திருநெல்வேலி பழைய இரும்பு வியாபாரியை மிரள வைத்த தபால்காரர்.. பெட்டியை திறந்ததுமே கண்ட காட்சி
திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் காவல்கிணறு பகுதியில் பழைய இரும்பு கடை நடத்தி வரும் சரவணன் என்பவர், வீடு வீடாக சென்று பழைய பொருட்களை வாங்கி வருகிறார். அப்படி ஒரு வீட்டில் வாங்கிய பெட்டியில், பழைய நோட்டு புத்தகங்களுக்கு இடையே புதிய ஆதார் அட்டைகள் வினியோகிக்கப்படாமல் கட்டுக்கட்டாக இருந்தது. இதனால் சரவணன், பணகுடி போலீசாருக்கும், வருவாய்த்துறையினருக்கும் தகவல் தெரிவித்தார். விசாரணையில் தபால்காரர் ஒருவர் சிக்கியுள்ளார்.
இன்றைக்கு ஆதார் கார்டு என்பது அத்தியாவசியமான ஒன்று. பிறப்பு முதல் கடைசியில் சுடுகாட்டில் புதைக்கும் வரை எல்லாவற்றுக்கும் ஆதார் கார்டு வேண்டும். ஆதார் இருந்தால் தான் வங்கி கணக்கு தொடங்க முடியும். ஆதார் இருந்தால் தான் பள்ளியில் குழந்தைகள் படிப்பை முடிக்க முடியும். ஆதார் இருந்தால் தான் உயர் கல்வியில் சேர முடியும்.

பாஸ்போர்ட், ரேஷன் கார்டு, டிரைவிங் லைசென்ஸ், வீடு, நிலம் வாங்க, வீடு , நிலம் விற்க, மகளிர் உரிமை தொகை வாங்க, ரேஷன் கார்டில் பெயர் சேர்க்க, ரேஷன் கார்டில் பெயர் நீக்க, வாரிசு சான்றிதழ் வாங்க, பான் கார்டு வாங்குவதற்கு, வங்கி கடன் வாங்குதற்கு, முதியோர் உதவி தொகை, விதவையர் உதவி தொகை, திருமண உதவி தொகை, கல்வி உதவி, மாற்றுத்திறனாளி உதவி தொகை, செல்போனுக்கு சிம் கார்டு வாங்க என அனைத்து சேவைகளுக்கும் ஆதார் கார்டு கட்டாயம் ஆகும்.
அப்படிப்பட்ட ஆதார் கார்டுகள் அனைத்தும் விநியோகிக்காமல் குப்பையில் கிடந்தால் எப்படி இருக்கும். தபால்காரர் ஒருவர் ஆதார் கார்டை விநியோகிக்காமல், பழைய இரும்பு கடை வியாபாரியிடம் விற்றுள்ளார். திருநெல்வேலி பகுதியில் நடந்த சம்பவம் பற்றி பார்ப்போம்.
திருநெல்வேலி மாவட்டம் காவல்கிணறு பகுதியைச் சேர்ந்தவர் சரவணன் என்பவர் அப்பகுதியில் பழைய இரும்பு கடை நடத்தி வருகிறார். ஜனவரி 6ம் தேதியான நேற்று காலையில் சரவணன் வடக்கன்குளம் பகுதியில் வீடு வீடாக சென்று பழைய பொருட்களை விலைக்கு வாங்கினார். அங்குள்ள கடைகளிலும் பழைய பொருட்களை வாங்கினார். பின்னர் அவற்றை தனது கடைக்கு கொண்டு வந்து தரம் பிரித்தார். அப்போது பழைய நோட்டு புத்தகங்களுக்கு இடையே புதிய ஆதார் அட்டைகள் வினியோகிக்கப்படாமல் கட்டுக்கட்டாக இருந்தது தெரிய வந்தது.
மேலும் புதிய வாக்காளர் அடையாள அட்டைகள், வங்கி கடிதங்கள் போன்றவையும் வினியோகிக்கப்படாமல் இருந்தன. அதாவது, வடக்கன்குளம் அருகே ஆவரைகுளம் பகுதியைச் சேர்ந்தவர்களுக்கு வழங்குவதற்காக தபாலில் அனுப்பப்பட்ட 153 ஆதார் அட்டைகள், 13 வாக்காளர் அடையாள அட்டைகள் மற்றும் பல்வேறு வங்கி கடிதங்களை உரியவர்களிடம் வழங்காமல் பழைய நோட்டு புத்தகங்களுடன் எடைக்கு விற்றதை பழைய இரும்பு வியாபாரி சரவணன் கண்டுபிடித்தார்.
இதுகுறித்து பழைய இரும்பு வியாபாரி சரவணன் பணகுடி போலீசாருக்கும், வருவாய்த்துறையினருக்கும் தகவல் கொடுத்தார். இதையடுத்து போலீசார் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் நேரில் வந்து விசாரித்தனர். ஆவரைகுளம் பகுதியில் உள்ளவர்களுக்கு வழங்குவதற்காக தபாலில் அனுப்பப்பட்ட ஆதார் அட்டைகள், வாக்காளர் அடையாள அட்டைகள் போன்றவற்றை தபால்காரர் உரியவர்களுக்கு வழங்காமல், மொத்தமாக வைத்து பழைய இரும்பு வியாபாரியிடம் எடைக்கு விற்றது தெரியவந்தது. இதுதொடர்பாக விசாரித்து உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று கூறினார்கள்.












Click it and Unblock the Notifications