ஜாதிய பாடல்களை ஒலித்தால் பஸ் டிரைவர், கண்டக்டர் மீது கைது நடவடிக்கை! நெல்லை போலீஸ் எச்சரிக்கை
நெல்லை: திருநெல்வேலி பேருந்துகளில் ஜாதிய பாடல்கள் ஒலித்தால் டிரைவர், கண்டக்டர் கைது செய்யப்படுவார்கள் என நெல்லை மாநகர போலீஸார் எச்சரிக்கை விடுத்துள்ளனர். தென் தமிழகத்தில் தொடரும் ஜாதிய மோதல்களை அடுத்து போலீஸார் இது போன்றதொரு உத்தரவை பிறப்பித்துள்ளனர்.
திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி உள்ளிட்ட தென்மாவட்டங்களில் மாணவர்களிடையே ஜாதி மோதல்கள் ஏற்பட்டு வருகின்றன. ஜாதிய ரீதியிலான மோதல் மற்றும் இருதரப்பாக பிரிந்து மோதிக் கொள்வது என்ற சம்பவங்கள் நடக்கின்றன.

பஸ்கள், பஸ் ஸ்டான்ட்களில் மாணவர்கள் கூடும் போதும் ஜாதிய மோதல் நடைபெறுகிறது. நெல்லை மாவட்டத்தில் சில நாட்களிலேயே 50-க்கும் மேற்பட்ட பள்ளி, கல்லூரி மாணவர்கள் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். அதுபோல் நேற்று முன் தினம் கூட சேரன்மகாதேவி அருகே மனோ பல்கலைக்கழக கல்லூரி மாணவர்கள் மொபைல் ஆன்லைன் விளையாட்டில் மோதிக் கொண்டனர்.
இதையடுத்து பல மாணவர்கள் கைதாகினர். எனவே மாணவர்களின் மோதலை தடுக்கும் வகையில் நெல்லை போலீஸார் நெல்லை ஜங்ஷன் பேருந்து நிலையத்தில் தனியார், அரசு பேருந்து டிரைவர்கள், கண்டக்டர்களுடன் ஆலோசனையில் ஈடுபட்டனர். இதில் போலீஸ் உயரதிகாரிகள் கலந்து கொண்டனர்.
அப்போது மாணவர்களிடையே எங்காவது மோதல் ஏற்பட்டால் அது குறித்த தகவல்களை உடனடியாக போலீஸுக்கு தெரிவிக்க வேண்டும். கஞ்சா உள்ளிட்ட போதை பொருள் கடத்தல், போதை பொருளை பயன்படுத்துவது குறித்து சந்தேகம் எழுந்தாலும் போலீஸாரிடம் புகார் கூற வேண்டும்.
மாநகர பேருந்துகளில் ஜாதி ரீதியிலான பாடல் ஒலிபரப்பக் கூடாது. அது போன்ற பாடல்களை அழித்துவிட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது. அதையும் மீறி ஜாதி ரீதியிலான பாடல்களை ஒலிக்கச் செய்தால் டிரைவர், கண்டக்டர் மீது கைது நடவடிக்கை எடுக்கப்படும் என போலீஸார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
நெல்லை மாவட்டம் வள்ளியூரில் அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு கடந்த ஜூலை 30ஆம் தேதி 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு இடையே மோதல் ஏற்பட்டது. காலை தேநீர் இடைவேளையின் போது இரு சமூகங்களைச் சேர்ந்த மாணவர்கள் மோதி கொண்டதாக கூறப்படுகிறது. இதில் ஒரு சமூகத்தை சேர்ந்த மாணவர்கள் காயம் அடைந்தனர்.
இதையடுத்து வள்ளியூரில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும் மாணவர்களின் மோதலை விலக்கி விட்ட ஆசிரியர்கள் காவல் துறைக்கு தகவல் தெரிவித்ததை அடுத்து 15 மாணவர்களிடம் போலீஸார் விசாரணை நடத்தினர். இந்த சம்பவத்திற்கு 10 நாட்களுக்கு முன்பு இதே பள்ளியில் பயின்று வரும் மாணவிகள் கழிவறை வசதி கேட்டு போராட்டத்தில் ஈடுபட்டதும், ஆறு மாதங்களுக்கு முன்பாக இதே போன்ற பிரச்னையில் 10 மாணவர்களை போலீஸார் விசாரணை மேற்கொண்டு சிறுவர் சீர்திருத்தப் பள்ளிக்கு அழைத்துச் சென்றனர்.












Click it and Unblock the Notifications