அரிவாளால் வெட்டினான்.. பாதுகாப்புக்கு சுட்டனர்- நீராவி முருகன் என்கவுண்டர் பற்றி போலீஸ் விளக்கம்
ரவுடி நீராவி முருகன் மீது ஏன் என்கவுண்டர் நடத்தப்பட்டது என்பது குறித்து காவல்துறை தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
திருநெல்வேலி: திண்டுக்கல்லில் நடந்த கொள்ளை வழக்கில் நீராவி முருகனை போலீசார் பிடிக்க முயன்ற போது, போலீசாரை நீராவி முருகன் தாக்கினார். தற்காப்புக்காக நீராவி முருகனை போலீசார் ஒருமுறை சுட்டனர் என்று என்கவுண்டர் பற்றி காவல்துறை சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. நீராவி முருகன் அரிவாளால் வெட்டியதில் 4 போலீசாருக்கு காயம் ஏற்பட்டுள்ளதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
Recommended Video
தூத்துக்குடி மாவட்டம் புதியம்புத்தூர் அருகே உள்ள நீராவிமேடு கிராமத்தை சேர்ந்தவர் நீராவி முருகன் (வயது 45). பிரபல ரவுடியான இவர் மீது சென்னை, தூத்துக்குடி, ஈரோடு உள்பட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் உள்ள காவல் நிலையங்களில் கொலை, கொள்ளை, கடத்தல், வழிப்பறி என சுமார் 30-க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளது.
நீண்ட காலமாக சென்னையில் வசித்து வந்த இவர் 2019ஆம் ஆண்டு போலீசாரால் கைது செய்யப்பட்டார். பின்னர் ஜாமீனில் வெளியே வந்த இவர் நெல்லையில் பதுங்கி இருந்ததாக கூறப்படுகிறது.

திண்டுக்கல் கொள்ளை வழக்கு
திண்டுக்கல் மாவட்டம் பழனியில் நடந்த ஒரு கொள்ளை வழக்கில் நீராவி முருகனுக்கு தொடர்பு இருப்பதை திண்டுக்கல் தனிப்படை போலீசார் கண்டுபிடித்துள்ளனர். இதைத்தொடர்ந்து நீராவி முருகனை திண்டுக்கல் தனிப்படை போலீசார் தீவிரமாக தேடி வந்தனர்.

ரகசிய தகவல்
நீராவி முருகன் நெல்லை மாவட்டம் நாங்குநேரியில் இருந்து களக்காடு செல்லும் சாலையில் சுப்பிரமணியபுரம் அருகே பொத்தை பகுதியில் பதுங்கி இருப்பதாக தனிப்படை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.
அதன்பேரில் சப்இன்ஸ்பெக்டர் இசக்கிராஜா தலைமையிலான தனிப்படையினர் நீராவி முருகனை கைது செய்வதற்காக இன்று நெல்லை வந்தனர். அப்போது நடந்த சண்டையில் காவல்துறையினர் நீராவி முருகனை என்கவுண்டர் செய்தனர்.

அரிவாள் வெட்டு
நடந்த சம்பவம் குறித்து செய்தியாளர்களிடம் விளக்கம் அளித்த பேலீசார், காலை 11 மணியளவில் தனிப்படை போலீசார் பொத்தை பகுதியில் பதுங்கி இருந்த நீராவி முருகனை சுற்றி வளைத்து பிடிக்க முயன்றனர். அப்போது நீராவி முருகன் அரிவாளால் ஒரு போலீஸ்காரரை வெட்டினார். அதனை தடுக்க முயன்ற மேலும் 2 போலீஸ்காரர்களுக்கு அரிவாள் வெட்டு விழுந்தது என்று காவல்துறையினர் தெரிவித்தனர்.

நீராவி முருகன் சுட்டுக்கொலை
இதனால் சுதாரித்து கொண்ட போலீசார் தற்காப்புக்காக துப்பாக்கியால் நீராவி முருகனை சுட்டனர். இதில் அவர் மீது குண்டு பாய்ந்து சம்பவ இடத்திலேயே நீராவி முருகன் பலியானார். தகவல் அறிந்து நெல்லை சரக டி.ஐ.ஜி. பிரவேஷ் குமார், எஸ்.பி சரவணன் மற்றும் காவல்துறை அதிகாரிகள் அங்கு விரைந்து சென்றனர். மேலும் காயம் அடைந்த 3 காவலர்களையும் மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

நெல்லை எஸ்.பி சரவணன்
பின்னர் நீராவி முருகன் உடலை பிரேத பரிசோதனைக்காக பாளை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர். நீராவி முருகன் என்கவுன்ட்டர் செய்யப்பட்ட இடத்தில் நெல்லை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சரவணன் நேரில் ஆய்வு மேற்கொண்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தூத்துக்குடி மாவட்டம் நீராவிமேடு பகுதியை சேர்ந்தவர் நீராவி முருகன். தனியாக செல்லும் பெண்களை குறிவைத்து கத்தியை காட்டி மிரட்டி செயின் பறிப்பில் ஈடுபடுவது இவரது வாடிக்கை. கூட்டாளிகளுடன் வசதி படைத்தவர்கள் வீடுகளில் திட்டமிட்டு கொள்ளையடித்ததாக நீராவி முருகன் மீது பல வழக்குகள் நிலுவையில் உள்ளன என்று கூறினார். கைது செய்ய வந்த காவலர்களை நீராவி முருகன் தாக்கியதன் காரணமாகவே துப்பாக்கி சூடு நடத்தப்பட்டதாகவும் எஸ்பி சரணவன் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications