"ஒருங்கிணைந்த அதிமுக" தேனியில் எடப்பாடி வாகனத்தை முற்றுகையிட்ட பெண்கள்.. ஓபிஎஸ் ஊரில் எதிர்ப்பு!
தேனி: தேனிக்கு சென்றுள்ள அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் பிரச்சார வாகனத்தை ஏராளமான பெண்கள் முற்றுகையிட்டு ஒருங்கிணைந்த அதிமுக கோஷம் எழுப்பியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. காலையில் செங்கோட்டையன் அதிமுக ஒருங்கிணைப்பை வலியுறுத்தி இருந்த நிலையில், மாலையிலேயே அதன் தாக்கம் ஓபிஎஸ் சொந்த ஊரில் எதிரொலித்திருப்பதாக பார்க்கப்படுகிறது.
அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் ஒருங்கிணைந்த அதிமுகவை உருவாக்க வேண்டும் என்று காலையில் பேசி இருந்தார். இதுதொடர்பாக செங்கோட்டையன் பேசுகையில், மக்கள் ஆட்சி மாற்றம் தேவை என்று நினைக்கிறார்கள். அப்படி ஆட்சி மாற்றம் தேவை என்றால், வெளியில் சென்றவர்களை ஒருங்கிணைக்க வேண்டும்.

அப்படி செய்தால் தான், வெற்றி பெற முடியும். நாளை நம் ஆட்சி மலரப் போகிறது என்று யாராலும் சொல்ல முடியாது. அதனால் ஒருங்கிணைப்பு பணிகளை விரைந்து செய்ய வேண்டும். தேர்தல் பணிகள் தொடங்கிவிட்டன. அப்படி செய்யவில்லை என்றால், இந்த மனநிலையில் உள்ள அனைவரும் ஒன்றிணைந்து அந்த பணிகளை மேற்கொள்வோம். இந்த பிரச்சனைக்கு முடிவு வந்தால் தான் சுற்றுப்பயணத்தில் கலந்து கொள்வேன்.
தென் மாவட்டங்களில் என்ன நிலை இருக்கிறது என்பது எல்லோருக்கும் தெரியும். 10 நாட்கள் காலக்கெடு. நாங்கள் 6 பேர் சென்று பேசிய பிறகும் கூட, பொதுவான கருத்துக்களை பேச முன் வரவில்லை என்று தெரிவித்திருந்தார். செங்கோட்டையனின் இந்த கருத்துக்கு ஓபிஎஸ், சசிகலா உள்ளிட்டோர் ஆதரவு தெரிவித்துள்ளனர். இதனால் மீண்டும் அதிமுகவிற்கும் ஒருங்கிணைந்த அதிமுக என்ற கோஷம் எழுந்துள்ளது.
இந்த நிலையில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தேனியில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். கம்பம் நோக்கி எடப்பாடி பழனிசாமி வந்த போது, திடீரென பெண்கள் பலரும் அதிமுக கொடியுடன் எடப்பாடி பழனிசாமியின் பிரச்சார வாகனத்தை முற்றுகையிட்டனர். அவர்களின் கைகளில் ஒன்றிணைந்த அதிமுக என்ற பேனர் வைக்கப்பட்டிருந்தது.
இதனால் சில நிமிடங்கள் கம்பத்தில் பரபரப்பு ஏற்பட்டது. இதன்பின் எடப்பாடி பழனிசாமியின் பாதுகாவலர்கள் உடனடியாக முற்றுகையிட்ட பெண்களை அப்புறப்படுத்தினர். அப்போது சிலர் கீழே விழுந்ததால், அங்கு சூழல் மோசமாகியது. காலையில் செங்கோட்டையன் பேசிய நிலையில், மாலையிலேயே அதிமுகவினரின் மனநிலையில் மாற்றம் ஏற்பட்டிருக்கிறது.
அதிலும் ஓபிஎஸ் சொந்த ஊரிலேயே ஒருங்கிணைந்த அதிமுக கோஷம் எழுந்திருப்பது எடப்பாடி பழனிசாமிக்கு பின்னடைவை உருவாக்கி இருக்கிறது. ஏற்கனவே தேனியில் எடப்பாடி பழனிசாமியின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து ஓபிஎஸ் ஆதரவாளர்கள் போஸ்டர் ஒட்டி இருந்தனர். தற்போது எடப்பாடி பழனிசாமியின் வாகனத்தை பெண்கள் முற்றுகையிட்டிருப்பது பலரின் கவனத்தையும் திருப்பி இருக்கிறது.












Click it and Unblock the Notifications