உதயநிதி ஸ்டாலின் மீது வழக்குப் பதிவு செய்ய வேண்டும்.. பாஜக தலைவர் அண்ணாமலை பரபரப்பு பேட்டி
நெல்லை: கூட்டுறவு கடன் தள்ளுபடி விவகாரத்தில் முறைகேடு நடந்ததாக முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார், எனவே அதற்கு தூண்டுகோலாக இருந்த உதயநிதி ஸ்டாலின் மீது வழக்குப் பதிவு செய்ய வேண்டும் என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கோரிக்கை விடுத்துள்ளார்.
Recommended Video
திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ளாட்சித் தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்வதற்காக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை இன்று தூத்துக்குடிக்கு விமானத்தில் வருகை தந்தார். பின்னர் அவர் அங்கு செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தபோது கூறியதாவது:
தமிழகத்தில் கொலைக் குற்றங்கள் அதிகரித்துள்ளன. இதை தடுப்பதற்காக காவல்துறையினர் எடுத்து வரும் நடவடிக்கைக்கு தமிழக அரசு முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.

தேர்வு அச்சம்
தேர்வு குறித்த அச்சத்தால் மாணவர்கள் உயிரிழந்து வரும் நிலையில், தமிழக அரசு இதனை கவனத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும். ஆனால், நீட் தேர்வால் மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டதாக தொடர்ந்து அரசியல் செய்து வருகிறது. மாணவர்களின் உயிரிழப்பை தடுப்பதற்கு அவர்களை குழப்பாமல் இருந்தாலே போதும். அதற்கு திமுக அமைதியாக இருந்தாலே போதும். தேர்தல் வரும்போதெல்லாம் திமுக நீட் தொடர்பாக பேசி திமுக ஆதாயம் தேடிக் கொள்கிறது.

கோவில்களுக்கு அனுமதி
தடுப்பூசி போட்டுக் கொள்ளாத மாணவர்களை பள்ளிக்குச் செல்ல அனுமதிக்கிறது இந்த அரசு. ஆனால் தடுப்பூசி எடுத்துக்கொண்ட பெரியவர்களை கோயிலுக்கு செல்ல அனுமதிக்க மறுப்பது ஏன்? இந்த அரசு டாஸ்மாக்கிற்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை, புனிதமான கோயில்களுக்கு தரவில்லை.
வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் கோயில்களில் தரிசனம் செய்வதற்கு அனுமதிக்க வேண்டும். எல்லா மதத்தினரையும் சமமாக நடத்தவேண்டும்.

ஸ்டிக்கர் ஒட்டுகிறது அரசு
கரீப் கல்யாண் அன் யோஜனா, தடுப்பூசி திட்டம் உள்ளிட்டவை மத்திய அரசின் திட்டங்கள். ஆனால், அதை தங்கள் ஸ்டிக்கர் ஒட்டி மறைக்க நினைக்கிறது தமிழக திமுக அரசு. மத்திய அரசு கொண்டு வந்த அனைத்து திட்டங்களிலும் மாநில அரசு, பாரதப் பிரதமர் படத்தை கூட வெளியிடாமல் எல்லாம் மாநில அரசு செய்வதாக சொல்லிக்கொள்வது சரியில்லை.

உதயநிதி ஸ்டாலின் மீது வழக்கு
கடந்த சட்டசபைத் தேர்தல் பிரச்சாரத்தின் போது, திமுக ஆட்சி அமைந்ததும் வங்கிகளில் அடமானம் வைத்துள்ள நகைகளுக்கு கடன் தள்ளுபடி கிடைக்கும் என்பதால், நகை அடமானம் வைக்காதவர்கள் இப்போதே வங்கியில் நகைக்கடன் பெற்றுக்கொள்ளுங்கள், ஏனெனில், திமுக ஆட்சி அமைந்ததும் கடன் தள்ளுபடி பெறலாம் என்று பிரச்சாரம் செய்தது உதயநிதி ஸ்டாலின்தான். அதேநேரம், முதல்வர் ஸ்டாலின் சட்டசபையில் பேசும் போது, கூட்டுறவு வங்கிகளில் முறைகேடாக நகை அடமானம் வைத்தவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று அறிவித்துள்ளார். அப்படி பார்த்தால், நியாயப்படி, பிரச்சாரத்தின்போது, நகைகளை அடமானம் வைக்கச் சொல்லி ஐடியா கொடுத்த உதயநிதி ஸ்டாலின் மீது தான் வழக்குப்பதிவு செய்யவேண்டும். இதெல்லாம் அரசியலுக்காக திமுக போடுகிற நாடகமன்றி வேறில்லை. முதலில் எல்லா நகைக்கும் கடன் தள்ளுபடி என்று கூறிவிட்டு, இப்போது தட்டிக் கழிக்க காரணம் கண்டுபிடித்துள்ளார்கள். இவ்வாறு அண்ணாமலை தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications