அடிச்சான் பாரு அப்பாய்மென்ட் ஆடரு... தமிழில் தேர்வெழுதி முதல் முயற்சியிலேயே டிஎஸ்பி
தென்காசி; தமிழ்நாட்டில் பல்வேறு பகுதிகளில் டிஎன்பிஎஸ்சி குரூப் 1 தேர்வெழுதியதில் பெண்கள் சிலர் முதல் முயற்சியிலேயே வெற்றி பெற்றுள்ளனர்.
தென்காசி மாவட்டத்திலிருந்து முன்னாள் பேராசிரியர் ஒருவரும், அதேபோல புதுக்கோட்டை மாவட்டத்திலிருந்து ஒரு சாதாரண குடும்ப பின்னணியிலிருந்து பயின்று வந்த மற்றொரு இளம்பெண்ணும் இந்த தேர்வில் வெற்றியடைந்துள்ளனர்.
சாமானிய மக்கள் அதிகாரத்திற்கு வந்திருப்பது மகிழ்ச்சியளிப்பதாக பல்வேறு அரசியல் தலைவர்கள் இவர்களுக்கு பாராட்டுக்களையும் வாழ்த்துகளையும் தெரிவித்து வருகின்றனர்.
தென்காசி மாவட்டம் கீழக்கடையம் பகுதியை சேர்ந்த மதன்ராஜின் மனைவி ஷீலா என்பவர், பேராசிரியர் பணியில் இருந்து விலகி டி.என்.பி.எஸ்.சி குரூப் ஒன் தேர்வு எழுதினார். முதல் முயற்சியிலேயே தமிழ் வழியில் தேர்வு எழுதி வெற்றி பெற்ற ஷீலா, டிஎஸ்பி ஆக தேர்வாகியுள்ளார். அதேபோல புதுகோட்டை மாவட்டம் கிழக்கு செட்டியாப்பட்டி கிராமத்திலிருந்து தேர்வெழுதிய பாவானியா டிஎஸ்பி ஆக தேர்வாகியுள்ளார். இவர்கள் இருவரின் பாதைகளும் தனித்தனியானதாகும்.
தென்காசியை சேர்ந்த ஷீலா, முதலில் பேராசிரியராக பணியாற்றி வந்துள்ளார். பின்னர் அந்த பணியிலிருந்து விலகி டி.என்.பி.எஸ்.சி தேர்வுக்கு தயாராகி இருக்கிறார். கடின உழைப்பு, இரவு பகல் பாராமல் படிப்பு, படித்ததை மீண்டும் நினைவு கூருதல் என தொடர்ந்து முயன்று வந்திருக்கிறார். இதில் சிறப்பம்சம் என்னவெனில் தமிழ் மொழியில்தான் இந்த தேர்வுக்கு இவர் தயாராகி வந்திருந்தார். இதனையடுத்து தமிழ் மொழியிலேயே தேர்வையும் எழுதியுள்ளார். எழுதியதில் வெற்றியும் பெற்றிருக்கிறார்.
தமிழகத்தில் 1089 அரசு பணி.. நிலஅளவையர், வரைவாளர், உதவி வரைவாளருக்கான தேர்வை அறிவித்த டிஎன்பிஎஸ்சி!
இது குறித்து அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், "இந்த வெற்றியின் மூலம் ஆங்கில மோழியில் தேர்வு எழுதினால்தான் வெற்றிபெற முடியும் என்கிற போலியான நம்பிக்கையை நான் உடைத்திருக்கிறேன். தேர்வில் பெற்ற வெற்றி எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை கொடுத்துள்ளது. காவல்துறை கண்காணிப்பாளராக பொறுப்பேற்ற பின்னர் என்னுடைய பணிகளை நேர்மையாகவும், வெளிப்படையாகவும், பெண்கள் மற்றும் குழந்தைகள் நலனை பாதுகாப்பதில் முன்னுரிமை அளிக்கும் விதமாகவும் நான் சிறப்பாக மேற்கொள்வேன்" என அவர் கூறியுள்ளார். மேலும் இந்த வெற்றிக்கு தன்னுடைய குடும்பம் மிக முக்கிய காரணம் என்றும் அவர் கூறினார்.
தமிழ்மொழியை இரண்டாம் தரமாக கருதி குழந்தைகளை ஆங்கில வழிக் கல்வியில் சேர்க்கும் பெற்றோர்களுக்கு இந்த செய்தி ஒரு பாடமாக இருக்கும் என்று பல சமூக ஆர்வலர்கள் கருதுகின்றனர்.
அடுத்ததாக புதுக்கோட்டை மாவட்டம் கிழக்கு செட்டியாப்பட்டி கிராமத்திலிருந்து தேர்வெழுதிய பவானியா டிஎஸ்பி ஆக தேர்வாகியுள்ளார். இளங்கலை கணித பட்டதாரியான இவர் தமிழ் வழியில் கணிதத்தை பயின்று தேர்வாகியுள்ளார். பவானியாவின் குடும்பப் பின்னணி மிகவும் வறுமை கொண்டதாகும். விவசாய கூலியான தாய் மற்றும் சமையல் வேலைக்கு செல்லும் தந்தை என அன்றாடம் உணவிற்கே நிரந்தர வருமானமற்று உள்ள இந்த குடும்பத்தில் மூன்றாவது பெண் பிள்ளையாக பிறந்து வளர்ந்துள்ளார் பவானியா. இந்த கிராமத்தில் சாலை வசதி கூட இல்லாத நிலையில் பட்டப்படிப்புக்காக வெளியூர் சென்று பயின்று வந்துள்ளார்.
தினமும் சைக்கிளை கொண்டு பேருந்து நிலையத்தில் நிறுத்திவிட்டு பின்னர் பஸ்ஸில் கல்லூரி சென்று படித்து பட்டம் பெற்ற இவர் சமீப நாட்களாக டிஎன்பிஎஸ்சி தேர்வுக்கு தன்னை தயார்படுத்த தொடங்கினார். ஆட்சியர் என்பதே இவரின் ஒரே இலக்கு. ஆனால் படிப்பதற்கு போதிய புத்தகங்கள் கூட இவரிடம் இல்லை. அரசாங்கம் கொடுத்த லேப்டாப்பில் இந்த புத்தகங்களின் பிரதிகளை கொண்டே இவர் படித்து வந்துள்ளார். படிக்கும்போதே விவசாய கூலி உள்ளிட்ட வேலைகளை செய்து வந்துள்ளார். இதற்கிடையில் திருமண ஏற்பாடுகள் வேறு நடந்துள்ளது. அதனையும் கடந்து இவர் படித்து தேர்வில் வெற்றி பெற்று ஒட்டுமொத்த கிராமத்தையே மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளார்.
இவ்வாறு தமிழ் வழியில் தேர்வு எழுதி முதல் முயற்சியிலேயே வெற்றி பெற்ற ஷீலாவுக்கும், சமானிய குடும்ப பின்னணியிலிருந்து தேர்வெழுதி வெற்றி பெற்ற பவானியாவுக்கும் வாழ்த்துக்களும் பாராட்டுகளும் குவிந்து வருகின்றன.