3 நாட்களில் சரியாகிடும்! ‘ப்ளூ’ காய்ச்சலை கண்டு பயம் வேண்டாம்! அமைச்சர் மா.சுப்பிரமணியன் நம்பிக்கை!
திருவள்ளூர்: தமிழகத்தில் டெங்கு, ப்ளூ, காய்ச்சல் பாதிக்கப்பட்டவர்கள் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு, அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். காய்ச்சலைக் கட்டுப்படுத்தும் வகையில், தமிழகம் முழுவதும் 1000 இடங்களில் சிறப்பு காய்ச்சல் முகாம் நடத்தப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக வைரஸ் காய்ச்சல் வேகமாக பரவி வரும் நிலையில், இந்த காய்ச்சலால் குழந்தைகள் மற்றும் வயதானவர்கள் அதிக அளவில் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த காய்ச்சலைக் கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. ஆனாலும் சில மாவட்டங்களில் பாதிப்பு சற்று அதிகமாகவே உள்ளது.
6 மாவட்டங்களில் புதிய மருத்துவக் கல்லூரிகள் - அமைச்சர் மா. சுப்பிரமணியன் தகவல்!
1000 இடங்களில் காய்ச்சல் முகாம்கள்
திருவள்ளூர் மாவட்டம் பூந்தமல்லியை அடுத்த கோளப்பன்சேரி ஊராட்சி மன்ற அலுவலகம் அருகே, காய்ச்சல் சிறப்பு முகாமை, சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார். இந்த நிகழ்வில், பூந்தமல்லி சட்டமன்ற உறுப்பினர் கிருஷ்ணசாமி, மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ், மாவட்ட முதன்மை அரசு மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். இந்த சிறப்பு காய்ச்சல் முகாமில், அப்பகுதியைச் சேர்ந்த ஏராளமான குழந்தைகள், பெண்கள் என பல்வேறு தரப்பினரும், சளி, காய்ச்சல் உள்ளிட்ட அறிகுறிகள் குறித்து பரிசோதனை மேற்கொண்டனர்.
காய்ச்சல் - கண்காணிப்பு
இதனையடுத்து, செய்தியாளர்களிடம் அமைச்சர் மா. சுப்பிரமணியன் பேசியவதாவது: பருவ காலம் மாற்றம் என்பதால் காய்ச்சல் அதிகரித்து கொண்டு வருகிறது. முதலமைச்சர் அறிவுறுத்தலின்படி, சென்னையில் 100 இடங்களிலும், தமிழகம் முழுவதும் 900 இடங்களிலும் காய்ச்சல் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன. டெங்கு மற்றும் காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்கள் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு, சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. எந்தப் பகுதியில் 3 பேருக்கும் மேற்பட்டோருக்கு காய்ச்சல் இருக்குமானால், அந்தப் பகுதியில் நாளை முதல் காய்ச்சல் முகாம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
காய்ச்சல் 3 நாட்களில் சரியாகி விடும்
353 பேர் H1 N1 வைரசால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். நேற்று இந்த பாதிப்பு 371-ஆக இருந்தது. இந்தக் காய்ச்சல் 3 நாட்களில் சரியாகிவிடும். காய்ச்சலால் பாதிக்கப்பட்ட 294 பேர் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 9 பேர் அரசு மருத்துவமனைகளிலும், 53 பேர் வீடுகளில் தனிமைப்படுத்திக் கொண்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். ஐந்து வயதுக்கு உட்பட்டவர்களில் 53 பேருக்கும், 5 முதல் 14 வயதுக்கு உட்பட்டவர்களில் 16 பேருக்கும், 14 முதல் 65 வயது வரை 167 பேருக்கும், 65 வயதுக்கு மேற்பட்டவர்கள் 72 பேருக்கும் காய்ச்சல் பாதிப்பு கண்டறியப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
செங்கல்பட்டு கர்ப்பிணிப் பெண்
செங்கல்பட்டு மாவட்டம், சூனாம்பேடு பகுதியில் ஆரம்ப சுகாதார நிலையத்தில் பிரசவத்திற்காக வந்த கர்ப்பிணி பெண்ணின் குழந்தை இறந்து பிறந்தது. நிறைமாத கர்ப்பிணியான அவரின் குழந்தை, வயிற்றில் தலைகீழாக இருந்ததால், ஸ்கேன் எடுக்க மருத்துவர்கள் வலியுறுத்தி உள்ளனர். அவர் ஸ்கேன் எடுத்துவிட்டு, தனது உறவினர் இறந்து விட்டதால், அந்த இறுதிச் சடங்கில் கலந்துகொண்டு விட்டு இரண்டு நாட்கள் கழித்து பிரசவத்திற்காக வந்துள்ளார். இதில், தாயின் உயிர் காப்பாற்றப்பட்டுள்ளது. காணொலி காட்சி மூலம் பிரசவம் பார்த்த செவிலியர் மற்றும் பணியில் இல்லாத மருத்துவர் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
600 பேர் கொண்ட குழு
தமிழகத்தில் வேகமாக பரவி வரும் வைரஸ் காய்ச்சலை கட்டுப்படுத்தும் வகையில், மக்கள் நல்வாழ்வுத்துறை, நகர்புற நகராட்சித்துறை மற்றும் ஊரக உள்ளாட்சித்துறை அமைச்சர்கள், ஒருங்கிணைந்து 600 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டு, காய்ச்சல் குறித்து தீவிரமாக கண்காணிக்கப்பட உள்ளதாகவும் சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்தார்.