தொக்கா சிக்கிட்டாரே.. வச்சு செய்யும் ஓபிஎஸ் டீம்.. “எட்டு தோல்வி எடப்பாடி”.. பரபரக்கும் போஸ்டர்கள்!
ஓபிஎஸ் அணியினர் ஒட்டிய போஸ்டர் அதிமுக வட்டாரத்தில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
நெல்லை : திருநெல்வேலி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் 'எட்டு தோல்வி எடப்பாடி' என்ற தலைப்பில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளது அதிமுகவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
எடப்பாடி பழனிசாமி வசம் அதிமுக வந்த பிறகு தொடர்ச்சியாக 8 தேர்தல்களில் தோல்விகளை சந்தித்து வருகிறது என்றும், "எட்டு தோல்வி எடப்பாடியாரே! உடனடியாக எதிர்க்கட்சி தலைவர் பதவியை ராஜினாமா செய்!' என்றும் குறிப்பிடப்பட்டு உள்ளது.
8 தேர்தல்களில் அதிமுக தோல்வியடைந்த விவரத்துடன் ஒட்டப்பட்டுள்ள இந்த போஸ்டர் சமூக வலைதளங்களிலும் பரவி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஓபிஎஸ் - ஈபிஎஸ்
ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அதிமுகவில் ஏற்பட்ட குழப்பத்தைத் தொடர்ந்து, எடப்பாடி பழனிசாமி முதலமைச்சர் ஆனார். தனியாகச் செயல்பட்ட ஓபிஎஸ், ஈபிஎஸ்ஸுடன் இணைந்த நிலையில், சசிகலா கட்சியில் இருந்து வெளியேற்றப்பட்டார். அதிமுகவில் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் உருவாக்கப்பட்டன. ஒருங்கிணைப்பாளராக ஓ.பன்னீர்செல்வமும் இணை ஒருங்கிணைப்பாளராக எடப்பாடி பழனிசாமியும் பணியாற்றி வந்தனர். முதலமைச்சராக எடப்பாடி பழனிசாமியும், துணை முதலமைச்சராக ஓ.பன்னீர்செல்வமும் பணியாற்றினர். ஆட்சி காலம் முடிவடைந்த நிலையில் கடந்த ஆண்டு ஜூன் மாதம் அதிமுகவின் ஓபிஎஸ் - ஈபிஎஸ் அணிகள் இடையே மோதல் ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து, இரு தரப்பினரும் தனித்தனி அணிகளாகச் செயல்பட்டு வருகின்றனர்.

இடைக்கால பொதுச் செயலாளர்
ஜூலை 11ஆம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழுவில் இடைக்கால பொதுச் செயலாளராக பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்டார். இதனை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம் தரப்பு நீதிமன்றத்தை நாடிய நிலையில் பொதுக்குழு கூட்டியது செல்லும் என உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. ஆனால் பொதுக்குழு தீர்மானங்கள் குறித்து உயர் நீதிமன்றத்தை நாட உச்ச நீதிமன்றம் தெரிவித்த நிலையில், பொதுக்குழு தீர்மானங்கள் குறித்து உயர் நீதிமன்றத்தை ஓபிஎஸ் அணுகியுள்ளார். இதனிடையே சமீபத்தில் நடைபெற்ற ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளர் தென்னரசு, காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனிடம் படுதோல்வியை தழுவினார். ஈரோடு கிழக்கு தொகுதி இடைத் தேர்தல் தோல்வி எடப்பாடி பழனிசாமிக்கு பெரும் இடியாக இறங்கியுள்ளது.

தொடர் தோல்விகள்
எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராகப் பொறுப்பேற்ற பிறகு அடுத்தடுத்த தேர்தல்களில் அதிமுக தொடர்ந்து தோல்வியை சந்தித்து வந்தது. எடப்பாடி பழனிசாமி தலைமையில் இது அதிமுக சந்தித்த 8வது தோல்வி ஆகும். 2021 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் தோல்வி, அதற்கு முன்னதாக நாடாமன்றத் தேர்தலில் தோல்வி, ஊரக உள்ளாட்சி, நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல், இடைத்தேர்தல்கள் என அனைத்து தேர்தலிலும் தோல்விகளை சந்தித்து வந்தது. இதனைக் குறிப்பிட்டு ஓபிஎஸ் அணியினர், எடப்பாடி பழனிசாமியை கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.

எட்டு தோல்வி எடப்பாடி
இந்நிலையில் நெல்லை மாவட்டம், திசையன்விளையில் அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை விமர்சித்து ஓபிஎஸ் ஆதரவாளரால் போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது. ஓபிஎஸ் அணியின் நெல்லை மாவட்டம் நாங்குநேரி தொகுதி அமைப்பாளராக இருப்பவர் டென்சிங் சுவாமிதாஸ். இவர் திசையன்விளை சுற்றுவட்டார பகுதிகளில் "எட்டு தோல்வி எடப்பாடி" என்ற தலைப்பில் அதிமுக ஈபிஎஸ் தலைமையில் தொடர் தோல்விகளைச் சந்தித்து வருவதை விமர்சித்து போஸ்டர்களை ஒட்டியுள்ளார்.

உடனே ராஜினாமா செய்யவும்
ஆர்.கே.நகர் இடைத்தேர்தல், 2019 நாடாளுமன்றத் தேர்தல், 2019ல் நடந்த 22 சட்டசபை தொகுதிகளுக்கான இடைத்தேர்தல், 2019 ஊரக உள்ளாட்சி தேர்தல், 2021 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல், 2021ல் நடந்த 9 மாவட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தல், 2022ல் நடந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல், 2023 ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல், என தொடர் தோல்விகளை சந்தித்து வருகிறது. 8 தோல்விகளை கண்ட எடப்பாடி பழனிசாமி எனவும் உடனடியாக எதிர்க்கட்சித் தலைவர் பதவியை ராஜினாமா செய்யவும் என டென்சிங் ஸ்வாமிதாஸ் போஸ்டர்கள் அடித்து ஒட்டியுள்ளார்.

பதவிக்கு
ஓ.பன்னீர்செல்வத்தை எதிர்க்கட்சி துணைத் தலைவர் பதவியை விட்டு நீக்கிவிட்டு ஆர்.பி.உதயகுமாரை எதிர்க்கட்சித் துணைத் தலைவராக நியமிக்க வேண்டும் என சபாநாயகருக்கு ஈபிஎஸ் தொடர்ந்து அழுத்தம் கொடுத்து வரும் நிலையில், ஓ.பன்னீர்செல்வம் தரப்பு நிர்வாகி, எடப்பாடி பழனிசாமியை எதிர்க்கட்சித் தலைவர் பதவியில் இருந்து விலகுமாறு வலியுறுத்தியுள்ளார். இந்த போஸ்டர் அதிமுகவினர் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஓபிஎஸ் தரப்பு பிளான்
உச்ச நீதிமன்ற தீர்ப்பும் தங்களுக்கு பாதகமாக அமைந்ததால் கடுமையான பின்னடைவைச் சந்தித்த ஓ.பன்னீர்செல்வம் தரப்பு, ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் அதிமுக படுதோல்வியை தங்களுக்கான அரசியல் ஆயுதமாக பயன்படுத்த திட்டமிட்டுள்ளது. எடப்பாடி பழனிசாமி வசம் அதிமுக வந்த பிறகு தேர்தலில் தோல்வி மட்டும் மிச்சம் என்பதை ஓபிஎஸ் தரப்பு சுட்டிக்காட்டி அதிமுக தொண்டர்கள் மத்தியில் நியாயம் கேட்கத் தொடங்கி இருக்கிறது. இது அதிமுக தொண்டர்கள் மத்தியில் தாக்கத்தை ஏற்படுத்துமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்..












Click it and Unblock the Notifications