”ஜாலியாக பள்ளிக்கு செல்வேன்.. யாரும் ஒதுக்கமாட்டார்கள்” டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட சிறுமி தான்யா உற்சாகம்
திருவள்ளூர்: முகச்சிதைவு அறுவை சிகிச்சை செய்துகொண்ட சிறுமி தான்யா மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.
திருவள்ளூர் மாவட்டம் ஆவடியை அடுத்த வீராபுரம் பகுதியைச் சேர்ந்தவர்கள் ஸ்டீபன்ராஜ்- சௌந்தர்யா தம்பதியினர். இவர்களின் 9 வயது மகள் தான்யா, அரசுப் பள்ளியில் 4 ம் வகுப்பு படித்து வருகிறார்.
மூன்று வயது வரை சராசரி குழந்தையாக இருந்த தான்யாவின் கன்னத்தில் கரும்புள்ளி ஒன்று தோன்றியது. இதனை ரத்த கட்டி எனப் பெற்றோர்கள் சாதாரணமாக எடுத்துக் கொள்ள, அது நாளடைவில் பாதி முகத்தை சிதைக்கும் அளவிற்கு மாறியுள்ளது. இதன்பின்னர் பெற்றோர் எழும்பூர் மருத்துவமனையில் சிகிச்சை எடுத்தனர்.
ஆனாலும் நாளுக்கு நாள் நோய் அதிகரித்து அதன் பாதிப்பு அவரது கண், கன்னம், வாய் என முகத்தின் பாதியைச் சிதைத்துவிட்டது. மகளின் சிகிச்சைக்காக பலரிடமும் கடன் பெற்று மருத்துவமனைகளில் சிகிச்சைகளை தொடங்கிய பெற்றோருக்கு, எதுவும் கைகொடுக்கவில்லை. ஒரு கட்டத்தில் சிறுமியின் சிகிச்சைக்கு பணம் திரட்ட முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.
சிறுமி தான்யாவிற்கு அடுத்த ஹேப்பி நியூஸ்.. படிப்பு செலவை அரசே ஏற்கும்- அமைச்சர் நாசர் அறிவிப்பு
சிறுமியின் கோரிக்கை
அப்போது சிறுமி தான்யா, 'முதலமைச்சர் ஐயா, எனக்கு கன்னம் இப்படி இருக்குறதால யாருமே பேசமாட்றாங்க. எனக்கு நீங்க சரி பண்ணி தாங்க. எனக்கு உங்க மேல நம்பிக்கை இருக்கு' தொலைக்காட்சி வாயிலாக கோரிக்கை வைத்திருந்தார். இதனைத்தொடர்ந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவின் பேரில் தண்டலத்தில் உள்ள சவிதா மருத்துவமனையில் முகச்சிதைவு நோயால் பாதிக்கப்பட்ட சிறுமி தான்யாவிற்கு சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டது.
அறுவை சிகிச்சை
அதேபோல் சிறுமியின் குடும்பத்திற்கு வீடு ஒதுக்கீடு செய்ய இருப்பதாக திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் தெரிவித்தார். பின்னர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்ட சிறுமிக்கு, கடந்த மாதம் 22ம் தேதி அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. மொத்தம் 10 பேர் கொண்ட மருத்துவக்குழு இந்த அறுவை சிகிச்சையை முடித்திருந்தது.
நேரில் சென்ற முதல்வர்
இதனைத்தொடர்ந்து மருத்துவர்களின் கண்காணிப்பில் சிறுமி தான்யா வைக்கப்பட்டிருந்தார். அப்போது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சிறுமியை நேரில் சந்தித்து ஆறுதல் கூறியதோடு, அவரது பெற்றோருக்கு ஆறுதல் தெரிவித்திருந்தார்.
சிறுமி தான்யா டிஸ்சார்ஜ்
இந்த நிலையில் மருத்துவமனையில் இருந்து சிறுமி தான்யா டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். இதனைத்தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து தான்யா கூறுகையில், என் கன்னம் சரியாகிவிட்டது. நான் வீட்டிற்கு செல்லவுள்ளேன். இதனால் மகிழ்ச்சியாக உள்ளது. எனது பள்ளிக்கு சென்று படித்து, முதலமைச்சரின் பெயரை காப்பாற்றுவேன்.
அமைச்சர் நாசார் அறிவிப்பு
அமைச்சர் நாசர் என்னை ஒருநாள் தவறாமல் வந்துபார்த்தார். முதலமைச்சர் ஸ்டாலினும் என்னை நேரில் சந்தித்து நலம் விசாரித்தார். ஜாலியாக பள்ளிக்கு செல்வேன். இனி என்னை யாரும் ஒதுக்க மாட்டார்கள். டாக்டராவதே கனவு என்று தெரிவித்தார். இதனைத்தொடர்ந்து அமைச்சர் நாசர், மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் ஆகியோர் சிறுமி தான்யாவை அவரது பெற்றோருடன் வீட்டிற்கு அனுப்பி வைத்தனர். அதேபோல் சிறுமி தான்யாவின் கல்வி செலவை தமிழக அரசே ஏற்கும் என்று அமைச்சர் நாசர் அறிவித்தார்.