திருமணமான காதலனை கைப்பிடித்த பெண்.. ஆத்திரத்தில் மகளுக்கு கண்ணீர் அஞ்சலி போஸ்டர் ஒட்டிய தாய்
நெல்லை: நெல்லையில் காதலனை கரம் பிடிப்பதற்காக வீட்டை விட்டு வெளியேறிய மகளுக்கு அவரது தாய் கண்ணீர் அஞ்சலி போஸ்டர் ஒட்டியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நெல்லை மாவட்டம் திசையன்விளை வடக்கு தெருவை சேர்ந்தவர் பன்னீர்செல்வம். இவரது மகள் அபி (19). இவர் மரணம் அடைந்து விட்டதாக ஊர் முழுவதும் போஸ்டர் ஒட்டப்பட்டிருந்தது. இதை கண்ட அவரது கணவர் சந்தோஷ் அதிர்ச்சி அடைந்தார்.
பின்னர் அந்த போஸ்டரில் உள்ள பிரிண்டிங் பிரஸ்ஸுக்கு போன் செய்து உயிரோடு இருப்பவருக்கு இது போல் போஸ்டர் ஒட்டியது ஏன் என கோபத்தில் கேள்வி எழுப்பினார். அப்போது அபி மஞ்சள் காமாலையால் உயிரிழந்து விட்டதாக கூறி அவரது தாய் அமராவதிதான் கண்ணீர் அஞ்சலி போஸ்டர் ஒட்டச் சொன்னதாக கூறினார்.

போஸ்டர்
இதுகுறித்து திசையன்விளை காவல் நிலையத்துக்கு சந்தோஷ் புகார் அளித்தார். இதையடுத்து உயிரோடு இருக்கும் பெண்ணிற்கு கண்ணீர் அஞ்சலி போஸ்டர் ஒட்டியது ஏன் என கேள்வி எழுப்பினர். அப்போதுதான் அமராவதி எதற்காக போஸ்டர் ஒட்டினார் என்ற காரணம் வெளியே வந்தது.

மூத்த மகளுக்கு திருமணம்
4 ஆண்டுகளுக்கு முன்னர் அமராவதியின் கணவர் பன்னீர்செல்வம் இறந்துவிட்டார். தனி ஆளாக 3 மகள்களை வைத்து கொண்டு சிரமப்பட்டு வளர்த்தார். மூத்த மகளுக்கு திருமணம் செய்து கொடுத்துவிட்டார்.

கல்லூரி மாணவி
2ஆவது மகளான அபி கல்லூரியில் படித்து வந்தார். 3 ஆவது மகள் பள்ளிப்படிப்பு படித்து வருகிறார். இந்த நிலையில் அபி பக்கத்தில் வீட்டில் வசித்து வரும் சந்தோஷை காதலித்தார். சந்தோஷின் நடவடிக்கை சரியில்லாததால் அபியின் காதலுக்கு அமராவதி எதிர்ப்பு தெரிவித்தார்.

அபி மறுப்பு
இந்த பிரச்சினையால் அவ்வப்போது இரு குடும்பத்தினருக்கு சண்டை ஏற்பட்டதால் சந்தோஷ் வீட்டை காலி செய்து விட்டு இடையன்குடி சாலையில் புதிய வீடு கட்டி அங்கு குடிபெயர்ந்தார். பல முறை கண்டித்தும் காதலை விட அபி மறுத்துவிட்டார்.

100 போஸ்டர்கள்
இந்த நிலையில் கடந்த 14-ஆம் தேதி வீட்டை விட்டு வெளியேறிய அபி, சந்தோஷை திருமணம் செய்து கொண்டார். இதனால் எனது மகள் இறந்துவிட்டதாக 100 கண்ணீர் அஞ்சலி போஸ்டர்களை அச்சிட்டு ஒட்டியதாக தகவல்கள் கிடைத்தன.

போலீஸில் புகார்
இதையடுத்து அமராவதியிடம் போலீஸார் விசாரணை நடத்தினர். அவர் கூறுகையில் அபி திருமணம் செய்து கொண்டுள்ள சந்தோஷுக்கு ஏற்கெனவே திருமணம் நடந்து ஒரு குழந்தை இருக்கிறது. இதனால்தான் அபி இறந்துவிட்டதாக போஸ்டர் ஒட்டினேன். மேற்கொண்டு எதுவும் பேச விரும்பவில்லை என்றார். இரு தரப்பும் காவல் நிலையத்தில் எழுத்துபூர்வமாக புகார் அளித்தும் வழக்கு ஏதும் பதிவு செய்யவில்லை.












Click it and Unblock the Notifications