பள்ளியில் சாதி ரீதியான மோதல்! மாணவர் ஒருவர் பரிதாபமாகப் பலி.. 3 மாணவர்கள் மீது கொலை வழக்கு பதிவு
திருநெல்வேலி: நெல்லையில் மாணவர்களுக்கு இடையே ஏற்பட்ட சாதி மோதலில் ஒரு மாணவர் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தமிழ்நாட்டில் உள்ள பள்ளிகளில் கடந்த சில காலமாகவே ஆசிரியர்களை மாணவர்கள் தரக்குறைவாகப் பேசுவது, மாணவர்களுக்கு இடையே கொடூரமாகத் தாக்கிக் கொள்வது போன்ற செயல்கள் அதிகரித்து வருகிறது.
கொரோனா வைரஸ் காரணமாகப் பல வாரங்களுக்குப் பின்னர், பள்ளிகள் இப்போது தொடங்கப்பட்டு உள்ள நிலையில், இது போன்ற சம்பவங்கள் அதிகரித்து வருகிறது.

புதுக்குடி பள்ளி
இதனிடையே இப்போது நெல்லை மாவட்டத்தில் இதேபோன்ற சம்பவம் ஒன்று அரங்கேறி உள்ளது. திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் பகுதியை அடுத்துள்ள பள்ளக்கால் புதுக்குடியில் அரசு மேல்நிலைப்பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. அப்பகுதியைச் சுற்றியுள்ள கிராமங்களில் இருக்கும் பெரும்பாலான மாணவர்கள் இந்தப் பள்ளியில் தான் படித்து வருகிறார்கள்.

மோதல்
கடந்த சில வாரமாக இப்பள்ளியில் படிக்கும் +2 மாணவர்கள், தங்கள் சமூகத்தின் அடையாளத்தை வெளிப்படுத்தும் வகையில் சாதிக்கயிறு கட்டி வந்ததாகக் கூறப்படுகிறது. இது தொடர்பாக இரு பிரிவினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. +2 மாணவர்கள் சிலர், இந்த விவகாரத்தில் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டு உள்ளனர். இந்த சம்பவம் கடந்த ஏப்ரல் 25ஆம் தேதி நடந்ததாகக் கூறப்படுகிறது.

உயிரிழப்பு
அந்த சமயத்தில். +2 மாணவர் ஒருவர் மற்றொரு பிரிவினர் உடன் தனியாகச் சிக்கியுள்ளார், இதையடுத்து தனியாகச் சிக்கிக் கொண்ட அந்த மாணவரை மற்றொரு பிரிவினர் கொடூரமாகத் தாக்கி உள்ளனர். மேலும், அங்கிருந்த கற்களைக் கொண்டும் அந்த மாணவரைத் தாக்கி உள்ளனர். இதில் படுகாயமடைந்த அந்த மாணவர், சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இருப்பினும், அந்த மாணவர் இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

3 பேர் மீது வழக்குப்பதிவு
சாதி ரீதியான மோதல் காரணமாக +2 மாணவர் பலியாகி உள்ளது பள்ளக்கால் புதுக்குடி பகுதியில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. உயிரிழந்த மாணவனின் உடலை வாங்க மறுத்த உறவினர்கள் உடன் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்கள். முதற்கட்டமாக இது குறித்து பள்ளி மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களிடம் போலீசார் விசாரணையைத் தொடங்கினர். இதையடுத்து முதற்கட்டமாக 3 மாணவர்கள் மீது கொலை வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

சாதி கயிறு
தமிழகத்தில் சில பகுதிகளில் பள்ளிக்கு வரும் மாணவர்கள் இதுபோன்ற சாதி கயிறுகளைக் கட்டி வருவது அதிகரித்து வருகிறது. இது சாதி ரீதியான மோதல்களுக்கு வழிவகை செய்யும் என்றும் எனவே இதைத் தடுக்க அரசு உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.












Click it and Unblock the Notifications