நெல்லை மக்களோட பல ஆண்டு ஏக்கம்! ரெடியாகுது மேற்கு பைபாஸ் சாலை! வாகன ஓட்டிகளுக்கு இனி பிரச்சினை இல்லை
நெல்லை: நெல்லையில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் விதமாக மேற்கு புறவழிச்சாலை அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்த நிலையில், மிக விரைவில் இந்த சாலை அமைக்கும் பணிகள் துவங்கும் என்று மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. தென்காசி, பொட்டல்புதூர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து மதுரை, திருச்செந்தூர் செல்லும் வாகன ஓட்டிகள் நெரிசல் இன்றி இந்த புறவழிச்சாலை மூலம் பயணிக்கலாம்.
தென் மாவட்டங்களில் உள்ள மிக முக்கியமான நகரங்களில் ஒன்றான நெல்லை பெரும் வளர்ச்சி அடைந்து வருகிறது. நெல்லை சுற்று வட்டார பகுதிகளில் உள்ள மக்கள் கல்வி, மருத்துவம் உள்ளிட்ட பல்வேறு தேவைகளுக்காக தினமும் நெல்லைக்கு வந்து செல்வது வழக்கம்.

அதுபோக, தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி போன்ற மாவட்டங்களை சேர்ந்த மக்களும் சொந்த ஊர்களுக்கு செல்லும் போதும், வரும்போதும் நெல்லை சந்திப்பு ரயில் நிலையம் வந்தே செல்வது வழக்கம். இதனால் நெல்லையில் நாளுக்கு நாள் போக்குவரத்து நெரிசல் என்பது அதிகரித்து வருகிறது. திருநெல்வேலி புதிய பஸ் நிலையத்தில் இருந்து தென்காசி, கடையம் மற்றும் பாபநாசம்(வழி முக்கூடல்) வழியாக இயக்கப்படும் பேருந்துகள் அனைத்தும் நெல்லை சந்திப்பு ரயில் நிலையம், நெல்லை டவுன், பேட்டை வழியாக செல்லும்.
இதன் காரணமாக நெல்லை சந்திப்பு ரயில் நிலையத்தில் இருந்து நெல்லை டவுன் வரை போக்குவரத்து நெரிசல் அதிகமாக இருக்கும். இப்பகுதியில் உள்ள சாலைகள் குறுகலானது என்பதால் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதில், பீக் நேரங்களில் முக்கூடல் வழியாக கடையம், பாபநாசம் செல்லும் பேருந்துகளில் பயணிக்கும் பயணிகள் எல்லாரும், எப்போது தான் பஸ் சுத்தமல்லியை தாண்டும் என்று நினைத்துக்கொண்டே செல்வர். அந்த அளவுக்கு பஸ்கள் ஊர்ந்து செல்லும்.
இந்த நிலையில் தான் நெல்லையில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் விதமாக மேற்கு புறவழிச்சாலை அமைக்கும் திட்டத்தை முதல்வர் மு.க ஸ்டாலின் கடந்த 2022 ஆம் ஆண்டு அறிவித்தார். இதன்படி, மொத்தம் 31.788 கி.மீட்டர் தொலைவுக்கு இந்த புறவழிச்சாலை அமைக்கப்படும். இந்த சாலையானது நெல்லையில் இருந்து செல்லும் முக்கியமான நான்கு மாநில நெடுஞ்சாலைகள் வழியாக செல்ல திட்டமிடப்பட்டது.
* ராஜபாளையம்- சங்கரன்கோவில் - நெல்லை,
* நெல்லை - பொட்டல்புதூர் சாலை
* திருச்செந்தூர் - பாளையங்கோட்டை - அம்பை - குற்றாலம் - செங்கோட்டை ஆகிய மாநில நெடுஞ்சாலைகளை இணைத்து அமைக்க திட்டமிடப்பட்டது.
இந்த மேற்கு புறவழிச்சாலை வாயிலாக அம்பை, சேரன்மகாதேவி, பொட்டல்புதூர், சங்கரன்கோவில், தென்காசி உள்ளிட்ட நகரங்களில் இருந்து வாகனங்கள் மதுரை, நாகர்கோவில், தூத்துக்குடி, திருச்செந்தூர், உடன்குடி, குலசேகரன்பட்டினம் போன்ற ஊர்களுக்கு நெல்லை சிட்டிக்குள் வராமல் பைபாஸ் வழியாக செல்ல முடியும். இதனால், வாகன ஓட்டிகளின் நேரம் கணிசமாக மிச்சமாகும்.
நெல்லை நகருக்குள்ளும் போக்குவரத்து நெரிசல் குறையும் என்பதால், வாகன ஓட்டிகள் பெரிதும் நிம்மதி அடைவார்கள். இந்த திட்டத்தை மூன்று கட்டமாக செயல்படுத்த அரசு திட்டமிட்டப்பட்டுள்ளது. இதற்கான ஒப்பந்தம் கடந்த 11 ஆம் தேதி முதல் கோரப்பட்டுள்ள நிலையில், விரைவில் ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்டு பணிகள் தொடங்கப்படும் என்று நெல்லை மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
நிர்வாக காரணங்கள் மற்றும் நிலம் கையகப்படுத்துவதில் உள்ள சிக்கல் காரணமாக நெடுஞ்சாலை இணைப்பு பகுதி திட்டத்தில் சில மாற்றங்கள் செயப்பட்டுள்ளன. இதன்படி, தாழையூத்து கிராமத்தில் கூடுதல் நிலம் கையகப்படுத்த வேண்டி உள்ளது. நிலம் கையகப்படுத்தும் பணி முடிந்ததும், நிர்வாக ஒப்புதல் அளிக்கப்பட்டு பணிகள் தொடங்கும். நெல்லை நகருக்குள் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் நோக்கிலும் வெளிமாவட்டங்களில் இருந்து வரும் வாகன ஓட்டிகள் எளிதாக போக்குவரத்து நெரிசல் இன்றி பயணிக்கும் விதமாகவும் இந்த திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.












Click it and Unblock the Notifications