ஜாதி மதம்னு யாரும் நுழைந்து விட முடியாது! காரணம் ‘அவர்கள்’ தான்! உடைத்துப் பேசிய கனிமொழி எம்பி!
நெல்லை : இன்று தமிழகத்தில் ஜாதி மதம் என்ற பெயரால் யாரும் நுழைந்து விட முடியாத நிலையை உருவாக்கியவர்கள் திராவிட இயக்க எழுத்தாளர்கள் தான் என நெல்லை பாளையங்கோட்டையில் நடந்த பொருநை இலக்கியத் திருவிழாவில் கலந்து கொண்ட திமுகவின் துணைப் பொதுச் செயலாளரும் தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினருமான கனிமொழி தெரிவித்துள்ளார்.
தமிழ்மொழியின் இலக்கிய மரபுகளை கொண்டாடும் வகையில் தமிழக அரசு சார்பில் நெல்லை பாளையங்கோட்டையில் பொருநை இலக்கியத் திருவிழா இரண்டு நாட்கள் நடைபெறுகிறது. இந்த விழாவை தமிழக முதல்வர் முக ஸ்டாலின் ஒலி ஒளி காட்சி வாயிலாக தொடங்கி வைத்தார்.
இதனைத் தொடர்ந்து பாளையங்கோட்டை நேருஜி கலையரங்கம், நூற்றாண்டு மண்டபம், மேலக்கோட்டை வாசல், பிபிஎல் திருமண மண்டபம், வ உ சி மைதானம் ஆகிய ஐந்து இடங்களில் தமிழ் மொழியின் பெருமையை பறைசாற்றும் வகையில் கருத்தரங்கம் , கவியரங்கம் ஓலைச்சுவடிகள் கண்காட்சி மாணவ மாணவிகளுக்கு போட்டிகள் என நடந்து வருகிறது.
ஓபிஎஸ் கதை முடிஞ்சுது.. இவரு மட்டும் ஜெயிப்பாராம்; மத்தவங்க வெற்றியை கெடுப்பாராம்! சீறிய ஜெயக்குமார்
பொருநை விழா
இந்நிலையில் மாலையில் நடந்த நிகழ்ச்சியில் திமுக துணை பொது செயலாளரும், தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினருமான கனிமொழி கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார், அப்போது அவர் பேசுகையில் தமிழகத்தில் திமுக ஆட்சி பொறுப்பேற்ற பின்பு இலக்கிய வழி புத்தகத் திருவிழா மாவட்டம்தோறும் நடத்தப்பட்டு வருகிறது. முன்னதாக சென்னை மதுரை உள்ளிட்ட பெரு நகரங்களில் மட்டுமே புத்தக திருவிழா நடந்து வந்தது. இன்று அனைத்து இடங்களிலும் நடப்பதால், புத்தகங்கள் பெண்கள் மாணவர்கள் , மக்கள் என அனைத்து தரப்பினரின் கைகளிலும் எட்டு விதத்தில் கொண்டு சேர்க்கப்பட்டுள்ளது.
கனிமொழி
இதன் அடுத்த நிகழ்வாக தற்போது நடத்தப்படும் பொருநை இலக்கியத் திருவிழா மிக முக்கியமான ஒன்றாகும். தமிழகத்தில் இலக்கியங்களையும் இலக்கியவாதிகளையும் கொண்டாடப்படக்கூடிய நிலை இல்லாதிருந்தது அதனை மாற்றும் விழாவாக பொருநை இலக்கிய திருவிழா அமைந்துள்ளது. பேரறிஞர் அண்ணாவும் முத்தமிழ் அறிஞர் கலைஞரும் தங்கள் இறுதி மூச்சு வரை புத்தகங்களை வாசித்தனர். புத்தகங்கள் தரும் உலகம் என்பது நம்முள் பல கேள்விகளை பல கருத்துக்களை முன் வைக்கும். புத்தகம் படித்தால் சிந்தனை விரிவாகும், புத்தகத்தை படித்து படித்து சிந்திக்கும் தலைவன் தான் நம்மை அழைத்துச் செல்லும் தலைவனாக இருக்க முடியும்,
திராவிட இயக்க தலைவர்கள்
அத்தகைய தலைவர்கள் தான் திராவிட இயக்க தலைவர்கள். திராவிட இயக்கம் என்பது தேச விடுதலைக்காக மட்டுமல்ல மக்கள் விடுதலைக்காகவும் பாடுபடும் இயக்கமாகும். விடுதலை குறித்து தைரியமாக பேசிய இயக்கமும் திராவிட இயக்கம்தான். சமுதாயத்தில் நமது கலாச்சாரம் நமது மொழி சுயமரியாதை ஆகியவற்றை மீட்டெடுக்க வேண்டும் என்று திராவிட இயக்கத் தலைவர்கள் தான் தொடர்ந்து எழுதி வருகின்றனர்.
ஜாதி மதம்
இன்று தமிழகத்தில் ஜாதி மதம் என்ற பெயரால் யாரும் நுழைய முடியாத நிலை உருவாகியுள்ளது என்றால் அதற்கு திராவிட இயக்க எழுத்தாளர்கள் தான் காரணம். இன்று பல இடங்களிலும் எல்லோரும் சமம், என்று பேசி வருபவர்கள் நம்மை சமமாக நடத்துவதில்லை, மொழியை சமமாக நடத்துவதில்லை கீழடி ஆய்வுக்கு போதிய நிதி ஒதுக்கவில்லை ஆனால் எங்கு சென்றாலும் தமிழ் தமிழ் என்று பேசுகிறார்கள். ஆனால் தமிழுக்கான உரிய அங்கீகாரத்தை தரவில்லை, நம் இலக்கியம், மொழி , சுயமரியாதை ஆகியவற்றை காப்பாற்றி நம் பெருமையை நாம் புரிந்து கொண்டு அதனை அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்ல வேண்டும் என தெரிவித்தார்.
மக்கள் கூட்டம்
முன்னதாக கனிமொழி எம்.பி பாளையங்கோட்டை மேல கோட்டைவாசல் சென்று அங்கு மகளிர் சுய உதவிக்குழு விற்பனை அங்காடியை திறந்து வைத்து மேலாக கோட்டை வாசலை பார்வையிட்டார். இந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் விஷ்ணு , பொது நூலகத்துறை இயக்குனர் இளம்பகவத், மாநகராட்சி ஆணையர் சிவகிருஷ்ணமூர்த்தி, எழுத்தாளர்கள் கலாபிரியா, பவா செல்லத்துரை, மற்றும் இலக்கிய வாதிகள், மாணவ மாணவிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.