4 எம்.எல்.ஏக்களும் எடப்பாடி போட்ட பிச்சை! "புண்ணாக்கு" வார்த்தையை விட்ட மாஜி! அண்ணாமலை மீது அட்டாக்!
திருவள்ளூர் : பாஜக பெற்ற நான்கு எம்.எல்.ஏக்கள் அதிமுக போட்ட பிச்சை என அதிமுக முன்னாள் எம்.பி திருத்தணி கோ.ஹரி பேசியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த பல மாதங்களாக தமிழகத்தில் எதிர்க்கட்சி யார் என்பதில் பாஜக - அதிமுக இடையே வார்த்தைப் போர் நிகழ்ந்து வருகிறது. நாங்கள் தான் எதிர்க்கட்சியாகச் செயல்படுகிறோம் என அண்ணாமலை உள்ளிட்ட பாஜக தலைவர்கள் கூறி வந்தனர்.
இந்நிலையில், அதிமுக முன்னாள் எம்.பி கோ.ஹரி, அண்ணாமலையையும், பாஜகவையும் கடுமையாக விமர்சித்துப் பேசியுள்ளார்.
கூட்டணி கட்சியான பாஜகவை ஈபிஎஸ் ஆதரவாளரான கோ.ஹரி கடுமையாகத் தாக்கிப் பேசியுள்ளது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஈபிஎஸ் ஆதரவாளரான அதிமுக முன்னாள் எம்.பி ராதாகிருஷ்ணன் மறைவு.. அதிர்ச்சியில் தொண்டர்கள்!
அதிமுக ஆர்ப்பாட்டம்
சொத்து வரி, மின் கட்டணம், பால் விலை உயர்வு, சட்டம் ஒழுங்கு சீர்கேடு உள்ளிட்டவற்றுக்காக தமிழக அரசைக் கண்டித்து தமிழகம் முழுவதும் அதிமுக நகர் கழகங்கள் சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. திருவள்ளூர் மேற்கு மாவட்டம் திருத்தணி நகர அதிமுக சார்பில் விலைவாசி உயர்வை கட்டுப்படுத்தக் கோரி முன்னாள் அமைச்சரும் திருவள்ளூர் மேற்கு மாவட்ட செயலாளருமான பி.வி.ரமணா தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
பாஜகவால் வெற்றி பெற முடியாது
இதில் அதிமுக அமைப்பு செயலாளரும் முன்னாள் எம்.பியுமான திருத்தணி கோ.ஹரி உள்ளிட்ட மாவட்ட, ஒன்றிய, நகர கழக நிர்வாகிகள் பங்கேற்றனர். இந்த ஆர்ப்பாட்டத்தில், திமுக அரசைக் கண்டித்து கண்டன கோஷங்களை எழுப்பினர். அப்போது பேசிய ஈபிஎஸ் ஆதரவாளரான அதிமுக அமைப்புச் செயலாளர் கோ.ஹரி, எந்தக் காலத்திலும் பாஜகவால் தமிழகத்தில் வெற்றி பெற முடியாது எனப் பேசினார்.
அதிமுக போட்ட பிச்சை
மேலும் பேசிய அவர், 4 தொகுதிகளை வென்ற பாஜக தன்னை எதிர்க்கட்சியாக நினைத்துக் கொண்டுள்ளது. நாங்கள் எதிர்க்கட்சி இல்லையா? புண்ணாக்கு.. வெறும் 4 எம்.எல்.ஏ. அதுவும், அதிமுக போட்ட பிச்சை, குறிப்பாக எடப்பாடி பழனிசாமி போட்ட பிச்சையாலேயே அந்த 4 தொகுதிகளிலும் வெற்றி பெற்றது. 66 எம்.எல்.ஏக்களை வைத்திருக்கும் நாங்கள் எதிர்க்கட்சி இல்லையா? எனக் கேள்வி எழுப்பினார்.
மீடியாவில் பெயர் வர
மேலும், நாள்தோறும் நாளிதழ்கள், மீடியாக்களில் தன் பெயர் வரவேண்டும் என்பதற்காகவே பாஜக தலைவர் அண்ணாமலை எதை எதையோ பேசி வருகிறார் என்று விமர்சித்துள்ளார் கோ.ஹரி. கூட்டணி கட்சியான பாஜகவைப் பற்றி, எடப்பாடி பழனிசாமி ஆதரவாளரான அதிமுக முன்னாள் எம்.பி ஹரி இப்படி கடுமையாக தாக்கிப் பேசியுள்ளது அதிமுக - பாஜக கூட்டணியில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
சி.வி.சண்முகம்
சமீபத்தில் நெய்வேலியில் பேசிய அதிமுக எம்.பி சி.வி.சண்முகம், திமுகவுடன் பாஜக கூட்டணி வைக்கப்போகிறது. அதனால் விசிக, கம்யூனிஸ்ட் கட்சிகளை திமுக கழற்றி விடப் போகிறது. திமுகவிடம் எங்களுடன் கூட்டணி வையுங்கள் அல்லது காங்கிரஸை கழற்றி விடுங்கள் என்று பாஜக கூறுகிறது என்று பேசி பரபரப்பை ஏற்படுத்தினார். கூட்டணியில் இருக்கும் பாஜக பற்றி சிவி சண்முகம் இப்படி பேசியது சலசலப்பை ஏற்படுத்தியது.
அண்ணாமலை தாக்கு
அதற்கு பதிலடி கொடுத்த அண்ணாமலை, எந்த கட்சி எந்த கட்சியோடு கூட்டணி வைக்கும் என்று அந்தந்த கட்சியில் இருக்கக்கூடிய தலைவர்கள் பேசினார்கள் என்றால் அதில் ஒரு தன்மை இருக்கிறது. யாரோ ஒரு மூன்றாம் கட்ட தலைவர்கள், நாங்கள் திமுகவுடன் கூட்டணி வைக்கிறோம் என்று சொன்னால் அதற்கு என்னால் பதில் சொல்ல முடியாது என்று தெரிவித்திருந்தார். இந்நிலையிலேயே, அதிமுக முன்னாள் எம்.பி ஹரி, பாஜகவையும் அண்ணாமலையையும் கடுமையாக விமர்சித்துப் பேசியுள்ளார்.
உடையும் அதிமுக பாஜக உறவு
அடுத்தடுத்து அதிமுகவினர் பாஜகவை தாக்கிப் பேசி வருவது அரசியல் அரங்கிலும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. அதிமுகவை கைப்பற்றுவதற்கு பாஜக உதவியை ஈபிஎஸ் நாடி வந்தார். ஆனால், பாஜக தலைமை ஓபிஎஸ்ஸுக்கு ஆதரவாக இருப்பதாக கூறப்படும் நிலையில், எடப்பாடி அணியினர், பாஜகவை டைரக்டாக அட்டாக் செய்து பேசி வருவது கூட்டணி உறவிலும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனால், பாஜக - எடப்பாடி அணி இடையே விரிசல் ஏற்பட்டுள்ளது.