மேல்மலையனூரில் 8ஆம் நூற்றாண்டு பல்லவர் காலத்து கொற்றவை கண்டெடுப்பு
திருவண்ணாமலை: மேல்மலையனூர் அருகே 8 ம் நூற்றாண்டை சேர்ந்த பல்லவர் காலத்திய கொற்றவை கண்டறியப்பட்டுள்ளது.
திருவண்ணாமலை மரபுசார் அமைப்பைச் சேர்ந்த ராஜ் பன்னீர் செல்வம் மற்றும் உதயராஜா இணைந்து சேத்பட் பகுதியில் கள ஆய்வு மேற் கொண்ட பொழுது , சேத்பட்டை அடுத்த பருதிபுரம் கிராமத்தில் உள்ள வயல்வெளியில் சிற்பம் ஒன்று இருப்பதாக அவ்வூரை சேர்ந்த கார்த்தி தந்த தகவலின் பெயரில் ஆய்வு மேற்கொள்ளச் சென்றனர்.
அடுத்த 3 மணி நேரத்தில்.. சென்னை உள்பட 23 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு.. நீங்க எந்த ஊரு!
சேத்பட் - திருவண்ணாமலை சாலையில் விழுப்புரம் மாவட்ட எல்லையில் அம்மாவட்டத்துக்கு உட்பட்ட பருதிபுரம் கிராமத்தின் வயல்வெளி அருகே பலகை கல்லினால் ஆன சிற்பம் காணப்பட்டது. சுமார் 5 அடி உயரமும் 4 அடி அகலமும் கொண்ட பலகை கல்லில் நான்கு கரங்களுடன் புடைப்பு சிற்பமாக வடிக்கப்பட்டுள்ள அச்சிற்பம் கொற்றவை சிற்பம் என்பது கண்டறியப்பட்டது.
போர் வீரர்கள்
போர்வீரர்கள் அணியும் கவசம் போன்ற தலைப்பாரம் கரண்ட மகுடத்துடன் தலையை அலங்கரிக்க , நீள் வட்டமான முகத்தில் தடித்த உதடுகளும் இரு செவிகளில் பனையோலை குண்டலும் அணிந்து காட்சி தருகிறார். கழுத்தில் கூர்மையான ஆரம் போன்ற அணிகலன்களையும் தனது அனைத்து கரங்களிலும் தோள்வளை மற்றும் கைவளையுடன் மார்பில் பட்டையான கச்சை அணிந்து காட்சியளிக்கிறார்.
நான்கு கரங்கள்
நான்கு கரங்களில் தனது மேல் வலது கரம் சக்கரத்தையும் கீழ் வலது கரம் மணியும் ஏந்தி நிற்க , மேல் இடது கரத்தில் சங்கும் , கீழ் இடது கரம் இடைமீது ஊறு முத்திரையில் காட்டப்பட்டுள்ளது. அனைத்து கைகளிலும் அடுக்கடுக்காக வளையல்கள் காட்டப்பட்டுள்ளது தனிச்சிறப்பு. கொற்றவையின் இடையாடை பெரிய முடிச்சுகளுடன் தொடையைத் தாண்டி நீள , இடையருகே இடது புறம் கலைமானும் , காலருகே இருபக்கமும் வீரர்கள் வடிக்கப்பட்டு எருமை தலையின் மீது நிமிர்ந்து கம்பீரமாக நின்றவாறு காட்சி தருகிறது.
அணிகலன்கள்
இக்கொற்றவையின் சிற்ப அமைதி, ஆடை மற்றும் அணிகலன்களை வைத்தும் இதன் காலம் கி.பி 8ம் நூற்றாண்டாக கருதலாம். 8ம் நூற்றாண்டைச் சேர்ந்த கொற்றவைகள் பெரும்பாலும் அஷ்ட புஜங்களுடன் வடிக்கப்பட்டுள்ள நிலையில் , கையில் மணியுடன் சதுர் புஜமாகக் காட்சி தருவது தனித்துவமானது ஆகும்.
1200 ஆண்டுகள் பழமை
சுமார் 1200 வருடம் பழமையான இக்கொற்றவை இன்றும் வயல்வெளியின் மத்தியில் வெட்ட வெளியில் வளமையைக் காக்கும் தெய்வமாக அருள்பாலித்து வரும் இச்சிற்பத்தை ஊர்மக்கள் முறையாக பாதுகாத்து வழிபட்டு வந்தால் , அவ்வூரின் தொன்மை காக்கப்படும்.