நெல்லை டூ திருச்செந்தூர் பயணிகள் ரயில்.. 25 நாட்கள் ரத்து.. தென் மாவட்ட பயணிகளே நோட் பண்ணிக்கோங்க
நெல்லை: நெல்லை டூ திருச்செந்தூர் இடையே பயணிகள் ரயில் இயக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் நெல்லை ஜங்சன் ரயில் நிலையத்தில் யார்டு பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், நெல்லை ஜங்க்ஷனில் இருந்து மாலை 4.30 மணிக்கு திருச்செந்தூருக்கு புறப்படும் பயணிகள் ரயில் வரும் 9 ஆம் தேதி முதல் 25 நாட்களுக்கு இருமார்க்கத்திலும் ரத்து செய்யப்படுவதாக ரயில்வே அறிவித்துள்ளது.
நெல்லையில் இருந்து திருச்செந்தூருக்கு பயணிகள் ரயில் இயக்கப்பட்டு வருகிறது. நெல்லை சுற்று வட்டார பகுதி மக்களின் போக்குவரத்திற்கு இந்த ரயில் இன்றியமையாததாக உள்ளது. திருச்செந்தூருக்கு ஆன்மிக பயணமாக வரும் பயணிகளும் நெல்லை வரை ரயிலில் வந்துவிட்டு, அங்கிருந்து இந்த பயணிகள் ரயிலை பிடித்தே திருச்செந்தூருக்கு சென்று வருகிறார்கள்.
பள்ளி, கல்லூரி மாணவிகளுக்கும் இந்த ரயில் சேவை மிகவும் முக்கியமானதாக உள்ளது. திருச்செந்தூரில் இருந்து நெல்லைக்கு செல்ல பேருந்தில் செல்வது என்றால் கட்டணம் அதிகம் என்பதால் ரயிலில் செல்லவே பயணிகள் பலரும் விரும்புகிறார்கள். இந்த நிலையில், தான், பராமரிப்பு பணிகள் காரணமாக திருச்செந்தூர் - நெல்லை பயணிகள் ரயில் 25 நாட்கள் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

இது தொடர்பாக ரயில்வே கூறியிருப்பதாவது:- நெல்லை சந்திப்பு ரயில் நிலையத்தில் யார்டு சீரமைப்பு பணிகள் தொடங்கப்பட உள்ளது. எனவே, இந்த பணிகளுக்கு இடையூறு ஏற்படாமல் இருக்கும் விதமாக நெல்லை - திருச்செந்தூர் இடையே பயணிகள் ரயில் போக்குவரத்து ரத்து செய்ய மதுரை கோட்ட ரயில்வே நிர்வாகம் முடிவு செய்துள்ளது.
வழக்கமாக காலை 8.15 மணிக்கு திருச்செந்துரில் இருந்து புறப்பட்டு 10 மணிக்கு நெல்லை சந்திப்புக்கு வரும் பயணிகள் ரயில், பணிகள் நடக்க உள்ள யார்டு பகுதியில் நிறுத்தப்படும். இந்த ரயில் மாலை 4.30 மணிக்கு புறப்பட்டு இரவில் திருச்செந்தூருக்கு சென்று செந்தூர் எக்ஸ்பிரஸ் ரயிலாக சென்னைக்கு கிளம்பும்.
தற்போது யார்டு பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால், காலை 8.15 மணிக்கு திருச்செந்தூரில் இருந்து புறப்படும் ரயிலும் மாலை 4.30 மணிக்கு நெல்லையில் இருந்து புறப்படும் ரயிலும் ரத்து செய்யப்பட உள்ளது. வரும் 9 ஆம் தேதி முதல் அக்டோபர் 3 ஆம் தேதி வரை மொத்தம் 25 நாட்களுக்கு இந்த ரயில் இரு மார்க்கத்திலும் ரத்து செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதே நேரத்தில் திருச்செந்தூர் - நெல்லை வழித்தடத்தில் பிற நேரத்தில் இயக்கப்படும் ரயில்கள் வழக்கம் போல இயங்கும் என்று தெரிவித்துள்ளது. நெல்லையில் இருந்து திருச்செந்தூருக்கு அதிகாலை 4.30, 7.25, 10.10, 11.40, 1.30 PM, 4.30, 6.50 ஆகிய நேரங்களில் ரயில் இயக்கப்பட்டு வருகிறது












Click it and Unblock the Notifications