பெண்ணுக்கு குளிர்பானத்தில் மயக்க மருந்து.. நிர்வாண வீடியோ எடுத்து மிரட்டிய வழக்கறிஞர் கைது
திருவள்ளூர்: விவாகரத்துக்காக வந்த பெண்ணிடம் குளிர்பானத்தில் மயக்க மருந்து கொடுத்து நிர்வாண படம் எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிடுவேன் என பணம் கேட்டு மிரட்டியதாக பெண் கொடுத்த புகாரின் பேரில் வழக்கறிஞர் கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Recommended Video
திருவள்ளூர் அடுத்த மணவாளநகர் பகுதியைச் சேர்ந்த இளம் பெண் கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வாழ்ந்து வந்துள்ளார். இந்நிலையில் விவாகரத்து பெறுவதற்காக திருவள்ளூர் அடுத்த மணவாளநகர் பகுதியைச் சேர்ந்த வழக்கறிஞர் டார்ஜன் (44) என்பவரை அணுகியுள்ளார்.
மேலும் ஏழ்மையில் அந்த பெண் இருந்ததால் தான் இலவசமாக வழக்கை நடத்தி கொடுப்பதாகவும் டார்ஜன் தெரிவித்துள்ளார்.
ஆவணங்கள்
இதையடுத்து வழக்கு தொடர்பாக சில முக்கிய ஆவணங்களை தனது வீட்டுக்கு கொண்டு வருமாறு டார்ஜன் கூறியதையடுத்து அந்த பெண் மணவாளநகரில் உள்ள வீட்டிற்கு சென்றார். அங்கு அவருக்கு மயக்க மருந்து கலந்த குளிர்பானத்தை கொடுத்துள்ளார்.
நிர்வாணம்
அதை அருந்திய சிறிது நேரத்தில் அந்தப் பெண் மயங்கியுள்ளார். அப்போது டார்ஜன் அந்த பெண்ணை நிர்வாணமாக்கி, புகைப்படம் எடுத்ததாக கூறப்படுகிறது. மயக்கம் தெளிந்தபின்னர் தன்னிடம் டார்ஜன் அத்துமீறியதை அந்த பெண் உணர்ந்தார்.
ஆத்திரம்
இதையடுத்து டார்ஜனிடம் வாக்குவாதத்திலும் அந்த பெண் ஈடுபட்டுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த டார்ஜன் நடந்தவற்றை வெளியே கூறினால் புகைப்படங்களை சமூகவலைதளங்களில் பதிவிட்டு விடுவேன் என மிரட்டியுள்ளதாகவும் கூறப்படுகிறது. மேலும் இந்த புகைப்படங்களை வெளியே விடாமல் இருக்க ரூ 7 லட்சம் கொடுக்குமாறு அந்த பெண்ணையும் மிரட்டினாராம்.
ரூ 3 லட்சம்
இதனால் அச்சமடைந்த அந்த பெண் தனது மானம் பறி போகக் கூடாது என்பதற்காக முதலில் ரூ 3 லட்சம் பணத்தை கொடுத்துள்ளார். பின்னர் சில நாட்களுக்கு பிறகு மீண்டும் அந்த பெண்ணை டார்ஜன் மிரட்டி மேற்கொண்டு ரூ 4 லட்சத்தை கொடுக்குமாறு மிரட்டியதாக தெரிகிறது. பணத்தை தராமல் போலீஸுக்கு போனால் ஒவ்வொரு படங்களாக வெளியிடுவேன் என மிரட்டியதால் அந்த பெண் டார்ஜனின் மனைவியை அணுகினார்.
வழக்கறிஞரின் மனைவியும் உடந்தை
ஆனால் டார்ஜனின் மனைவியோ கணவருக்கு உடந்தையாக இருந்து கொண்டு அவரும் சேர்ந்து அந்த பெண்ணை மிரட்டியது தெரியவந்தது. இதனால் வேறு வழியில்லாமல் போலீஸாரை அந்த பெண் நாடியுள்ளார். திருவள்ளூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் காவல் ஆய்வாளர் ராஜாமணி வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
கொடைக்கானல்
இதையடுத்து தலைமறைவாக இருந்த டார்ஜனை தேடி வந்த நிலையில் அவர் கொடைக்கானலில் பதுங்கி இருப்பது தெரியவந்தது. இதையடுத்து தனிப்படை போலீஸார் கொடைக்கானல் சென்று டார்ஜனை கைது செய்து திருவள்ளூர் மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.