சூப்பர்! “எஸ்பி உடன் டீ குடிக்கலாம்” இத நீங்க கண்டிப்பாக பண்ணனும்..அசத்தும் திருவள்ளூர் போலீசார்
திருவள்ளூர் : கஞ்சாவை ஒழிக்க உதவினால் மாவட்ட எஸ்.பியுடன் தேநீர் அருந்தலாம் எனவும், கஞ்சா விற்பனை குறித்து தகவல் தெரிவிப்பவர்களுக்கு உரிய சன்மானமும் மரியாதையும் வழங்கி, தகவல் சொல்வோர் அடையாளங்கள் பாதுகாக்கப்படும் என திருவள்ளூர் மாவட்ட எஸ்.பி.வருண்குமார் கூறியுள்ளார்.
இதனால் சட்டம் ஒழுங்கு பாதிக்கப்படுவதோடு மாணவர்களின் எதிர்காலமும் பாதிக்கப்படுவதாக புகார் எழுந்தது.
இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்னர் தமிழக டிஜிபி சைலேந்திர பாபு தமிழக போலீசாருக்கு சுற்றறிக்கை ஒன்றை அனுப்பினார்.
ஆபரேசன் கஞ்சா 2.0
டிஜிபி சைலேந்திர பாபு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், "கடந்த 2021 டிசம்பர் முதல் 2022 ஜனவரி வரை போதை பொருள் விற்பனைக்கு எதிராக எடுக்கப்பட்ட நடவடிக்கையை, 'ஆப்ரேஷன் கஞ்சா வேட்டை 2.0′ என்ற பெயரில் ஏப்ரல் 27ஆம் தேதி வரை தொடர வேண்டும் என குறிப்பிட்டிருந்தார். குறிப்பாக பள்ளி, கல்லூரி அருகே, கஞ்சா, குட்கா உள்ளிட்ட போதை பொருள் விற்பனையை ஒழிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது. இதனையடுத்து தமிழகம் முழுவதும் கஞ்சா ஒழிப்பு பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
எஸ்.பியுடன் தேநீர் அருந்தலாம்
இந்நிலையில் கஞ்சாவை ஒழிக்க உதவினால் மாவட்ட எஸ்.பியுடன் தேநீர் அருந்தலாம் எனவும், கஞ்சா விற்பனை குறித்து தகவல் தெரிவிப்பவர்களுக்கு உரிய சன்மானமும் மரியாதையும் வழங்கி, தகவல் சொல்வோர் அடையாளங்கள் பாதுகாக்கப்படும் என திருவள்ளூர் மாவட்ட எஸ்.பி.வருண்குமார் கூறியுள்ளது வரவேற்பை பெற்றுள்ளது. இதுதொடர்பாக வெளியிட்டப்பட்டுள்ள அறிக்கையில், " திருவள்ளூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர். வீ. வருண் குமார், இ.கா.ப. அவர்கள் மாவட்டத்தில் நடைபெறும் குற்றங்கள் குறித்து இரகசிய தகவல் தெரிவிக்க வழங்கப்பட்டுள்ள 63799-04848 என்ற அலைபேசிக்கு கஞ்சா கடத்தல், குட்கா கடத்தல் மற்றும் சட்டவிரோத செயல்கள் குறித்து தகவல் தெரிவிக்கலாம்.
ரூ.10,000 சன்மானம்
அலைபேசி மூலம் தகவல் தெரிவிக்க விரும்பாதவர்கள் Whats App மூலம் கஞ்சா, குட்கா விற்பனை செய்யும் இடம், மற்றும் குற்றவாளிகள் குறித்து தகவல் அனுப்பலாம். தகவல் தெரிவிப்பவர்களின் அடையாளம் இரகசியம் காக்கப்படும். தெரிவித்த தகவலின் அடிப்படையில் 10 கிலோ மற்றும் அதற்கு மேல் கஞ்சா கைப்பற்றப்பட்டால் ரூபாய் 10,000/- சன்மானம் அளிக்கப்படும். இது காவல்துறையைச் சேர்ந்தவர்களுக்கும் பொருந்தும்.
உரிய மரியாதையுடன் தேனீர்
கல்லுாரி வளாகம், பள்ளி வளாகம் மற்றும் இதர கல்வி ஸ்தாபனங்களில் கஞ்சாவை அறவே ஒழிக்க உதவிடுவோர் "SP உடன் தேனீர்" அருந்த அழைப்பு விடுக்கப்பட்டு உரிய மரியாதையுடன் தேனீர் அளித்து சன்மானம் மற்றும் புத்தகங்கள் பரிசாக வழங்கப்படும். மேலும் அவர்கள் பெயர், புகைப்படம் மற்றும் இதர அடையாளங்கள் இரகசியமாக இருக்கும் என்பதை தெரிவித்துக்கொள்ளப்படுகிறது. "இளைய சமுதாயத்தை மற்றும் வருங்கால தமிழகத்தை காக்க உதவிடுங்கள்" என திருவள்ளூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் கோரிக்கை விடுத்தார்." என கூறப்பட்டுள்ளது.