சென்னை அருகே நீச்சல் தெரியாமல் கூவம் ஆற்றில் குளித்தவர் நீரில் மூழ்கி பலி
திருவள்ளூர் மாவட்டம் பிஞ்சிவாக்கம் பகுதியில் கூவம் ஆற்று தடுப்பணையில் நண்பர்களுடன் குளிக்கச் சென்ற இளைஞர் ஒருவர் நீரில் மூழ்கி பலியானார்.
ஆற்றில் குளித்துக்கொண்டிருக்கும்போது காணாமல் போன பிரேம்குமார் என்பவர் அரைமணிநேரம் கழித்து சடலமாக மீட்கப்பட்டார்.
சம்பவம் குறித்து கடம்பத்தூர் போலீசார் வழக்குப்பதிந்து பிரேம்குமார் உடலை அரசு மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பி வைத்தனர்.
அரசு பேருந்தில் மாஸ்க் போடாதவர்களை வறுத்தெடுத்த தேனி ஆட்சியர்.. வீடியோ வைரல்!
கூவம் ஆற்றில் புதிய தடுப்பணை
திருவள்ளூர் மாவட்டம் கடம்பத்தூர் அடுத்த பிஞ்சிவாக்கம் பகுதியில் உள்ளது கூவம் ஆற்று தடுப்பணை. ராணிப்பேட்டை மாவட்டம் கேசாவரம் அணையில் இருந்து திறந்து விடப்படும் உபரி நீரானது கூவம் ஆற்றுப்படுகை வழியாகச் சென்று சென்னை கடற்கரையில் கலக்கிறது. அதாவது கடம்பத்தூர், சட்டரை, திருவேற்காடு, அரும்பாக்கம், சூளைமேடு, சேத்துபட்டு, எழும்பூர், சிந்தாதரிப்பேட்டை வழியாக கடலை சென்றடைகிறது. புதியதாக கட்டப்பட்டு உள்ள இந்த தடுப்பணையில் போலீசாரின் எச்சரிக்கையையும் மீறி பொதுமக்கள் குளிப்பது வழக்கம் என கூறப்படுகிறது.
ஆவடியை சேர்ந்தவர் நீரில் மூழ்கினார்
இந்நிலையில் கூவம் ஆற்றின் பிஞ்சிவாக்கம் தடுப்பணையில் கசவநல்லாத்தூர் வைஷாலி நகரைச் சேர்ந்த ஜாவித் மற்றும் ஆவடி பகுதியைச் சேர்ந்த பிரேம்குமார் இருவரும் குளிக்கச் சென்றுள்ளனர். இரண்டு பேரும் குளித்துக்கொண்டிருக்கும்போது பிரேம்குமார் என்பவர் மட்டும் தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டார். பிரேம்குமாருக்கு நீச்சல் தெரியாது என கூறப்படுகிறது. அதனால் அதிர்ச்சி அடைந்த ஜாவித் கூச்சலிட்டார். உடனடியாக ஜாவித்துடன் சேர்ந்து அங்கு குளித்துக் கொண்டிருந்த மற்றவர்கள் தேட ஆரம்பித்தனர்.
நீரில் மூழ்கி உயிரிழப்பு
சுமார் அரைமணிநேரம் தேடினர். இதற்கிடையே தடுப்பணையில் இருந்து சுமார் ஒரு கிலோ மீட்டர் தொலைவில் பிரேம்குமார் கரை ஒதுங்கினார். உடனடியாக அவரை மீட்ட பொதுமக்கள் மயக்க நிலையில் இருப்பதாக நினைத்தனர். அவரை இருசக்கர வாகனத்தில் அமரவைத்து கடம்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பிரேம்குமாரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதனால் மனவேதனை அடைந்த ஜாவித் பிரேம்குமாரின் குடும்பத்தாருக்கு தகவல் அளித்தார்.
உடற்கூறு ஆய்வு
பிரேம்குமார் இறப்பு செய்தி கேட்டு கடம்பத்தூர் போலீசார் கடம்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு விரைந்தனர். பின்னர் வழக்குப்பதிவு செய்து பிரேம்குமார் உடலை திருவள்ளூர் அரசு மருத்துவணைக்கு உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பி வைத்தனர். தகவல் அறிந்து வந்த பிரேம்குமாரின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் அவரது உடலை பார்த்து கதறி அழுதனர்.