நெல்லையில் நயினார் நாகேந்திரனுக்கு அல்வா சான்ஸ்.. அதிமுக, காங்கிரஸ் செய்த தப்பு.. சின்னம் காக்கும்?
திருநெல்வேலி: நெல்லை (திருநெல்வேலி) லோக்சபா தொகுதியில் அதிமுக வேட்பாளராக ஜான்சி ராணி, காங்கிரஸ் வேட்பாளராக ராபர்ட் புரூஸ் (Robert Bruce) என மக்களுக்கு அதிகம் அறிமுகம் இல்லாதவர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். ஆனால் பாஜகவோ முன்னாள் அமைச்சரும் மக்கள் நன்கு அறிந்தவருமான நயினார் நாகேந்திரனை வேட்பாளராக களமிறக்கியிருப்பதால் களம் அவருக்கு சாதகமாக அமையக் கூடும் எனவும் கூறப்படுகிறது.
அதிமுக ஜான்சி ராணி: லோக்சபா தேர்தலில் அதிமுக, காங்கிரஸ், பாஜக ஆகிய கட்சிகளுமே திருநெல்வேலி தொகுதி வேட்பாளர்களை அறிவிப்பதில் ரொம்பவே தடுமாறிப் போய்விட்டன. அதிமுக வேட்பாளராக முதலில் சிம்லா முத்துச் சோழன் அறிவிக்கப்பட்டார். திமுகவின் மூத்த தலைவர்களில் ஒருவரான மறைந்த சற்குண பாண்டியனின் மருமகள் சிம்லா முத்துச் சோழன். சென்னை ஆர்கே நகரில் ஜெயலலிதாவை எதிர்த்து திமுக வேட்பாளராக போட்டியிட்டார்.
கடந்த சில நாட்களுக்கு முன்னர்தான் திமுகவில் இருந்து விலகி அதிமுகவில் இணைந்தார். உடனடியாக அதிமுக வேட்பாளராகவும் அறிவிக்கப்பட்டார். ஆனால் அதிமுகவில் இது சலசலப்பை ஏற்படுத்தியது. இதனால் அதிமுகவின் புதிய வேட்பாளராக ஜான்சி ராணி அறிவிக்கப்பட்டார்.

பாஜக நயினார் நாகேந்திரன்: பாஜகவும் திருநெல்வேலி வேட்பாளர் அறிவிப்பில் சற்று தடுமாறியது. திருநெல்வேலி லோக்சபா தொகுதியை குறிவைத்து தொடர்ந்து பணியாற்றியவர் நயினார் நாகேந்திரன். ஆனால் பாஜக வெளியிட்ட அறிவிப்பில், தூத்துக்குடியில் நயினார் நாகேந்திரன் போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டிருந்த்து. இத்தனைக்கும் தூத்துக்குடி தொகுதியை கூட்டணி கட்சியான தமிழ் மாநில காங்கிரஸ் கட்சிக்கு பாஜக ஒதுக்கியிருந்தது. இதனால் எழுந்த சலசலப்பு சிறிது நேரத்திலேயே முடிவுக்கு வரும் வரையில் திருநெல்வேலி தொகுதி வேட்பாளராக நயினார் நாகேந்திரன் அறிவிக்கப்பட்டார்.
காங்கிரஸ் ராபர்ட் புரூஸ்: காங்கிரஸ் கட்சியோ நெல்லை தொகுதி வேட்பாளரை அறிவிப்பதற்கு படாதபாடு பட்டுவிட்டது. திருநெல்வேலி தொகுதி காங்கிரஸ் வேட்பாளராகப் போட்டியிட நெல்லை, கன்னியாகுமரி காங்கிரஸ் தலைவர்கள், எம்.எல்.ஏக்கள் போட்டி போட்டனர். மாநில சிறுபான்மை ஆணையத்தின் தலைவர் பீட்டர் அல்போன்ஸும் இந்த ரேஸில் இடம் பிடித்திருந்தார்.
ஆனால் வெளி மாவட்டத்தைச் சேர்ந்த ஒருவரை வேட்பாளராக அறிவிக்க கூடாது என வேட்பாளர் அறிவிப்புக்கு முன்னரே காங்கிரஸ் கட்சியினர் போராட்டம் நடத்திய கூத்தும் திருநெல்வேலியில் அரங்கேறியது. தற்போது முதல்வர் ஸ்டாலின் பிரசாரம் செய்யும் நிலையில் ஒருவழியாக வழக்கறிஞர் ராபர்ட் புரூஸை வேட்பாளராக அறிவித்துள்ளது காங்கிரஸ்.
நெல்லை தேர்தல்களில் நயினார்: தற்போதைய நிலையில் அதிமுக மற்றும் காங்கிரஸ் வேட்பாளர்கள் இருவருமே மக்களுக்கு அதிகம் அறிமுகம் இல்லாதவர்கள். ஆனால் பாஜகவின் நயினார் நாகேந்திரன் (நைனார் நாகேந்திரன்) நன்கு அறிமுகமானவர். 2001 சட்டசபை தேர்தலில் நெல்லை தொகுதி அதிமுக வேட்பாளராகப் போட்டியிட்டு வென்றவர்.
2006-ல் அதிமுக வேட்பாளராகப் போட்டியிட்டு தோல்வியைத் தழுவியவர். 2011 சட்டசபை தேர்தலில் அதிமுக வேட்பாளராக 3-வது முறையாக போட்டியிட்டு அமோக வெற்றியைப் பெற்றார் நயினார் நாகேந்திரன். 2016 சட்டசபை தேர்தலில் அதிமுக வேட்பாளராக 4-வது முறையாக போட்டியிட்டு தோல்வியைத் தழுவினார். பின்னர் அதிமுகவில் இருந்து விலகி பாஜகவில் இணைந்தார் நயினார் நாகேந்திரன்.
தனித்தே களம் காணும் நயினார்: 2021-ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் பாஜக வேட்பாளராக திருநெல்வேலி தொகுதியில் நயினார் நாகேந்திரன் போட்டியிட்டு வென்றார். 2021 சட்டசபை தேர்தலில் பாஜகவின் நயினார் நாகேந்திரன் 92,282 (47.20%) வாக்குகளைப் பெற்று வென்றார். திமுகவின் ஏ.எல்.எஸ்.லட்சுமணன் 69,175 (35.38%) வாக்குகளைப் பெற்று தோல்வி அடைந்தார். சட்டசபை தேர்தல்களில் நெல்லையில் போட்டியிட்ட நயினார் நாகேந்திரன் சுமார் 40% முதல் 50% வாக்குகளைப் பெற்றிருந்தார்.
அதிமுக கூட்டணியில் பாஜக வேட்பாளராகப் போட்டியிட்டும் 2021-ல் இதே அளவு வாக்குகளைப் பெற்றார். ஆனால் இம்முறை அதிமுகவுடனான கூட்டணி இல்லாமல் பாஜக தனித்தே களம் காண்கிறது. அதிகம் அறிமுகம் இல்லாத காங்கிரஸ், அதிமுக வேட்பாளர்களுடன் நன்கு அறிமுகமான பாஜகவின் நயினார் நாகேந்திரன் களம் காண்பது அவருக்குதான் களம் சாதகமானதாக அமையும் என்கின்ற நெல்லை வட்டாரங்கள்.
அதேநேரம் தாமரை சின்னமா இரட்டை இலை சின்னமா, தாமரை சின்னமா கை சின்னமா என்று வரும்போது நெல்லை மக்கள் இதுவரை தாமரையை தள்ளியே வைத்துதான் பழகியுள்ளனர். எனவே வேட்பாளர்களைவிட சின்னம்தான் காக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பில் உள்ளன அதிமுகவும், காங்கிரசும்.












Click it and Unblock the Notifications