என் மகனை பாம்பு கடிச்சிடுச்சு.. 2 பாம்புகளுடன் மருத்துவமனைக்கு ஓடிய தந்தை - திருவள்ளூரில் ஷாக்!
திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அருகே, தனது மகனை கடித்த கட்டுவிரியன் மற்றும் கண்ணாடி விரியன் ஆகிய பாம்புகளை, சிறுவனின் தந்தை கையோடு எடுத்து வந்ததால், திருவள்ளூர் தலைமை அரசு மருத்துவமனையில் பரபரப்பு ஏற்பட்டது.
பாம்பு கடித்தால், என்னவாகுமோ? ஏதாகுமோ என்ற அச்சத்துடன் கடிபட்டவருடன், கடித்த பாம்பையும் மருத்துவமனைக்கு கொண்டு வரும் சம்பவங்கள் அவ்வப்போது நிகழ்கின்றன. அப்படியொரு சம்பவம், திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அருகே அரங்கேறியுள்ளது.
திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அடுத்த கொல்ல குப்பம் கிராமத்தில் வசிப்பவர் மணி. இவரது மனைவி எல்லம்மாள். இந்த தம்பதிக்கு, 7 வயதில் மணி என்ற மகன் உள்ளார். இந்த தம்பதியர், அதே பகுதியில் கூலி வேலை செய்து வருகின்றனர்.
தீபாவளி சீட்டு நடத்தியவர் எஸ்கேப்.. வாடிக்கையாளர்கள் சாலைமறியல்.. திருவள்ளூர் அருகே பரபரப்பு
மகனை கடித்த பாம்புகள்
இந்நிலையில், நேற்று வழக்கம்போல பணி முடித்து விட்டு, வீட்டில் அனைவரும் தூங்கிக் கொண்டிருந்தனர். அப்போது, நள்ளிரவில் கண்ணாடி விரியன் மற்றும் கட்டுவிரியன் பாம்புகள், அவருடைய மகன் மணியை கடித்துவிட்டு, மகன் மேலேயே படுத்திருந்துள்ளன. இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த மணி, அந்த இரண்டு பாம்பைகளையும் கட்டையால் அடித்துக் கொன்றுள்ளார்.
பாம்புகளுடன் வந்த தந்தை
இதனையடுத்து, அரசு மருத்துவமனைக்கு பாம்பு கடித்த தனது மகனை கொண்டு சென்றுள்ளார். அப்போது, மகனை கடித்த அந்த இரண்டு பாம்புகளையும் கையோடு எடுத்துச் சென்றுள்ளார். அங்கு சிறுவனுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து, மேல் சிகிச்சைக்காக திருவள்ளூர் தலைமை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு மகனை கொண்டு சென்றுள்ளார் மணி.
மேல் சிகிச்சை
திருவள்ளூர் தலைமை மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு செல்லும்போதும், மகனை கடித்த இரண்டு பாம்புகளை அவர் எடுத்துச் சென்றுள்ளார். மகனுடன் சிகிச்சைக்கு வந்த தகப்பனார், கையில் பாம்புகளுடன் வந்ததால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து பாம்பு கடித்த சிறுவன் மணி, திருவள்ளூர் தலைமை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
மருத்துவமனையில் பரபரப்பு
பாம்பின் விஷத்திற்கு ஏற்ற வகையில் மருந்துகள் தரப்படும் என்பதால், பாம்பு கடித்த தனது மகனுக்கு சிகிச்சை அளிப்பதற்காக, மகனை கடித்த கட்டுவிரியன் மற்றும் கண்ணாடி விரியன் பாம்புகளை கையோடு எடுத்து வந்ததால், திருவள்ளூர் தலைமை அரசு மருத்துவமனையில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.