ஐப்பசி பவுர்ணமி : திருவண்ணாமலை கிரிவலம் செல்ல தடை - பக்தர்கள் ஏமாற்றம்
திருவண்ணாமலையில் கிரிவலம் செல்ல மாவட்ட ஆட்சியர் தடை விதித்துள்ளார். நாளை காலை 6 மணி முதல் 21ஆம் தேதி இரவு 12 மணிவரை திருவண்ணாமலைக்கு யாரும் வரவேண்டாம் என கேட்டுக்கொண்டுள்ளார்.
திருவண்ணாமலை: ஐப்பசி மாத பவுர்ணமியை முன்னிட்டு நாளை காலை 6 மணி முதல் 21ஆம் தேதி இரவு 12 மணிவரை திருவண்ணாமலை மலைச்சுற்றும் பாதையில் கிரிவலம் செல்ல தடை விதிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் பவுர்ணமி கிரிவலம் செல்ல திருவண்ணாமலைக்கு வரவேண்டாம் எனவும் மாவட்ட ஆட்சியர் கேட்டுக்கொண்டுள்ளார்.
நினைத்தாலே முக்தி தரும் திருவண்ணாமலை சிவபெருமானின் பஞ்ச பூதத்தலங்களில் நெருப்புத்தலமாக போற்றப்படுகிறது. திருவண்ணாமலையில் உள்ள பிரசித்தி பெற்ற அருணாச்சலேஸ்வரர் கோயிலில், மாதந்தோறும் பௌர்ணமி நாட்களில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் செல்வது வழக்கம். சித்திரை மாதத்தில் வரும் பௌர்ணமி தினத்தில் தமிழகம் மற்றும் அண்டை மாநிலங்களை சேர்ந்த 10 லட்சத்திற்கும் மேற்பட்டோர் கிரிவலம் செல்வர்.

கிரிவலம் வந்தால் பாவங்கள் முழுவதும் நீங்கிவிடும். மேலும் பாவம் செய்யக்கூடாது என்ற எண்ணத்தையும் நமக்குத் தோற்றுவித்துவிடும். வயதானவர்களுக்கும் உடல் நலிவுற்றவர்களுக்கும், வலம் வர வேண்டும் என்று நினைத்த மாத்திரத்திலேயே பிரம்மஹத்தி தோஷம் நீங்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.
திருவண்ணாமலையில் சித்தர்கள் சூட்சும வடிவில் வலம் வருவதாகக் கூறப்படுகிறது. பவுர்ணமி நாள் அன்று மட்டும்தான் கிரிவலம் வரவேண்டுமா? வருடத்தின் 365 நாளும் மலை வலம் வரலாம். பிறந்த நாள், திருமண நாள், மூத்தோர்களின் நினைவு நாள் என்று எந்நாளும் சிவபெருமானை நினைத்து வலம் வரலாம்.
திங்கட்கிழமை கிரிவலம் வர இந்திர பதவி கிடைக்கும். செவ்வாய்க்கிழமை கிரிவலம் வர கடன், வறுமை நீங்கும். புதன் கிழமை கிரிவலம் வர கலைகளில் தேர்ச்சியும், முக்தியும் கிடைக்கும். வியாழக்கிழமை கிரிவலம் ஞானம் கிடைக்கும். வெள்ளிக்கிழமை கிரிவலம் வர வைகுண்டப் பதவி கிடைக்கும். சனிக்கிழமை கிரிவலம் வர பிறவிப்பிணி அகலும். ஞாயிறு கிழமை கிரிவலம் வந்தால் சிவலோக பதவி கிட்டும்.
கிரிவலப் பாதையான 14 கி.மீ தூரத்தை பக்தர்கள் நடந்துதான் கடக்க வேண்டும். இடமிருந்து வலமாக மட்டுமே சுற்ற வேண்டும் . நமசிவாய மந்திரத்தை உச்சரித்தபடியோ, சிவபுராணத்தை பாராயணம் செய்தபடியோ கிரிவலம் வரவேண்டும். அப்பொழுதுதான் கிரிவலம் வருவதற்கான பலனும் புண்ணியமும் சேரும்.
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் பின்புறம் உள்ள மலையைச் சுற்றி 14 கிலோ மீட்டர் ஒவ்வொரு மாதமும் பவுர்ணமி நாட்களில் கிரிவலம்செல்வதற்காக பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், மாநிலங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் வருகை தருவார்கள்.
தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் காரணமாக திருவண்ணாமலையில் கிரிவலம் செல்ல கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் தொடர்ந்து தடை விதிக்கப்பட்டு வருகிறது. தொற்று பரவல் குறைவு காரணமாக வழிபாட்டு தலங்களுக்கு வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் பக்தர்கள் செல்ல விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளுக்கு கடந்த 15ஆம்தேதி முதல் தளர்வுகள் அளிக்கப்பட்டது.
இந்த மாதத்துக்கான பவுர்ணமி நாளை செவ்வாய்கிழமை இரவு 7.56 மணிக்கு தொடங்கி மறுநாள் புதன்கிழமை இரவு 8.54 மணிக்கு நிறைவடைகிறது. இந்த நிலையில் மாவட்ட ஆட்சியர் முருகேஷ் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், திருவண்ணாமலை மாவட்டத்தில் கொரோனா தொற்று பரவலை தொடர்ந்து கண்காணித்து கட்டுப்படுத்த வேண்டியது அவசியமாகும்.
இதனை கருத்தில் கொண்டு பவுர்ணமி தினங்களான நாளை காலை 6 மணி முதல் 21ஆம் தேதி இரவு 12 மணிவரை திருவண்ணாமலை மலைச்சுற்றும் பாதையில் கிரிவலம் செல்ல தடை விதிக்கப்படுகிறது. எனவே, பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் பவுர்ணமி கிரிவலம் செல்ல திருவண்ணாமலைக்கு வரவேண்டாம்.
பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரும் மாவட்ட நிர்வாகத்தின் தொற்று பரவலை தடுக்கும் முயற்சிக்கு முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். திருவண்ணாமலை மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு முற்றிலும் இல்லை என்ற நிலையை அடைய அனைவரின் ஒத்துழைப்பும் அவசியமாகும் என கேட்டுக்கொண்டுள்ளார்.
திருவண்ணாமலையில் 19வது மாதமாக இந்த மாதமும் பவுர்ணமி கிரிவலத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. கிரிவலம் செல்ல மாவட்ட நிர்வாகம் விதித்துள்ள தடையால் பக்தர்களும் பொதுமக்களும் ஏமாற்றம் அடைந்துள்ளனர். கிரிவலம் செல்ல விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.












Click it and Unblock the Notifications