பாஜக ஒரு நடிகரையோ அல்லது ராமதாஸையோ ஆட்சி அமைக்க வைக்கும்.. திருமாவளவன் பரபரப்பு பேச்சு
திருநெல்வேலி: கூட்டணி கட்சிகளின் செயல்வீரர்கள் கூட்டத்தில் பேசிய விசிக தலைவர் திருமாவளவன் எம்பி. திமுகவை பலமிழக்க செய்வதுதான் அனைவரின் நோக்கமாக உள்ளது என்று குற்றம்சாட்டினார்.
திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரி தொகுதியில் இடைத்தேர்தலையொட்டி கூட்டணி கட்சி செயல்வீரர்கள் கூட்டத்தில் சிதம்பரம் தொகுதி எம்பியும், விசிக தலைவருமான தொல் திருமாவளவன் பங்கேற்றார்.

அப்போது பேசிய அவர், மீண்டும் ஆட்சியமைப்பதற்காக பாஜகவுடன் சமரத்திற்கு அதிமுக தயாராகிவிட்டது. திமுகவின் வலிமை குறையும்போது சாதி, மதவெறி பிடித்தவர்கள் ஆட்சி அமைக்கும் சூழல் உருவாகும். திமுகவை பலமிழக்க செய்வதுதான் அனைவரின் நோக்கமாக உள்ளது.
திமுக வலிமை இழக்கும் போது பாஜக ஒரு நடிகரையோ அல்லது ராமதாஸையோ ஆட்சி அமைக்க வைக்கும். ஒரு நடிகர் வருவார் என எதிர்பார்க்கிறோம். இன்னும் எத்தனை பேர் வருவார்கள் என தெரியவில்லை.
ஆனால் திமுக கூட்டணி தொடர்ந்தால் ஒரு நடிகரல்ல, எத்தனை பேர் வந்தாலும் நம்மை அசைக்க முடியாது" என்றார்.
முன்னதாக செயல்வீரர்கள் கூட்டத்தில் பங்கேற்கும் முன் செய்தியாளர்களிடம்பேசிய திருமாவளவன், பாரதிய ஜனதா அரசின் கட்டுப்பாட்டில் அதிமுக உள்ளது. அதிமுக அரசு சுதந்திரமாக செயல்படவில்லை. அதிமுக வழியாக பாரதிய ஜனதா கட்சி தமிழகத்தில் வேரூன்றப் பார்க்கிறது. இதனை தமிழக மக்கள் அனுமதிக்க மாட்டார்கள் என்றார்.












Click it and Unblock the Notifications