5,000 பேருக்கு பிரியாணி! 3,000 பேருக்கு சேலை! அய்யாதுரைபாண்டியன் பற்றி டெல்லிக்கு பறந்த நோட்!
தென்காசி: திமுக மற்றும் அமமுக முன்னாள் பிரமுகரும் தொழிலதிபருமான அய்யாதுரை பாண்டியன் தனது பிறந்தநாளை திருவிழா போல் கொண்டாடி தீர்த்த நிலையில், அது தொடர்பான குறிப்பு டெல்லிக்கு அனுப்பப்பட்டுள்ளது.
ஏற்கனவே இவரை அதிமுகவுக்கு வருமாறு எடப்பாடி பழனிசாமி தரப்பில் இருந்து தூது மேல் தூது விடுக்கப்படும் நிலையில், இப்போது பாஜக மேலிடத்தில் இருந்தும் அழைப்புகள் வந்த வண்ணம் உள்ளன.
இதனிடையே இன்று 5,000 பேருக்கு பிரியாணி விருந்தளித்து 3,000 பெண்களுக்கு சேலை எடுத்துக்கொடுத்து தடபுடலாக தனது பிறந்தநாளை கொண்டாடி அரசியல் கட்சித் தலைவர்களை தன்னை திரும்பி பார்க்க வைத்துள்ளார் அய்யாதுரைபாண்டியன்.
அய்யாதுரை பாண்டியனுக்கு தூது விட்ட எடப்பாடி பழனிசாமி! மீண்டும் திமுகவில் ஐக்கியம்? அடுத்தது என்ன?
தென்காசி மாவட்டம்
திமுகவில் வர்த்தகர் அணி மாநில நிர்வாகியாகவும் அமமுகவில் தென்காசி வடக்கு மாவட்டச் செயலாளராகவும் இருந்தவர் தொழிலதிபர் அய்யாதுரைபாண்டியன். இவருக்கு டிடிவி தினகரனுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அக்கட்சியிலிருந்து அண்மையில் விலக்கப்பட்டார். இதையடுத்து இவரை அதிமுகவுக்கு அழைத்து இரண்டு எம்.எல்.ஏ.க்களை அடுத்தடுத்து தூது அனுப்பினார் அக்கட்சியின் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி. ஆனால் அது குறித்து உடனடியாக முடிவெடுக்க விரும்பாத அவர் தனது பிறந்தநாளன்று ஆதரவாளர்களின் கருத்தை அறிந்து அடுத்தக்கட்ட நடவடிக்கை பற்றி தெரிவிப்பதாக கூறி ஒதுங்கிக்கொண்டார்.
இன்று பிறந்தநாள்
அதன் படி இன்று தனது பிறந்தநாளை கொண்டாடிய அய்யாதுரைபாண்டியன், அரசியலில் இருந்து ஒரு போதும் விலக மாட்டேன் எனக் கூறியிருக்கிறார். இதன் மூலம் அவர் அடுத்ததாக இணையவுள்ள கட்சி அதிமுகவா அல்லது பாஜகவா என்ற எதிர்பார்ப்பு எழுந்திருக்கிறது. இதனிடையே ஆர்.எஸ்.எஸ்.அப்சர்வர்கள் இரண்டு பேர் பிறந்தநாள் நிகழ்ச்சி நடைபெற்ற இடத்திற்கே சென்று அங்கிருந்தவாறே டெல்லிக்கு நோட் அனுப்பி வைத்து அவரை பாஜகவில் இணைப்பதற்கான நடவடிக்கைகளை தொடங்கிவிட்டதாக தெரிவிக்கப்படுகிறது. ஆனாலும் அப்படியெல்லாம் எடுத்தோம் கவிழ்த்தோம் என இந்த முறை தாம் முடிவெடுக்க முடியாது என்பதில் உறுதியாக உள்ள அய்யாதுரை பாண்டியன் பாஜக அழைப்பையும் கிடப்பிலேயே வைத்துள்ளார். இதனிடையே அவரை முக்குலத்தோர் சமுதாயம் சார்ந்த தனி அமைப்பு ஒன்றை தொடங்குமாறும் அவரது ஆதரவாளர்கள் கோரஸாக குரல் எழுப்பியிருக்கிறார்கள்.
5,000 பேருக்கு பிரியாணி
5,000 பேருக்கு பிரியாணி, 3,000 பெண்களுக்கு சேலை என எப்போதும் இல்லாத அளவுக்கு இந்தாண்டு பிறந்தநாளை திருவிழா போல் கொண்டாடி தீர்த்த அய்யாதுரைபாண்டியன் பற்றி உளவுத்துறை தரப்பில் இருந்து ஆட்சி மேலிடத்திற்கும் குறிப்பு அனுப்பப்பட்டுள்ளதாம். தற்போது அவர் திமுக உட்பட எந்தக் கட்சியிலும் இல்லாவிட்டாலும் கூட பிறந்தநாள் விழாவில் திமுக, அதிமுக, அமமுக, பாஜக, விசிக உட்பட முக்கியக் கட்சிகளை சேர்ந்த பிரமுகர்கள் அவரை நேரில் சந்தித்து வாழ்த்து மழை பொழிந்துள்ளனர்.
என்ன அவசியம்
தென் மாவட்டத்தில் தனது செல்வாக்கை நிலை நிறுத்த வேண்டிய கட்டாயத்தில் உள்ள அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி எப்பாடுபட்டேனும் அய்யாதுரைபாண்டியனை அதிமுகவுக்கு கொண்டு வருவதற்கான முயற்சிகளை தீவிரப்படுத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் மூலம் சமுதாய ரீதியாகவும் ஓ.பி.எஸ்.க்கு செக் வைக்கலாம் என்பது எடப்பாடி பழனிசாமியின் திட்டமாம்.