திருட போன திருநெல்வேலி வீட்டில் மேலாடையின்றி ஆனந்த குளியல்.. கேமராவில் கண்ட காட்சி! ஆடிப்போன நெல்லை
திருநெல்வேலி: நெல்லை மாவட்டம் ராஜவல்லிபுரம் அருகே உள்ள மேலபாளமடை பிள்ளையார் கோயில் தெருவில் நடந்த ஒரு விசித்திரமான திருட்டு சம்பவம் அந்தப் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அத்துடன் அந்த திருட்டு தொடர்பான சிசிடிவி காட்சிகளும் தற்போது வெளியாகி சோஷியல் மீடியாவில் வலம் வந்துகொண்டிருக்கின்றன.. என்ன நடந்தது திருநெல்வேலியில்?
மேலபாளமடை பிள்ளையார் கோயில் தெருவை சேர்ந்தவர் முருகன். கட்டுமானத் தொழிலாளியான அவர் இப்போது கேரளாவில் தங்கி வேலை செய்து வருகிறார். அவரது மனைவி அருணாவுக்கு 46 வயதாகிறது.. இவரும் கட்டுமான வேலை செய்து வருகிறார்.

இந்த தம்பதிக்கு இரண்டு மகள்களும், ஒரு மகனும் உள்ளனர். மூத்த மகளுக்கு ஏற்கனவே திருமணம் ஆகி விட்டது. மகன் சென்னையில் வேலை செய்து வருகிறார். இளைய மகள் கல்லூரியில் படித்து வருகிறார். இதனால் அருணாவும், கல்லூரி மாணவியான மகளும் ராஜவல்லிபுரத்தில் உள்ள வீட்டில் மட்டும் வசித்து வந்துள்ளனர்.
பீரோவில் 3000 பணம்
கடந்த மாதம் 11ம் தேதி வழக்கம்போல் அருணா வேலைக்கு சென்றுவிட்டார்.. அவரது மகளும் காலேஜூக்கு கிளம்பி சென்று விட்டார்.. அன்று மாலை இருவரும் வீடு திரும்பியபோது எந்த சந்தேகமும் அவர்களுக்கு ஏற்படவில்லை.
மறுநாள் காலை பீரோவை திறந்து பார்த்தபோது, காலேஜ் ஃபீஸ் கட்டுவதற்காக வைத்திருந்த ரூ.3,000 காணாமல் போயிருந்தது.. இதனால் அருணா அதிர்ச்சியடைந்து,
உடனே உறவினர்கள் வீட்டில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமரா பதிவுகளை சரி பார்த்தார்.. அப்போதுதான் அதே பகுதியைச் சேர்ந்த சுரேஷ் என்ற 19 வயது இளைஞர், வீட்டிற்குள் நுழைந்தது பதிவாகியிருந்தது..
மேலாடை இன்றி ஒரே ஒரு துண்டு
மேலாடை இல்லாமல் மதியம் வீட்டின் மாடி வழியாக அத்துமீறி உள்ளே நுழைந்துள்ளார் சுரேஷ்.. வீட்டின் வெளிக்கதவை இரும்பு கம்பியால் அடைத்துவிட்டு, வீட்டிற்குள் பாத்ரூம் எங்கே உள்ளே என்று தேடி சென்று, ஆனந்த குளியலை போட்டுள்ளார்.. பிறகு குளித்து முடித்ததுமே வீட்டிற்குள் இடுப்பில் ஒரே ஒரு துண்டு மட்டுமே சுற்றிக்கொண்டு, இங்குமங்கும் சுற்றித் திரிந்துள்ளார்..
பிறகு கிச்சனுக்கு சென்று மறைத்து வைக்கப்பட்டிருந்த சாவியை எடுத்து பீரோவை திறந்து, அருணாவின் மகனின் சட்டையை எடுத்து அணிந்து கொண்டார்.. பீரோவில் ரூ.3,000 பணத்தையும் எடுத்து கொண்டு, வெளிப்புற கதவையும் சாத்திக் கொண்டு கிளம்பி சென்றுவிட்டார்.. இது அத்தனையுமே கேமராவில் பதிவாகியுள்ளது.
ஒரு மாத காலம் தீவிர தேடுதல் வேட்டை
இந்த காட்சிகளை பார்த்து உறவினர்கள் அதிர்ச்சியடைந்து, அருணா சீவலப்பேரி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, தலைமறைவான சுரேஷை தேடி வந்தனர்.
கடந்த ஒரு மாத காலமாக தீவிரமான தேடுதல் வேட்டை நடத்தப்பட்ட நிலையில், மேலபாளமடை பகுதியில் அவர் இருப்பதாக ரகசிய தகவல் கிடைத்தது. உடனே அங்கு விரைந்து சென்ற போலீசார் சுரேஷை இன்று கைது செய்தனர். திருட சென்ற வீட்டில் குளித்த இளைஞரின் சிசிடிவி வீடியோதான், இப்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.












Click it and Unblock the Notifications