உங்கள் சொத்து அரசு புறம்போக்கு நிலமாக மாறும்.. நிலத்தை வாங்கியவர்கள் உடனே இதை பாருங்க
திருநெல்வேலி: தென்காசியில் தனியார் நிலங்கள் அரசு புறம்போக்கு நிலங்களாக மாற்றப்பட்டுள்ளதாகவும், உங்களுடைய நிலம் பரம்பரை நிலமோ, அல்லது வாங்கிய நிலமோ எதுவாக இருந்தாலும் கவனமாக இருக்க வேண்டும் என்றும் இல்லாவிட்டால் உங்கள் நிலம் அரசு நிலமாக மாற்றப்பட்டு, நிலத்தை இழக்கும் அபாயம் ஏற்படும் என்றும் தென்காசி தொகுதி முன்னாள் எம்எல்ஏ டிஎஸ்ஆர் வெங்கட் ரமணா எச்சரித்துள்ளார்.
தென்காசி தொகுதி முன்னாள் எம்எல்ஏவும், காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவரும் வழக்கறிஞருமான டிஎஸ்ஆர் வெங்கட் ரமணா சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் பொதுநல மனு ஒன்றை தாக்கல் செய்தார். அந்த மனுவில், தென்காசி நகரில் தனிநபர்களுக்கு சொந்தமான சுமார் 1000 ஏக்கர் நிலங்கள் அரசு புறம்போக்கு நிலங்களாக கணினி வரைபடத்தில் காட்டுவதாக கூறியிருந்தார்.

இது தொடர்பாக முன்னாள் எம்எல்ஏ டிஎஸ்ஆர் வெங்கட் ரமணா கூறுகையில், எனக்கு சொந்தமான பூர்வீக சொத்துக்களை வாரிசுகளுக்கு எழுதி வைக்க முடிவு செய்தேன்.. அதன்பின்னர் அதற்காக சார்பதிவாளரை அணுகினேன்.. அப்போது தான் எனக்கு அதிர்ச்சியான தகவல் கிடைத்தது. அங்கு எனக்கு சொந்தமான நிலங்கள் அரசுக்கு சொந்தமான நிலம் என்று கணினியில் காட்டியது.. அதாவது எங்களுடைய காலி மனைகள் எல்லாம் சார்கார் புறம்போக்கு என்று இருந்தது..
இதுபற்றி அப்போது கம்ப்யூட்டரில் என் தந்தையின் பெயர் இல்லாமல், அரசு புறம்போக்கு என்று இருக்கிறதே என்று கேட்டேன். அதற்கு அவர்கள் கம்ப்யூட்டரில் தவறு நடந்துவிட்டதாக கூறினார்கள்.. வரி இல்லாத நிலம் எல்லாம் அரசு புறம்போக்கு நிலம் என்று கணினி காட்டுவதாக கூறினார்கள். இதையடுத்து நான் சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை அமர்வில், பொதுநல மனு தாக்கல் செய்தேன்.. அதன்பிறகு தவறை ஒப்புக்கொண்ட அதிகாரிகள், அரசு புறம்போக்கு என்று இருந்ததை என் பெயரில் பட்டா மாற்றித் தந்தார்கள். நிலத்தை வைத்துள்ளவர்கள் இசேவை மையத்திற்கு சென்று பட்டாவை சரிபார்த்துக் கொள்ள வேண்டும் , அரசு புறம்போக்கு நிலம் என்று இருந்தால் உங்கள் பெயரில் மாற்றிக்கொள்ளுங்கள் . இல்லை என்றால் நிலம் வைத்திருப்பவர்கள் அந்த நிலத்தை இழக்கும் அபாயம் இருக்கிறது" என்றார்.
முன்னதாக கடந்த பிப்ரவரி மாதம் தமிழக அரசு வெளியிட்டிருந்த அறிவிப்பில், "மனைக்கான பத்திரங்களைப் பதிவு செய்ய வேண்டுமெனில் வரிவிதிப்பு செய்த ரசீதை பெற்ற பிறகே செய்ய வேண்டும் என உத்தரவிட்டிருந்தது. இதுபற்றி அரசு அப்போது வெளியிட்ட அறிவிப்பில், தமிழ்நாடு முழுவதும் காலி மனைகளாக இருந்தால் அவற்றுக்கும் வரிவிதிப்பு செய்யப்பட வேண்டும். தமிழ்நாட்டில் பெரும்பாலான மாநகராட்சிகளின் எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் காலி மனைகளுக்கு வரி விதிக்காமல் நிதி இழப்பு ஏற்படுவது தெரிய வந்துள்ளது. எனவே காலி மனை வரி விதிப்பு செய்ய பல்வேறு விதிமுறைகளை கடைபிடிக்க வேண்டும்..
உள்ளூர் திட்டக்குழுமத்தில் விண்ணப்பிக்கும் போது, நிலத்தின் குறிப்பிட்ட பகுதிகளை மட்டும் அளவீடு செய்து காலி மனை வரி விதிக்கக் கூடாது. நில உரிமைதாரருக்கு சொந்தமாக உள்ள மொத்த நிலப்பரப்புக்கும், காலி நிலவரி விதிக்கப்பட வேண்டும். விதிகளின்படி காலியிட வரிவிதிப்பு செய்த பின்னரே உள்ளூர் திட்டக் குழுமத்தில் விண்ணப்பம் செய்ய வேண்டும்.
கட்டட உரிமத்தை நீட்டிப்பு செய்யக் கோரும் விண்ணப்பதாரர்களும் தங்களுக்கான காலியிடங்களுக்கு உரிய வரியை முழுமையாக செலுத்தியிருக்க வேண்டும். அத்தகைய கட்டடங்களுக்கு மட்டுமே உரிமை நீட்டிப்பிற்கான பரிந்துரையை உள்ளூர் திட்டக் குழுமம் வழங்க வேண்டும். மாநகராட்சி எல்லைக்குட்பட்ட பகுதிகளில் உள்ள காலி மனைகளை பத்திரம் செய்ய பலரும் விண்ணப்பிப்பார்கள். அவ்வாறு வந்தால் காலி மனை வரிவிதிப்பு செய்த ரசீது பெற்ற பிறகே, பத்திரங்களை பதிவு செய்து அளிக்க வேண்டும். இது தொடர்பாக பதிவுத்துறை அலுவலகங்களுக்கு உரிய அறிவிப்பு வழங்கப்படும்" இவ்வாறு கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications