திருவள்ளூர் அருகே 6 பேருக்கு அரிவாள் வெட்டு.. 3 பேர் கவலைக்கிடம்.. கும்மிடிப்பூண்டியில் பரபரப்பு
திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அருகே இரு தரப்பு மோதலில் 6 பேருக்கு அரிவாள் வெட்டு விழுந்துள்ளது. 5 பேரும் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், இதில் 3 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக கூறப்படுகிறது. போலீசார் இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டியை அடுத்த ராமச்சந்திராபுரத்தில், அரசு நிலத்தில் சென்னை திருவொற்றியூர் ஆக்கிரமிப்பு பகுதியில் இருந்து சுமார் 30 க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் கடந்த 2 வருடங்களுக்கு முன்பு குடியமர்த்தப்பட்டனர். இந்த புதிய குடியிருப்பு பகுதியில் சமீப நாட்களாக சிலர் சமூக விரோத செயல்களில் ஈடுபட்டு வருவதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் இன்று கொத்தனார் ஹரி என்பவர், இந்த புதிய குடியிருப்பு பகுதிக்கு சென்றிருக்கிறார். அப்போது அங்கு தேவராஜ் தலைமையில் கூடியிருந்த சிலர் ஹரியை மிரட்டியுள்ளனர். மேலும் அவரை தாக்கி அவரிடம் இருந்த செல்போனை பறித்ததாக கூறப்படுகிறது. மேலும் அரிவாளை காட்டி மிரட்டியிருக்கிறார்கள். இதனால் ஹரி எதிர்த்து பேசி அவர்களை தட்டி கேட்க முற்பட்டார்.

இதில் தேவராஜ் தலைமையிலான கும்பலினர் ஹரியை அரிவாளால் வெட்டியுள்ளனர். இதில் லேசான காயமடைந்த ஹரி அங்கிருந்து சென்றதாக கூறப்படுகிறது. இதற்கிடையே ஹரி அரிவாளால் வெட்டப்பட்ட சம்பவம் அறிந்து அவரது உறவினர்கள் மற்றும் நண்பர்கள் சம்பவ இடத்துக்கு வந்து, தேவராஜ் மற்றும் அவரது கும்பலிடம் தட்டி கேட்டுள்ளனர். அப்போது அவர்களுக்குள் வாக்குவாதம் முற்றியதில், ஹரியின் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் தேவராஜ் கும்பலினர் அரிவாள், கத்தியால் தாக்க தொடங்கினர்.
இதில் ஹரியின் உறவினர்கள் பலருக்கும் கை, கால், தலையில் அரிவாள் வெட்டு விழுந்தது. குறிப்பாக வெங்கடேசன், ரவி, பாலாஜி, கஸ்தூரி அய்யா மற்றொரு வெங்கடேசன் என 5 பேரும் ரத்த வெள்ளத்தில் படுகாயமடைந்தனர். இதையடுத்து அவர்கள் 5 பேரும் உடனடியாக மீட்கப்பட்டு கும்மிடிப்பூண்டி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். தொடர்ந்து அவர்கள் ஸ்டான்லி அரசு மருத்துமவனைக்கு மேல் சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர்.
அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில், இதில் 3 பேரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக கூறப்படுகிறது. ஹரி லேசான வெட்டுக்காயங்களுடன் வீடு திரும்பினார் என்றும் கூறப்படுகிறது. போலீசார் இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள். இரவு நடந்த இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications