Nellai Kavin | நெல்லை கவினை 10 நாள் முன்பு போலீஸ் ஸ்டேஷனில் அழைத்து பேச்சுவார்த்தை? பரபரப்பு புகார்
திருநெல்வேலி: நெல்லை கவினுக்கு சம்பவம் நடப்பதற்கு 10 தினங்களுக்கு முன்பு அவரை காவல் நிலையம் அழைத்து வந்து மிரட்டியதாக கருஞ்சிறுத்தை மக்கள் இயக்கம் சார்பில் குற்றச்சாட்டி உள்ளது. கவினை காவல் நிலையம் வரவழைத்து, நீ வேறு சமூகம், அந்தப் பெண் வேறு சமூகம், உனக்கும் அவளுக்கும் பொருந்தாது எனவே விலகிக் கொள் என கட்டப்பஞ்சாயத்து செய்யததாக காவல் ஆய்வாளர் மீது குற்றம்சாட்டியுள்ளார் அதிசய பாண்டி என்பவர். என்ன நடந்தது என்பதை பார்ப்போம்.
தூத்துக்குடி மாவட்டம் ஏரல் அருகே உள்ள ஆறுமுகமங்கலத்தை சேர்ந்த சந்திரசேகர், தமிழ்செல்வி தம்பதியின் மகன் கவின் (வயது 27). இவர்கள் தற்போது தூத்துக்குடி பிரையண்ட் நகர் பகுதியில் வசித்து வருகிறார்கள். நெல்லை பாளையங்கோட்டை கே.டி.சி.நகர் பகுதியைச் சேர்ந்தவர் சரவணன். இவரது மனைவி கிருஷ்ணகுமாரி. இவர்களுக்கு சுர்ஜித் (24) என்ற மகனும், ஒரு மகளும் இருக்கிறார்கள்.

ஒரே பள்ளியில் படித்தனர்
இதில் சரவணன் ராஜபாளையம் பட்டாலியனிலும், கிருஷ்ணகுமாரி நெல்லை மணிமுத்தாறு பட்டாலியனிலும் சப்-இன்ஸ்பெக்டர்களாக பணியாற்றி வந்தனர். இவர்கள் இதற்கு முன் தூத்துக்குடியில் வசித்து வந்தனர். அப்போது, கவினும், சுர்ஜித்தின் அக்காளும் ஒரே பள்ளியில் படித்து வந்தபோது பழகியதாக கூறப்படுகிறது.
கவினை கூட்டிச் சென்ற சுர்ஜித்
சென்னையில் தகவல் தொழில்நுட்ப என்ஜினியராக பணியாற்றி வந்த கவின் விடுமுறைக்காக ஊருக்கு வந்திருக்கிறார். தற்போதும் கவின், அந்த பெண்ணிடம் பேசிவந்தாராம், இதை அறிந்த சுர்ஜித் கடந்த 27-ந் தேதி கவினை பாளையங்கோட்டைக்கு அழைந்து வந்து, அரிவாளால் சரமாரியாக வெட்டிக்கொலை செய்தார்.
சுர்ஜித் கைது
இதுகுறித்து பாளையங்கோட்டை போலீசார் வழக்குப்பதிந்து, சுர்ஜித்தை கைது செய்தார்கள். மேலும் கொலைக்கு தூண்டியதாக அவரது தந்தை சரவணன், தாயார் கிருஷ்ணகுமாரி ஆகியோர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்திருக்கிறார்கள். நேற்று முன்தினம் அவர்கள் 2 பேரும் பணி இடைநீக்கம் செய்யப்பட்டனர். இந்த நிலையில் பொது ஒழுங்கு பராமரிப்பிற்கு குந்தகம் விளைவிக்கும் செயலில் ஈடுபட்ட சுர்ஜித்தை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்ய நெல்லை மாநகர போலீஸ் கமிஷனர் சந்தோஷ் ஹடிமணி உத்தரவிட்டிருக்கிறார். அதேபோல் எஸ்ஐ சரவணன் கொலைக்கு தூண்டியதாக கைது செய்யப்பட்டுள்ளார். அதேநேரம் சுர்ஜித் தாயார் எஸ்ஐ கிருஷ்ணகுமாரி இன்னும் கைது செய்யப்படவில்லை.
கவின் செல்போன்
இந்த கொலை வழக்கில் கவினின் செல்போனும் முக்கிய பங்கு வகிப்பதாக சொல்லப்படுவதால் பரபரப்பு எழுந்தள்ளது. கவின் கொலையாவதற்கு முன்பாக யார், யாரிடம் பேசினார். அதில் காணப்படும் படங்கள் ஆகியவற்றை கண்டறியும் முயற்சியில் போலீசார் ஈடுபட்டு வருகிறார்கள்.இதற்கிடையே கவின் உடல் பாளையங்கோட்டை அரசு ஆஸ்பத்திரியில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு வைக்கப்பட்டு இருக்கிறது. அவரது உடலை நேற்று 3-வது நாளாக குடும்பத்தினர், உறவினர்கன் வாங்க மறுத்துவிட்டனர். சுர்ஜித்தின் தாயார் கிருஷ்ணகுமாரியை கைது செய்தால் தான் உடலை வாங்குவோம் என்று திட்டவட்டமாக கூறி வருகிறார்கள். இந்த விவகாரத்தில் நான்கு நாட்களாக அவரது பெற்றோர் மற்றும் உறவினர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.
கட்டப்பஞ்சாயத்து
இந்த நிலையில் இன்று கவின் சந்திக்க வந்த கருஞ்சிறுத்தை மக்கள் இயக்க தலைவர் அதிசய பாண்டி செய்தியாளர்களிடம் கூறுகையில், கவின் இறப்பதற்கு 10 தினங்களுக்கு முன்பு அவரை பாளையங்கோட்டை ஆய்வாளர் காவல் நிலையம் வரவழைத்து நீ வேறு சமூகம் அந்தப் பெண் வேறு சமூகம் உனக்கும் அவளுக்கும் பொருந்தாது எனவே விலகிக் கொள் என கட்டப்பஞ்சாயத்து செய்தார் என்று குற்றம்சாட்டினார். அதற்குப் பிறகுதான் இந்த கொலை நடந்துள்ளது என்றும் ஊர் மக்கள் மற்றும் உறவினர்களின் கோரிக்கை என்னவென்றால் சுர்ஜித் தாய் தந்தையர் கைது செய்யப்பட வேண்டும் என்றும் அதை செய்து தருவார்கள் என்று நாங்கள் நம்புகிறோம் என்றும் அதிசய பாண்டி கூறினார்.












Click it and Unblock the Notifications