நெல்லை கலெக்டர் ஷில்பாவுக்கு குவியும் பாராட்டுகள்.. ஏன், எதற்காக தெரியுமா?
அங்கன்வாடி பள்ளியில் 3 வயது மகளை சேர்த்துவிட்டுள்ளார் நெல்லை ஆட்சியர்.
நெல்லை: கலெக்டர் ஷில்பாவுக்கு தமிழகம் முழுவதிலும் இருந்து வாழ்த்துக்கள் குவிந்து வருகின்றன. ஏன் தெரியுமா?
கொஞ்ச வருஷமாகவே தமிழ்நாட்டில் அரசு பள்ளியின் நிலைமை சொல்ல முடியாத அவலத்தில் உள்ளது. படிக்காதவர்களும், பாமரர்களும், கூலி வேலை செய்பவர்கள்கூட தங்கள் பிள்ளைகளை அரசு பள்ளியில் படிக்க வைக்க தயங்கி, கவர்ச்சி விளம்பரங்களை பார்த்து.. கலர் கலர் யூனிபார்ம் உள்ள தனியார் பள்ளிகளில் சேர்த்து விடுகிறார்கள்.
அரசு பள்ளிகளின் எண்ணிக்கை அதலபாதாளத்தில் தொங்கி கொண்டிருந்தும், இதை சரி செய்யவும், இருக்கும் பள்ளிக்கூடங்களை சீர்செய்யவும் அரசு தீவிரத்தை இன்னும் கையில் எடுக்கவில்லை.
கண்டு கொள்ளவில்லை
இதனால் அரசு ஊழியர்களும் அரசு பள்ளி ஆசிரியர்களும் தங்கள் பிள்ளைகளையும் அரசு பள்ளிகளில் படிக்க வைக்க வேண்டும் என்கிற கருத்து முன்பிருந்தே எழுந்து வருகிறது. ஆனால் இதனை யாரும் பெரிதாக கண்டு கொள்ளவில்லை.
3 வயது கீது
இந்த சூழ்நிலையில்தான், நெல்லை மாவட்ட ஆட்சியர் ஷில்பா ஒரு பாராட்டத் தகுந்த செயலை செய்துள்ளார். அதன்படி தனது மகளை பாளையங்கோட்டையில் உள்ள அரசு குழந்தைகள் மையத்தில் சேர்த்துள்ளார். ஆட்சியர் ஷில்பாவின் குழந்தைக்கு 3 வயதாகிறது. அவள் பெயர் கீது என்கிற கீதாஞ்சலி.
சிறந்த எடுத்துக்காட்டு
பாளையங்கோட்டை ஆயுதப்படை வளாகம் அருகே அமைந்துள்ள ஒரு அரசு குழந்தைகள் மையத்தில் தான் கீதுவை சேர்த்துள்ளார் ஷில்பா. ஒரு அங்கன்வாடி பள்ளியில் மகளை சேர்த்து படிக்க வைத்துள்ள ஆட்சியர் ஷில்பா மற்ற அரசு துறை அதிகாரிகள், ஆசிரியர்களுக்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டாக விளங்க ஆரம்பித்துள்ளார்.
அங்கன்வாடியில் கீது
ஆனால் இது எதை பற்றியும் அறியாத கீதுவோ மற்ற மாணவர்களுடன் தரையில் அமர்ந்து பாடங்களை கவனமுடன் கேட்டு வருகிறார்.