கெட்டு போன ஐஸ்கிரீம் கேக்.. ஆசையாய் பிறந்தநாள் கொண்டாடிய சிறுமிக்கு வாந்தி மயக்கம்.. தி.மலையில் ஷாக்
திருவண்ணாமலை: திருவண்ணாமலையில் கெட்டு போன கேக் சாப்பிட்டதால் சிறுமிக்கு வாந்தி மயக்கம் ஏற்பட்டதால் உறவினர்கள் போராட்டம் நடத்தினர்.
திருவண்ணாமலை மத்திய பேருந்து நிலையம் முன்பு ஹோட்டல் அசோக் மற்றும் பேக்கரி இயங்கி வருகிறது. இங்கு நேற்று மாலை மாரியம்மன் கோயில் தெருவை சேர்ந்தவர் ஆதம்.
இவரது 5 வயது குழந்தைக்கு நேற்று பிறந்தநாள் கொண்டாட்டம் நடத்தப்பட்டது. பிறந்தநாளையொட்டி தனது மகளுக்கு கேக் வாங்க மேற்கண்ட பேக்கரிக்கு ஆதம் தனது நண்பர்களுடன் சென்றிருந்தார்.
அதிமுகவின் அரசியல் ஆலோசகராக பண்ருட்டி ராமச்சந்திரன் நியமனம் - ஓபிஎஸ் அதிரடி அறிவிப்பு
ஐஸ்கிரீம்
ஐஸ்கிரீம் கேக்கை வாங்கிக் கொண்டு வீட்டிற்கு வந்தார். அங்கு கேக்கை வெட்ட குழந்தை தயாராக இருந்தது. பிறந்தநாள் பாடல் பாடப்பட்டு சிறுமி கேக்கை வெட்டினார். அப்போது குழந்தைக்கு அனைவரும் கேக்கை ஊட்டினர். இதையடுத்து கேக் சாப்பிட்ட சிறுமி சிறிது நேரத்திலேயே குமட்டல் ஏற்பட்டு வாந்தி எடுத்தார்.
உறவினர்கள்
இதைத் தொடர்ந்து உறவினர்கள் அந்த கேக்கை முகர்ந்து பார்த்தனர். அப்போது கேக் கெட்டு போனது போன்ற நாற்றம் வீசியது. இதையடுத்து பெற்றோர் அந்த பேக்கரிக்கு சென்று கேக் கெட்டு போனது குறித்து கேட்டுள்ளனர். அதற்கு ஊழியர்கள் சரியான முறையில் விளக்கம் அளிக்கவில்லை என கூறப்படுகிறது.
ஆத்திரம்
இதனால் ஆத்திரமடைந்த உறவினர்களும் பெற்றோரும் அந்த பேக்கரியை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். இந்த கடையில் கேக் வாங்காதீர்கள், கெட்டு போன கேக்கை விற்கிறார்கள். பணம்தான் முக்கியம் , மனித உயிர் அலட்சியம் என்ற கோஷங்களை ஆதம் எழுப்பினார்.
போராட்டத்தில் குழந்தை
குழந்தையையும் போராட்டத்தில் அமர வைத்திருந்தனர். தகவலறிந்த போலீஸார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். இதையடுத்து அங்கு போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். மேலும் சம்பந்தப்பட்ட கடைக்கு உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் நேரில் வந்து குழந்தை சாப்பிட்ட கேக்கின் மாதிரியை எடுத்துக் கொண்டு சென்றனர்.
தொடர் சம்பவங்கள்
இதையடுத்து ஆய்வகத்திற்கு சென்ற கேக் மாதிரியின் முடிவுகள் வரும் வரை பேக்கரியை திறக்கக் கூடாது என உத்தரவிட்டு அதை மூடினர். அது போல் அந்த கடையில் இருந்த கேக், இனிப்பு வகைகளும் ஆய்வுக்குள்படுத்தப்படுகிறது. திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியில் ஏற்கெனவே பிரியாணி சாப்பிட்டு இறந்த சிறுமி, தந்தூரி சிக்கன் சாப்பிட்டு இறந்த மாணவன், பீட் ரூட் பொரியலில் எலி தலை உள்ளிட்ட சம்பவங்கள் தொடர்ந்து நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.