கும்மிடிப்பூண்டி சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு..வடமாநில இளைஞருக்கு இரட்டை ஆயுள்..நீதிமன்றம் அதிரடி
திருவள்ளூர்: திருவள்ளூர் அருகே பள்ளி முடிந்து வீட்டிற்கு நடந்து சென்று கொண்டிருந்த சிறுமியை வடமாநில இளைஞர் ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. இந்த வழக்கில் வட மாநில இளைஞருக்கு இரட்டை ஆயுள் தண்டனை வழங்கி திருவள்ளூர் போக்ஸோ நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி அருகே உள்ள ஆரம்பாக்கத்தைச் சேர்ந்த சிறுமி அரசு உதவிபெறும் பள்ளியில் 4 ஆம் வகுப்பு படித்து வந்தார். கடந்த ஜூலை 12 ஆம் தேதி பள்ளி முடிந்து நண்பகலில் வீட்டிற்குச் செல்வதற்காக ஆரம்பாக்கம் ரயில் நிலையத்தைக் கடந்து மாந்தோப்பு வழியாக நடந்து சென்றுள்ளார்.

அப்போது அந்த சிறுமியை பின்தொடர்ந்த மர்ம நபர் ஒருவர் திடீரென சிறுமியை தூக்கிச் சென்று, மாந்தோப்புக்குள் ஆள் இல்லாத இடத்தில் வைத்து பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இதைத்தொடர்ந்து, இந்தி மொழியில் செல்போனில் பேசிய அந்த மர்ம நபர் மற்றொரு நபரையும் அழைத்துள்ளார். இதனை தெரிந்து கொண்ட அச்சிறுமி, அந்த மர்ம நபரின் கண்ணில் மண்ணை வாரி தூவிவிட்டு அங்கிருந்து தப்பித்து வீட்டுக்கு வந்து பெற்றோரிடம் நடந்ததை கூறியுள்ளார்.
இதையடுத்து, சிறுமியின் பெற்றோர் ஆரம்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். ஆனால் போலீஸார் எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல் அலைக்கழித்ததாகக் கூறப்படுகிறது. பின்னர், கோட்டக்கரையில் உள்ள அரசு மருத்துவமனைக்குப் பெற்றோர் சிறுமியை அழைத்துச் சென்றனர். இதற்கிடையே கும்மிடிப்பூண்டி டிஎஸ்பி அலுவலகத்திலும் புகார் அளிக்கப்பட்டது.
அங்கு சிறுமியிடம் டிஎஸ்பி விசாரணை மேற்கொண்டு வாக்குமூலத்தைப் பதிவு செய்தார். பின்னர், மேல் சிகிச்சைக்காக ராயபுரத்தில் உள்ள அரசு ஆர்எஸ்ஆர்எம் மருத்துவமனையில் சிறுமி அனுமதிக்கப்பட்டார். போலீஸார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில், அந்த மர்மநபரின் புகைப்படம் மற்றும் சிசிடிவி வீடியோக்கள் மூலம் அடையாளம் காணப்பட்டார்.
இதையடுத்து, தனிப்படைகள் அமைத்து தேடிய திருவள்ளூர் காவல் துறையினர், சூளூர்பேட்டை ரயில் நிலையத்தில் வைத்து வடமாநில இளைஞரான பிஸ்வகர்மாவை கைது செய்தனர். பின்னர், விசாரணையில் அவர் தில்லியைச் சேர்ந்தவர் என்பது தெரியவந்தது. இதையடுத்து, அந்த நபரின் புகைப்படம், சிறுமியிடம் காட்டப்பட்டு அவர்தான் குற்றவாளி என உறுதி செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து, போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
இந்த வழக்கை திருவள்ளூர் போக்ஸோ நீதிமன்றம் கடந்த 5 மாதங்களாக விசாரித்து வந்தது. இந்நிலையில், இன்று தீர்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த தீர்ப்பில், பிஸ்வகர்மாதான் குற்றவாளி என்றும், அவருக்கு இரட்டை ஆயுள் தண்டனை விதிப்பதாகவும் நீதிபதி தெரிவித்துள்ளார். மேலும், சிறைத் தண்டனையுடன் ரூ. 1.45 லட்சம் அபராதமும் பிஸ்வகர்மாவுக்கு விதிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications