டாஸ்மாக் கடையில் முளைத்த தகராறு..முட்டி மோதிக் கொண்ட வாரிசுகள்! இப்போ ஒரு உயிரே போச்சே.. பரபர பணகுடி
நெல்லை: நெல்லை மாவட்டம் பணகுடி அருகே குடிபோதையில் இளைஞர் கொடூரமாக அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக ஒருவர் போலீசாரிடம் சரணடைந்துள்ளார். பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த கொலை சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
நெல்லை மாவட்டம் பணகுடி அண்ணா நகரை சேர்ந்தவர் வெட்டும் பெருமாள். இவர் நேற்று முன் தினம் பணகுடியில் உள்ள டாஸ்மாக் கடையில் மது அருந்த சென்றார். அப்போது அங்கு கோரிகாலனி பகுதியை சேர்ந்த இசக்கியப்பன் என்பவரும் மது அருந்த சென்றுள்ளார்.

இருவரும் அங்கு மது வாங்கிக் குடித்துள்ளனர். மதுபோதை தலைக்கேறிய நிலையில் இருவருக்குமிடையே தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதில் இசக்கியப்பனை வெட்டும் பெருமாள் தாக்கினார். இதனையடுத்து அங்கிருந்தவர்கள் இருவரையும் சமாதானப்படுத்தி அனுப்பி வைத்துள்ளனர்.
இந்நிலையில் வீட்டுக்குச் சென்ற இசக்கியப்பன், வெட்டும்பெருமாள் தன்னை தாக்கியது குறித்து மகன் சங்கரிடம் கூறியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த இசக்கியப்பனின் மகன் சங்கர் தனது தந்தையை தாக்கிய வெட்டும்பெருமாள் வீட்டிற்கு வீட்டிற்கு சென்று அவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். ஏற்கனவே வீட்டில் இருந்த வெட்டும் பெருமாளின் மகன் ராஜ்குமார், சண்டைக்கு வந்த சங்கரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
தொடர்ந்து இரு தரப்புக்கும் வாக்குவாதம் முற்றிய நிலையில் இருவருக்கிடையே கைகலப்பு ஏற்பட்டது. தொடர்ந்து அருகில் உள்ளவர்கள் சமாதானம் பேசியதால் இருவரும் கலைந்து சென்றனர். இந்நிலையில் நேற்று பணகுடி அருகே சாத்தான்குளத்தில் ராஜ்குமார் பலத்த காயங்களுடன் இறந்த நிலையில் கிடைத்ததாக பணகுடி போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று போலீசார் உடலை மீட்டு உடற்கூராய்வுக்காக அனுப்பி வைத்தனர். மேலும் கொலை குறித்து வழக்கு பதிவு செய்து கொலையாளியை தேடும் பணியில் ஈடுபட்டனர். இந்நிலையில் நேற்று மாலை சங்கர் போலீசாரிடம் சரணடைந்தார். அவரது வாக்கு மூலத்தில் தனது தந்தையை தாக்கியதோடு தகறாறிலும் ஈடுபட்டதால் நேற்று பணகுடி அருகே சாத்தான்குளத்தில் ராஜ்குமார் தனியாக வந்த போது அவரை கம்பால் பலமாக தாக்கி கொலை செய்ததாக ஒப்புக் கொண்டதாகக் கூறப்படுகிறது. அவரது வாக்குமூல ஒப்புதலை அடுத்து சங்கரை போலீசார் கைது செய்தனர். மேலும் விசாரணை நடந்து வருகிறது.
இதற்கிடையே இறந்த ராஜ்குமாரின் உடல் கூராய்வு செய்வதற்கு நாகர்கோவில் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டது. அதில் தலையில் ஏற்பட்ட பலத்த காயத்தால் அவர் உயிரிழந்ததாக உடற்கூராய்வு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இதனையடுத்து அதன் அடிப்படையில், சங்கர் மீது கொலை உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழங்க்கு பதிவு செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். டாஸ்மாக் தகராறு கொலையில் முடிந்த இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications