3 பேரை காவு வாங்கிய ரயில்..2011 முதல் முடங்கி கிடக்கும் மேம்பால பணி! திருவள்ளூரில் மக்கள் போராட்டம்
திருவள்ளூர்: திருவள்ளூர் அருகே தண்டவாளத்தை கடக்க முயன்றபோது ஒரு பெண் உட்பட 3 பேர் மின்சார ரயில் மோதி உயிரிழந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த விபத்துக்கு ரயில்வே துறையின் மெத்தன போக்குதான் காரணம் என அப்பகுதி மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர்.
சென்னையிலிருந்து அரக்கோணம், குமிடிப்பூண்டி, வேளச்சேரி, பட்டாபிராம் மார்க்கமாக மின்சார ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இதில் பல்வேறு ரயில் நிலையங்களில் லிப்ட் வசதியோ, நகரும் படிகட்டுகளோ இருப்பதில்லை. எனவே மாற்று திறனாளிகள், முதியவர்கள் தண்டாவளத்தை கடந்து எளிதாக ரயில் நிலையத்தை விட்டு வெளியேறுகிறார்கள். ஆனால் இது சில நேரங்களில் அவர்களின் உயிருக்கே ஆபத்தாக முடிந்துவிடுகிறது.

அப்படியான சம்பவம்தான் இன்று திருவள்ளூர் அருகே நடந்திருக்கிறது. திருவள்ளூர் மாவட்டம் வேப்பம்பட்டியில் தண்டவாளத்தை கடக்க முடியன்ற ஒரு பெண் உட்பட மூன்று பேர் ரயில் மோதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். இது தொடர்பாக வழக்கு பதிவு செய்துள்ள ரயில்வே போலீசார் தீவிர விசாரணையை மேற்கொண்டனர். முதல்கட்ட விசாரணையில் உயிரிழந்தவர்கள் ஒரே குடும்பத்தை சேர்ந்த மனோகரன் (50), அவருடைய மகள்களான தாரணி (20) மற்றும் தர்ஷினி (17) ஆகியோர் என்பது தெரிய வந்திருக்கிறது.
வேம்பம்பட்டியில் ரயில்வே தண்டவாளத்தை கடக்க கடந்த 2011ம் ஆண்டு மேம்பாலம் கட்டும் பணிகள் தொடங்கப்பட்டன. ஆனால் இந்த பணிகள் முடிவு பெறாததால் மக்கள் ஆபத்தான முறையில் தண்டவாளத்தை கடந்து வருகின்றனர். இதனால் அடிக்கடி உயிரிழப்புக்கள் ஏற்பட்டுள்ளன. இன்று ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் பலியாகியுள்ளனர். இந்த உயிரிழப்புக்கு ரயில்வேதுறையின் மெத்தன போக்குதான் காரணம் என்று கூறி அப்பகுதி மக்கள் தற்போது சாலை மறியலில் ஈடுபட்டு வருகின்றனர்.












Click it and Unblock the Notifications