இரண்டு கால்களும் சங்கிலியால் கட்டப்பட்ட கொடூரம்... நடக்க சிரமப்படும் யானை... கொடுமையை பாருங்க!
நெல்லை: மசினகுடி யானைக்கு தீ வைத்த கொடுமையின் ரணமே இன்னும் ஆறாத நிலையில், மற்றும் ஒரு யானை கொடுமைப்படுத்தப்படும் வீடியோ வைரலாக பரவி வருகிறது.
நெல்லை மாவட்டத்தில் ஒரு யானையின் இரண்டு கால்களும் சங்கிலியால் இறுகக் கட்டப்பட்டுள்ளதால் அந்த யானை நடக்க சிரமப்படுவதுபோல் அந்த வீடியோ அமைந்துள்ளது.
யானை போன்ற விலங்குகள் மீது இதுபோல் தொடர்ந்து கொடுமை நடந்து வருவது பல்வேறு தரப்பினரையும் கவலையில் ஆழ்த்தியுள்ளது.
காயம்பட்ட யானை
நீலகிரி மாவட்டம், முதுமலை புலிகள் காப்பகம் வெளிமண்டலப் வனப்பகுதியான பொக்காபுரம், மசினகுடி, சிங்காரா பகுதிகளில் ஒற்றை ஆண் காட்டு யானை ஒன்று முதுகில் ஏற்பட்ட காயத்துடன் சுற்றித் திரிந்தது. வனத்துறையினர் அந்த யானைக்கு சிகிச்சை அளித்து பின்னர் விடுவித்தனர். தொடர்ந்து அந்த யானையைக் கண்காணித்துவந்தனர்.
பரிதாபமாக இறந்தது
சில நாட்களுக்கு முன்பு மசினகுடி பகுதியில் அதே யானை இடது காது சிதைக்கப்பட்ட நிலையில், ரத்தம் சொட்டச் சொட்ட பரிதாபமாக உலா வந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த வனத்துறையினர், யானையைப் பிடித்து லாரியில் ஏற்றி முதுமலை தெப்பக்காடு வளர்ப்பு முகாமுக்குக் சிகிச்சை அளிக்க கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே யானை பரிதாபமாக உயிரிழந்தது.
தீ வைத்த கொடூரர்கள்
மர்ம நபர்கள் தீ வைத்ததால்தான் அந்த யானை இறந்தது தெரியவந்தது. இது தொடர்பான வீடியோ சமூக வலைதளத்தில் வைரலானது. அந்த வீடியோவில், மசினகுடி பகுதியிலுள்ள தங்கும் விடுதி வளாகத்தில் புகுந்த அந்த யானையை 3 பேர் விரட்ட முயல்கிறார்கள். கல் மனம் கொண்ட அந்த கயவர்கள் தீயைக் கொளுத்தி, அதன் மூலம் யானையை விரட்டுகிறார்கள். பின்னர் எரியும் பந்தத்தை யானை மீது வீசுகின்றனர். யானையின் தலையில் விழுந்த தீப்பந்தம் கொழுந்துவிட்டு எரிகிறது. அந்த யானை வலி தாங்க முடியாமல் அலறியடித்து, பிளிறியவாறே ஓடுகிறது. இந்த வீடியோ சமூக வலைதளத்தில் பரவி காண்போரின் கண்களை குளமாக்கியது. இந்த நிலையில் யானைக்குத் தீ வைத்த இருவரை போலீசார் கைது செய்தனர்.
இன்னும் ஒரு கொடுமை
இந்த சம்பவத்தை தொடர்ந்து பொங்கி எழுந்த பலரும் வனவிலங்குகளை கொடுமைப்படுத்தும் நபர்கள் மீது கடுமையான தண்டனை வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்து வருகின்றனர். இந்த நிலையில் மசினகுடி யானைக்கு நடந்த கொடுமையின் ரணமே இன்னும் ஆறாத நிலையில், மற்றொரு யானை கொடுமைப்படுத்தப்படும் வீடியோ வைரலாக பரவி வருகிறது.
கால்கள் சங்கிலியால் கட்டப்பட்டுள்ளன
தமிழகத்தின் நெல்லை மாவட்டத்தில் எடுக்கப்பட்டுள்ள அந்த வீடியோவில், சாலையில் நடந்து வரும் யானையின் முன்னங்கால்கள் இரன்டும் ஒன்றோடு, ஒன்றாக சேர்த்து சங்கிலியால் கட்டப்பட்டுள்ளது. சங்கிலியால் இறுகக் கட்டப்பட்டு உள்ளதால் அந்த யானை மிகவும் சிரமத்துடன் தத்தி, தத்தி நடந்து செல்கிறது. அந்த யானையின் பாகன் மற்றும் பிற உதவியாளர்கள் யானையின் பின்னால் நடந்து வருவதுபோல் அந்த வீடியோ காட்சியில் உள்ளது.
கவலையில் ஆழ்த்தியுள்ளது
இந்த வீடியோவை பார்த்த பலரும் அதிர்ச்சி அடைந்தனர். இது குறித்து மாவட்ட முதன்மை வனத்துறை முதன்மை அதிகாரிக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து கருத்து தெரிவித்த வல்லுநர்கள் இந்த செயலால் யானையின் உள் உறுப்புகளுக்கு பாதிப்பு ஏற்பட்டு, அந்த யானைக்கு கடுமையான மன உளைச்சல் ஏற்பட்டு இருக்கும் என்றனர். யானை போன்ற விலங்குகள் மீது இதுபோல் தொடர்ந்து கொடுமை நடந்து வருவது பல்வேறு தரப்பினரையும் கவலையில் ஆழ்த்தியுள்ளது.