அட இதுதான் ரோடாம்.. கையாலே பெயர்த்து எடுத்த மூதாட்டி! திருவண்ணாமலை அருகே அதிர்ச்சி.. அண்ணாமலை கேள்வி
திருவண்ணாமலை: திருவண்ணாமலையில் கடந்த வாரம் அமைக்கப்பட்ட புதிய தார்ச் சாலையை பெண் ஒருவர் வெறும் கையாலயே பெயர்த்து எடுக்கும் வீடியோவை தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை ட்விட்டரில் பகிர்ந்துள்ளார்.
Recommended Video
திருவண்ணாமலை மாவட்டம், ஜவ்வாதுமலை ஊராட்சி ஒன்றியம், ஊர்கவுண்டனூர் ஊராட்சியில் அமைந்துள்ள குட்டூர் கிராமம். மலைகளால் சூழப்பட்ட இந்த கிராமத்தில் 500-க்கும் மேற்பட்ட மலைவாழ் சமூகத்தினரின் குடும்பங்கள் வசித்து வருகின்றன. இந்த குட்டூர் மலை கிராமத்தில் வசிக்கும் மக்கள் தங்கள் வேலை, பிள்ளைகளின் கல்வி உள்ளிட்டவற்றுக்காக ஊர்கவுண்டனூர் ஊராட்சிக்கே செல்ல வேண்டியுள்ளது. ஆனால் குட்டூர் - ஊர்கவுண்டனூர் இடையேயான 2 கிலோமீட்டர் தூரத்துக்கு இதுவரை சாலை வசதி ஏதும் இல்லாமல் இருந்தது. இதனால் குட்டூர் கிராமத்தினர் மிகுந்த சிரமத்துக்கு உள்ளாகினர். தங்கள் பகுதியில் சாலை வசதி செய்து தருமாறு பல ஆண்டுகளாக மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட அதிகாரிகளிடம் இந்த கிராமத்தினர் பல ஆண்டுகளாக மனு அளித்து வந்தனர். எனினும், அவர்கள் கோரிக்கை கண்டுகொள்ளப்படாமலே இருந்துள்ளது.
இந்நிலையில், குட்டூர் - ஊர்கவுண்டனூர் இடையேயான 2 கிலோமீட்டர் தூரத்துக்கு கடந்த வாரம் புதிய தார்ச் சாலை போடப்பட்டது. ரூ. 35 லட்சம் மதிப்பில் இந்த சாலை போடப்பட்டது. இதனால் குட்டூர் மக்கள் மிகவும் மகிழ்ச்சி அடைந்தனர்.
மின் கம்பங்களை அகற்றாமல் புதிய சாலை! சொதப்பும் ஒப்பந்ததாரர்கள்! கும்பகோணம் அருகே புதிய சர்ச்சை!
இந்த சூழலில், தார்ச் சாலை போடப்பட்ட ஒரே வாரத்துக்குள் அதன் தரம் வெளியே தெரிய தொடங்கியது. பல இடங்களில் விரிசல்கள் விட்டும், தார்கள் வெளியே வந்தும் இந்த சாலை காணப்படுகிறது. இதனிடையே, இந்த தார்ச் சாலையின் ஒருபகுதியை குட்டூர் கிராமத்தைச் சேர்ந்த வயதான பெண்மணி ஒருவர் தனது கையாலேயே எளிதாக பெயர்த்து எடுத்தார். மேலும், மக்கள் பலரும் அந்த சாலையில் பதிக்கப்பட்டிருக்கும் கற்களை வெறும் கையால் பெயர்த்தெடுத்தனர். சாலையின் தரத்தை வெளிப்படுத்தும் இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது.
இந்நிலையில், இந்த வீடியோவை தமிழக பாஜக தலைவர் கே. அண்ணாமலை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதற்கு மேலே, "20 ஆண்டுகளுக்குப் பிறகு தங்கள் பகுதியில் புதியதாக சாலை அமைக்கப்படுவதைக் கண்டு மகிழ்ச்சி அடைந்த திருவண்ணாமலை மாவட்டம், குட்டூர் கிராம மலைவாழ் மக்களுக்குக் காத்திருந்தது அதிர்ச்சி. 35 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் தரமற்ற இந்த சாலையை அமைத்த அதிகாரிகள் மற்றும் ஒப்பந்ததாரர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. பிரதம மந்திரி கிராமப்புற சாலை திட்டத்தில் தமிழகத்திற்கு நமது மத்திய அரசு கடந்த 5 ஆண்டுகளில் 2,269 கோடி ரூபாயை நிதியாக வழங்கியுள்ளது. தரரமற்ற சாலைகளை போட்டு, ஊழலில் கொழிக்கும் இந்த திமுக அரசு மக்களின் நலனுக்கு எதிராகச் செயல்படுவதை தமிழக பாஜக வன்மையாகக் கண்டிக்கிறது" என அண்ணாமலை எழுதியுள்ளார்.