உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் விழாவுக்கு முட்டுக்கட்டை! அன்பில் மகேஷிடம் சென்ற பஞ்சாயத்து!
தென்காசி: தென்காசி மாவட்டம் ஆலங்குளத்தில் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் விழாவுக்கு அங்குள்ள சில நிர்வாகிகள் முட்டுக்கட்டை போட்ட விவகாரம் அக்கட்சியின் தலைமையை கடும் கோபம் கொள்ளச் செய்துள்ளது.
முன்னாள் அமைச்சர் பூங்கோதை ஆலடி அருணாவை கட்சிக் கொடி ஏற்றவிடாமல் நிர்வாகிகள் சிலர் தடுக்க முயன்றதாகவும், அமைச்சர் அன்பில் மகேஷ் தலையிட்டு நிலைமையை சுமூகமாக்கியதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இதனால் இந்த விவகாரத்தை மிக சீரியஸாக பார்க்கும் திமுக தலைமை விரைவில் சில அதிரடிகளை அரங்கேற்றும் எனக் கூறப்படுகிறது.
தமிழகத்தில் சொந்த தொகுதிகளிலேயே தோல்வியடைந்த நட்சத்திர வேட்பாளர்கள்.. ஜெயக்குமார் முதல் பூங்கோதை வரை
தென்காசி மாவட்டம்
திமுக இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளை ஒட்டி அரசுப் பள்ளி மாணவர்கள் 2,000 பேருக்கு டிக்ஸ்னரி வழங்கிய முன்னாள் அமைச்சர் பூங்கோதை ஆலடி அருணா, ரெட்டியார்பட்டி என்ற ஊரில் திமுக கொடி ஏற்றச் சென்றிருக்கிறார். அப்போது அவருக்கு எதிர்ப்பு தெரிவித்த சில நிர்வாகிகள், கட்சிக் கொடியேற்றவிடாமல் முட்டுக்கட்டை போட்டிருக்கின்றனர். பூங்கோதை தரப்பு எவ்வளவோ எடுத்துக்கூறியும், எதிர்ப்பில் இருந்து அந்த நிர்வாகிகள் பின்வாங்கவில்லையாம்.
கட்சிக்கொடி
இதையடுத்து இந்த புகார் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியின் கவனத்துக்கு சென்றதை அடுத்து, கட்சியின் இளைஞரணிச் செயலாளர் பிறந்தநாளை ஒட்டி அந்தம்மா கொடியேற்றுகிறார், அதில் உங்களுக்கு என்ன பிரச்சனை என லெஃப்ட் அண்ட் ரைட் வாங்கியிருக்கிறார். இதையடுத்து வேறுவழியின்றி முன்னாள் அமைச்சர் பூங்கோதை ஆலடி அருணாவை கொடியேற்ற விடாமல் தடுத்து நின்ற கோஷ்டி கலைந்து சென்றிருக்கிறது.
போஸ்டர் கிழிப்பு
மேலும், உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளை ஒட்டி ஆலங்குளம் பகுதியில் ஒட்டப்பட்டிருந்த போஸ்டர்களும் கிழிக்கப்பட்டுள்ளன. ஸ்டாலின் மற்றும் உதயநிதி ஸ்டாலின் ஆதரவாளராக பூங்கோதை தன்னை அடையாளப்படுத்திக் கொள்ளும் நிலையில் அவரது சகோதரர் எழில்வாணன் கனிமொழியின் தீவிர ஆதரவாளராக தன்னைக் காட்டிக்கொள்வது கவனிக்கத்தக்கது.
மிக சீரியஸ்
இதனிடையே உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் விழாவுக்கே இந்த நிலை என்றால் இதன் பின்னணியில் யார் இருக்கிறார்கள் என்பது குறித்து திமுக தலைமை மிக சீரியஸாக ஆராயத் தொடங்கியிருக்கிறது. தென்காசி மாவட்டச் செயலாளர் சிவபத்மநாதன் மீது ஏற்கனவே அவரது எதிர்தரப்பினர் கட்டுக்கட்டாக புகார் ஓலைகளை அறிவாலயத்துக்கு அனுப்பி வரும் வேளையில், இந்த விவகாரமும் அவருக்கு புதிய தலைவலியை கொடுக்கும் எனக் கூறப்படுகிறது.