித்தார். சசிகலாவுக்கு எதிராக தர்ம யுத்தம் செய்தவர் ஓபிஎஸ். அதன்பிறகு இருவரும் நேரில் சந்தித்து கொள்ளவில்லை. 4 வருடங்களுக்கு பிறகு, நேற்றுதான் சென்னையில் இருவரும் சந்தித்து கொண்டனர்.

முக்கிய பிரமுகர்கள்
சென்னையில் இறுதி அஞ்சலி நிகழ்ச்சிகள் நடத்தப்பட்ட பிறகு, விஜயலட்சுமியின் உடல் தேனி மாவட்டம் பெரியகுளத்தில் உள்ள ஓ.பன்னீர் செல்வத்தின் இல்லத்துக்கு எடுத்து செல்லப்பட்டது. விஜயலட்சுமியின் உடலுக்கு அதிமுக மற்றும் மாற்று அரசியல் கட்சியை சேர்ந்தவர்கள், உறவினர்கள், பொதுமக்கள் அஞ்சலி செலுத்தியபடி உள்ளனர்.

டிடிவி தினகரன் ஆறுதல்
இந்நிலையில், விஜயலட்சுமியின் உடலுக்கு அஞ்சலி செலுத்துவதற்காக தேனி மாவட்டம் பெரியகுளத்தில் உள்ள ஓ.பன்னீர்செல்வத்தின் வீட்டுக்கு அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் நேற்று நள்ளிரவில் சென்றார். அங்கு வைக்கப்பட்டிருந்த விஜயலட்சுமியின் உடலுக்கு அவர் அஞ்சலி செலுத்தினார்.
பிறகு பன்னீர் செல்வத்தின் கைகளைப் பற்றிக்கொண்டு டிடிவி தினகரன் அவருக்கு ஆறுதல் கூறினார். பன்னீர் செல்வத்தின் மகன் ரவிந்திர நாத் உள்ளிட்ட குடும்பத்தினரும் டிடிவி தினகரன் ஆறுதல் கூறிவிட்டு கிளம்பினார்.

தினகரன் vs ஓபிஎஸ்
கடந்த தேர்தல் பிரச்சாரத்தின் போது ஓ.பன்னீர்செல்வத்துக்கு எதிராக கடுமையான விமர்சனங்களை முன் வைத்தவர் டிடிவி தினகரன். முதல்வர் பதவியை கொடுத்தோம், ஆனால் அதற்கு நன்றி பாராட்டாமல் எதிர் முகாமில் சேர்ந்துகொண்டார் என்று தினகரன் குற்றம் சாட்டினார். கடந்த லோக்சபா தேர்தலின் போது தினகரனுக்கு மிகவும் நெருக்கமான ஆதரவாளராக இருந்த தங்க தமிழ்செல்வன் தேனி லோக்சபா தொகுதியில் இருந்து போட்டியிட களமிறக்கப்பட்டார். பன்னீர்செல்வம் மகன் ரவீந்திரநாத்தை தோற்கடித்தே தீரவேண்டும் என்பது தினகரனின் முக்கிய நோக்கமாக இருந்தது. இப்படியான அரசியல் மோதல்கள் இருந்த நிலையில்தான் பன்னீர்செல்வம் வீட்டிற்குச் சென்று தினகரன் ஆறுதல் கூறி இருப்பது முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. ஒருபக்கம் சசிகலா, பன்னீர்செல்வத்துக்கு ஆறுதல் தெரிவித்து இருப்பது, இன்னொரு பக்கம் தேனிக்கு சென்று தினகரன் ஆறுதல் தெரிவித்து இருப்பது ஆகியவை, சொந்த பழக்கவழக்கங்கள் என்பதைத் தாண்டி, அரசியல் ரீதியாகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications