திமுக ஆட்சியில் வழங்கப்பட்ட கனிம வள உரிமங்கள் ரத்து? முதல்வர் விஜய்க்கு பறந்த கோரிக்கை
தென்காசி: கடந்த ஆறு மாதங்களாக ஒவ்வொரு மாவட்டங்களிலும் குவாரி மற்றும் கிரஷர்களின் எண்ணிக்கை வெகுவாக உயர்ந்துள்ளது. திராவிட முன்னேற்றக் கழக அரசு பதவி முடியும் சமயம் பல கோடிகளை பெற்றுக் கொண்டு புதிதாக கனிம வளங்களை சுரண்ட கிரஷர்கள் மற்றும் கோரிகளுக்கு அனுமதி அளித்துள்ளார்கள்.. எனவே கடந்த ஆட்சியில் வழங்கப்பட்ட கனிம வள உரிமங்களை ரத்து செய்யுங்கள் என்று முதல்வர் விஜய்க்கு முன்னாள் எம்எல்ஏ ரவி அருணன் கோரிக்கை வைத்துள்ளார்.
தென்காசி, தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களில் இருந்து கேரளாவிற்கு ஏராளமான கனிம வளங்கள் கேரளாவிற்கு கொண்டு செல்லப்படுகிறது. இதில் பல லாரிகள் சட்டப்படியும், சில லாரிகள் சட்டவிரோதமாகவும் செல்வதாக குற்றச்சாட்டுகள் உள்ளது. திருநெல்வேலி ஜில்லா முழுக்க கனிம வள பிரச்சனை பெரிய அளவில் விஸ்வரூபம் எடுத்துள்ளது.

இதனிடையே இயற்கை வள பாதுகாப்பு சங்கதின் தலைவரும், தென்காசி மாவட்டம் அம்பாசமுத்திரம் முன்னாள் எம்எல்ஏவுமான ரவி அருணன், முதல்வருக்கு எக்ஸ்தளத்தில் வைத்துள்ள கோரிக்கைகையில் கூறியுள்ளதாவது: "கடந்த ஆறு மாதங்களாக ஒவ்வொரு மாவட்டங்களிலும் குவாரி மற்றும் கிரஷர்களின் எண்ணிக்கை வெகுவாக உயர்ந்துள்ளது. திராவிட முன்னேற்றக் கழக அரசு பதவி முடியும் சமயம் பல கோடிகளை பெற்றுக் கொண்டு புதிதாக கனிம வளங்களை சுரண்ட கிரஷர்கள் மற்றும் கோரிகளுக்கு அனுமதி அளித்துள்ளார்கள். இதனால் வெளிமாநிலங்களுக்கு செல்லும் கனிமவள வாகனங்கள் எண்ணிக்கை வெகுவாக உயர்ந்துள்ளது.
எதிர்கால சந்ததியர்க்கு கனிம வளங்களே இல்லை என்ற நிலை உருவாகும் நிலைமை வெகு தொலைவில் இல்லை. ஆகவே புதிதாக பொறுப்பேற்றிற்கும் இந்த அரசு கனிம வள கொள்ளையை தடுக்க போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இயற்கை வள பாதுகாப்பு சங்கத்தின் சார்பாக கேட்டுக் கொள்கின்றோம். வேறு எந்த மாநிலத்திலும் கனிம வளங்களை இவ்வாறு எடுத்துச் செல்வதற்கு தடை விதித்துள்ளது.
கேரளாவில் இருந்து ஒரு பிடி மண்ணையோ அல்லது தண்ணீரையோ வேறு மாநிலத்திற்கு கொண்டு செல்ல நிச்சயமாக அனுமதிக்க மாட்டார்கள். அவர்கள் கனிம வளங்களை காப்பதில் அவர்கள் கண்ணும் கருத்துமாக செயல்படுகின்றார்கள். ஆனால் கடந்த கால அரசு தமிழ்நாட்டின் இயற்கையை தொடர்ந்து அளித்து வந்தது.
ஆகவே தமிழகத்தில் புதிதாக பொறுப்பேற்றுள்ள அரசு உடனே கடந்த கால அரசு வழங்கியுள்ள அனைத்து புதிய உரிமங்களை ரத்து செய்யவும் நமது கனிம வளங்கள் நமது தேவைக்கு மட்டுமே என்ற அடிப்படையில் செயல்பட நடவடிக்கை எடுக்கவும் கேட்டுக்கொள்கின்றோம். கடந்த ஆட்சியில் பல குவாரிகளில் ஆழமாக தோண்டி விவசாயிகள் பாதிக்கும் வகையில் நிலத்தடி நீர் வற்றி, கிரஷர்களில் பரவும் தூசியினால் விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். அதையெல்லாம் போக்குவதற்கு உடனடி நடவடிக்கை எடுக்குமாறு புதிய அரசை கேட்டுக் கொள்கின்றோம்" இவ்வாறு முன்னாள் எம்எல்ஏ ரவி அருணன் கூறியுள்ளார்.














Click it and Unblock the Notifications