இதுதான் நெல்லை கெத்து! கொலையாளியை சுற்றிவளைத்து வக்கீலை காப்பாற்றிய பொதுமக்கள்! திசையன்விளையில் பரபர
நெல்லை மாவட்டம், திசையன்விளையில் கையில் அரிவாளுடன் சென்ற ஒருவர், வழக்கறிஞரை ஒட ஓட வெட்டினார். அவரை காவலர் ஒருவர் மடக்கி பிடித்தார்.
நெல்லை: திருநெல்வேலி மாவட்டம், திசையன்விளையில் கையில் அரிவாளுடன் சென்ற ஒருவர், வழக்கறிஞரை ஒட ஓட வெட்டிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அரிவாளால் வெட்டியதால் வழக்கறிஞரின் மணிக்கட்டு துண்டானது.
நல்வாய்ப்பாக பொதுமக்கள் அரணாக தடுத்து நின்றதால் வழக்கறிஞர் உயிர் தப்பினார். அரிவாளுடன் மிரட்டிய அந்த இளைஞரை காவலர் ஒருவர் பொதுமக்கள் உதவியுடன் மடக்கி பிடித்து கைது செய்தனர்.
நெல்லை மாவட்டம் திசையன்விளையைச் சேரந்தவர் ராமக்கனி, ஹார்டுவேர்ஸ் கடை நடத்தி வருகிறார். இவரது மகன் வழக்கறிஞர் சிவமராமகிருஷ்ணன். செவ்வாய்க்கிழமை இரவு 11 மணி அளவில் கடையை மூடிக்கொண்டிருந்தார். அப்போது அங்கு இரண்டு மர்ம நபர்கள் வந்தனர். அவர்கள் சிவராமகிருஷ்ணனின் தலையில் கம்பால் அடித்து அரிவாளால் வெட்டினர். இதில் அவரது இடது கையில் வெட்டுபட்டு மணிக்கட்டு துண்டான நிலையில் தப்பி ஓடினார். அருகில் இருந்த மளிகைக்கடைக்குள் அவர் தஞ்சம் அடைந்தார்.

தடுத்த மக்கள்
அப்போது கையில் அரிவாளுடன் விரட்டிச் சென்ற ஆசாமியை கடைக்குள் நுழைய விடாமல் அங்கிருந்த மக்கள் தடுத்தனர். மீறி உள்ளே சென்றால் தாக்குவோம் என கல் மற்றும் கம்புகளுடன் பொதுமக்கள் தடுத்து நின்றனர். அந்த ஆசாமி அரிவாளுடன் தாக்குதல் நடத்துவது பற்றி போலீசுக்கு தகவல் கொடுத்தனர்.

தர்ம அடி
காவலர் ஒருவர் லாவகமாக, அந்த நபரிடம் அரிவாளை கீழே போடச் சொல்லி பேச்சுவார்த்தை நடத்தினார். சுற்றிலும் வக்கீலின் உறவினர்களும், ஊர்க்காரர்களும் அரிவாள், கம்புடன் நின்றதாலும், போலீஸ்காரர் கேட்டுக்கொண்டதாலும், கொலை செய்ய வந்த நபர் அரிவாளை கீழே போட்டார். உடனே அவரை போலீஸ்காரர் மடக்கிப்பிடித்தார். இதை பார்த்ததும், ஊர் மக்கள் ஒன்றுகூடி கொலைமுயற்சியில் ஈடுபட்ட நபருக்கு தர்ம அடி கொடுத்தனர். அதேநேரம் படுகாயம் அடைந்த வழக்கறிஞரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். இதற்கிடையே வழக்கறிஞரை அரிவாளால் வெட்ட முயன்ற நபர் யார் என்பது தெரியவந்தது. அவர் தூத்துக்குடி மாவட்டம் இடைச்சிவிளையை சேர்ந்த பிரசாத் என்பது தெரியவந்தது. திசையன்விளைக்கு பக்கத்து ஊர்தான் இடைச்சிவிளையாகும்.

சிறையில் அடைப்பு
பிரசாந்தின் தாத்தா சொத்தை வழக்கறிஞர் சிவமராமகிருஷ்ணனின் தந்தை அபகரித்துவிட்டதாக கூறி நீதிமன்றத்தில் வழக்கு போட்டிருக்கிறார். தீர்ப்பு சிவராமகிருஷ்ணனின் தந்தை ராமக்கனிக்கு சாதகமாக வந்துள்ளது இதனால் ஆத்திரம் அடைந்த அவர் ராமக்கனியை கொல்ல வந்துள்ளார். ஆனால் ராமக்கனி இல்லாததால் சிவராமகிருஷ்ணனை கொல்ல முயன்றது போலீசாரின் விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து பிரசாந்த் மற்றும் அவருடன் வந்த முருகன் ஆகியோரை கைது செய்த போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

போலீசார் விசாரணை
இதனிடையே மதுரை அண்ணா நகர் பகுதியில் கையில் அரிவாளுடன் பொதுமக்களை விரட்டிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. யாராவது வந்தா வெட்டிருவேன் என பட்டப்பகலில் கையில் அரிவாளுடன் இளைஞர் சுற்றிய வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி உள்ளது. சாலையில் சென்றவர்களை தாக்க முயற்சிக்கும் வகையில் அந்த வீடியோ உள்ளது. இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். யார் என்பது இதுவரை தெரியவரவில்லை.












Click it and Unblock the Notifications