கட்சி தொடங்கிய உடனே.. சிலர் நான்தான் முதல்வர் என்கிறார்கள்.. மறைமுகமாக விமர்சித்து பேசிய ஸ்டாலின்
நெல்லை: மாவட்டம் தோறும் ஆய்வுப் பணிகளை மேற்கொண்டு வரும் முதல்வர் ஸ்டாலின் இப்போது நெல்லையில் ஆய்வுப் பணிகளை மேற்கொண்டு வருகிறார். வியாழக்கிழமை அங்கு நடைபெற்ற நிகழ்ச்சியில், பல்வேறு மாற்றுக் கட்சிகளைச் சேர்ந்தவர்கள் திமுகவில் இணைந்தனர். அந்த நிகழ்ச்சியில் பேசிய முதல்வர் ஸ்டாலின், திமுக மெல்ல வளர்ந்தே ஆட்சியைப் பிடித்ததாகவும் ஆனால் இன்று சிலர் கட்சி ஆரம்பித்தவுடன் முதல்வராவோம் எனப் பேசுவதாகவும் கடுமையாக விமர்சித்துப் பேசினார்.
முதல்வர் ஸ்டாலின் தொடர்ச்சியாக மாவட்டந்தோறும் கள ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறார். அதன்படி அவர் வியாழக்கிழமை நெல்லை மாவட்டத்தில் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார்.

ஸ்டாலின்:
சென்னையில் இருந்து தூத்துக்குடி சென்ற அவருக்கு, அமைச்சர் கே.என்.நேரு, நெல்லை கிழக்கு மாவட்ட திமுக செயலாளர் ஆவுடையப்பன் உள்ளிட்டோர் உற்சாக வரவேற்பு அளித்தனர். நெல்லையில் டாடா குழும நிறுவனத்தின் சூரிய மின்கல உற்பத்தி ஆலை உள்ளிட்டவற்றை முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார். மேலும், பல புதிய திட்டங்களுக்கும் அவர் அடிக்கல் நாட்டினார்.

அதைத் தொடர்ந்து கட்சி ரீதியான நிகழ்ச்சிகளிலும் அவர் பங்கேற்றார். மாற்றுக் கட்சியினர் திமுகவில் இணையும் நிகழ்ச்சி நடந்த சூழலில், அதில் பல்வேறு கட்சிகளில் இருந்தும் சுமார் 500க்கும் மேற்பட்டோர் திமுகவில் இணைந்தனர்.
திமுகவின் கொள்கை:
அந்த நிகழ்ச்சியில் முதல்வர் ஸ்டாலின் மேலும் பேசுகையில், "இந்த நிகழ்ச்சியில் பல்வேறு கட்சிகளில் இருந்தும் திமுகவில் இணைந்துள்ளனர். நீங்கள் திமுகவில் இணைந்தது மகிழ்ச்சி. ஆட்சியில் இருந்தாலும் சரி, இல்லையென்றாலும் சரி திமுக மட்டுமே மக்களுக்காக பணியாற்ற வந்துள்ளது. திமுகவை தொடங்கிய போது ஏழை எளிய, பிற்படுத்தப்பட்டோரின் நலன்களுக்காகப் போராடுவோம் என்றனர். அதே கொள்கையில் தான் இப்போது வரை பயணித்து வருகிறது திமுக!
கட்சி தொடங்கியதும் முதல்வரா:
திமுக தொடங்கப்பட்ட போது, நேரடியாகத் தேர்தல் அரசியலில் ஈடுபடவில்லை. தேர்தலில் போட்டியிடலாமா என்பதையே தொண்டர்களிடம் வாக்கெடுப்பு நடத்தித் தான் முடிவு செய்யப்பட்டது. ஆனால், இப்போது சிலர் கட்சி தொடங்கியதுமே ஆட்சிக்கு வந்துவிடுவோம் என்றும் நான்தான் முதல்வர் என்றும் பேசி வருகிறார்கள். இவை மக்களிடம் நிச்சயம் எடுபடாது. யார் எப்படிப்பட்டவர்கள்.. உண்மையாகவே யார் மக்களுக்காகப் போராடினர் என்பது மக்களுக்குத் தெரியும். எனவே, அது குறித்து நாம் கவலைப்படத் தேவையில்லை.
1957ம் ஆண்டில் திமுக முதல்முறையாகப் போட்டியிட்ட போது 15 பேர் எம்எல்ஏக்களாக தேர்வாகினர். அதன் பிறகு 50 பேர் வென்றனர். அப்படியே மெல்ல வளர்ந்து 1967ம் ஆண்டு திமுக ஆட்சியைப் பிடித்தது. 2026ம் ஆண்டு நடக்கும் தேர்தலிலும் நிச்சயம் திமுக தான் வென்று ஏழாவது முறையாக ஆட்சியைப் பிடிக்கும். இதை மக்கள் முடிவு செய்துவிட்டனர். தொண்டர்கள் இதற்காக இப்போதே கட்சி பணிகளைத் தொடங்க வேண்டும்" என்றார்.












Click it and Unblock the Notifications