திமுக உட்கட்சித் தேர்தல்! நெல்லையில் அண்ணன் அதிமுக!தம்பி திமுக! பரபரக்கும் மாவட்டச் செயலாளர் தேர்தல்
நெல்லை: நெல்லையில் அண்ணன் அதிமுக மாவட்டச் செயலாளராக உள்ள நிலையில் தம்பி திமுக மாவட்டச் செயலாளர் பதவிக்கு காய் நகர்த்தி வருகிறார்.
திமுகவில் உட்கட்சித் தேர்தல் மெல்ல சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளதால் நாள்தோறும் அது தொடர்பான பஞ்சாயத்துகள் அறிவாயலத்தில் நடைபெற்று வருகின்றன.
அந்த வகையில் நெல்லை மத்திய மாவட்டச் செயலாளர் பதவிக்கு போட்டி கடுமையாக உள்ளதால் கட்சி மேலிடத்திற்கு அது தீராத தலைவலியை கொடுத்துள்ளது.

திமுக உட்கட்சித் தேர்தல்
திமுகவில் உட்கட்சித் தேர்தல் விறுவிறுப்படைந்துள்ளது. மாவட்டம் தோறும் கட்சி மேலிட நிர்வாகிகள் முகாமிட்டு உட்கட்சி தேர்தலை நடத்தி வருகின்றனர். அந்த வகையில் நெல்லை மத்திய மாவட்டச் செயலாளர் பதவிக்கு முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் மாலைராஜாவும் சிட்டிங் எம்.எல்.ஏ. அப்துல் வஹாப்பும் கடுமையாக மோதி வருகின்றனர். இதில் மாலைராஜா மு.க.அழகிரியின் ஆதரவாளராக ஒரு காலத்தில் தன்னை அடையாளப்படுத்திக் கொண்டு பிறகு ஸ்டாலின் பக்கம் சாய்ந்தார். 2006-2011 காலகட்டத்தில் சட்டமன்ற உறுப்பினராக இருந்தபோது மனோன்மணி சுந்தரனார் பல்கலைக்கழக துணைவேந்தரை தாக்கிய புகாரில் சிக்கி அப்போதைய முதலமைச்சர் கருணாநிதியின் கோபத்திற்கு ஆளானார்.

அப்துல் வஹாப்
அப்துல் வஹாப்பை பொறுத்தவரை ஆரம்பம் காலம் தொட்டு அதாவது மு.க.அழகிரி தென் மண்டல அமைப்புச்செயலாளராக இருந்த காலம் தொட்டு ஸ்டாலினின் தீவிர ஆதரவாளராக அறியப்படுபவவர். இதுமட்டுமல்லாமல் உதயநிதி ஸ்டாலினின் அபிமானியாகவும் இப்போது தன்னை காட்டிக்கொள்கிறார். இப்படிபட்ட இருவருக்கு மத்தியில் தான் நெல்லை மத்திய மாவட்டச் செயலாளர் பதவியை பிடிக்க போட்டி உருவாகியுள்ளது. நெல்லை எனக்கு எப்போதுமே தொல்லை என அங்கு நடக்கும் களேபரங்களை மையமாக வைத்து கருணாநிதி வேடிக்கையாகவும் வேதனையாகவும் ஒரு கட்டத்தில் கூறியது குறிப்பிடத்தக்கது.

அதிமுகவில் அண்ணன்
திமுகவில் மத்திய மாவட்டச் செயலாளர் பதவிக்கு அப்துல் வஹாப் எம்.எல்.ஏ.வை எதிர்த்து போட்டியிட காய் நகர்த்தி வரும் மாலைராஜாவின் உடன் பிறந்த சகோதரர் தச்சை கணேஷ்ராஜா அதிமுகவில் மாவட்டச் செயலாளராக உள்ளார். கடந்த நான்காண்டு காலம் எஸ்.பி.வேலுமணியின் தீவிர ஆதரவாளராக இருந்த கணேஷராஜா, நெல்லை ஸ்மார்ட் சிட்டி பணிகளில் தனது கண் அசைவின்றி ஒரு பணிகூட நடக்கவிடாமல் பார்த்துக்கொண்டவர் எனக் கூறப்படுகிறது. இப்படிப்பட்ட சூழலில் இப்போது தனது உடன் பிறந்த தம்பியான மாலைராஜாவை திமுகவில் மாவட்டச் செயலாளராக்க திரைமறைவு பணிகளை செய்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

பொங்கும் எதிர்கோஷ்டி
இதனிடையே மாலைராஜாவுக்கு எதிராக அப்துல் வஹாப் தரப்பினர் அண்ணா அறிவாலயத்துக்கு புகார் மேல் புகார் அனுப்பி வருகின்றனர். அதில் மாலைராஜாவின் கடந்த கால சைலண்ட் மோடு அரசியல், கருணாநிதி அவர் மீது பட்ட கோபம், அதிமுகவில் அண்ணன் மாவட்டச் செயலாளரால இருப்பது என பல விவகாரங்களை விலாவாரியாக விளக்கியுள்ளனர். இதனால் நெல்லையில் திமுக உட்கட்சித் தேர்தல் களம் பரபரத்துக் காணப்படுகிறது.












Click it and Unblock the Notifications