திருவண்ணாமலை பரணி தீபம், மகா தீபம்.. ஆன்லைனில் டிக்கெட் இன்று விற்பனை - முழு விபரம்
திருவண்ணாமலை: அண்ணாமலையார் கோவிலில் பரணி தீபம், மகா தீபத்தை தரிசனம் செய்ய விரும்பும் பக்தர்களுக்கு இன்றுமுதல் டிக்கெட்டுகள் விற்பனை செய்யப்பட உள்ளன. மலையேறும் பக்தர்கள் www.annamalaiyar.hrce.tn.gov என்ற இணைய தளம் வாயிலாக இன்று காலை 10 மணி முதல் அனுமதிச்சீட்டு பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
நினைத்தாலே முக்தி தரும் ஆலயம் திருவண்ணாமலை. சிவபெருமானின் பஞ்ச பூத தலங்களில் அக்னி தலமாக திகழ்கிறது திருவண்ணாமலை. காசியில் இறந்தால் முக்தி, திருவாரூரில் பிறந்தால் முக்தி, சிதம்பரத்தில் வழிபட்டால் முக்தி ஆனால் திருவண்ணாமலையை நினைத்தாலே முக்தி தரும் தலமாகும்.

யார் பெரியவர் என்று பிரம்மாவும் விஷ்ணுவும் மோதிக்கொண்டு, ஈசனின் அடிமுடி காண விரைந்த தலம் திருவண்ணாமலை. அக்னியே குளிர்ந்து மலையாகி, ஈஸ்வர அம்சமாக உள்ள இடம் திருவண்ணாமலை. இத்தலத்தினை நால்வர் என்று அழைக்கப்படும் அப்பர்,சுந்தரர்,சம்பந்தர், மாணிக்கவாசகர் ஆகியோர் தேவாரம் பதிகங்களை பாடியுள்ளார்கள். இத்தலத்தின் மூலவர் சிவபெருமான் என்றாலும், இங்குள்ள முருகன் மீது அருணகிரி நாதர் பாடல்களைப் பாடியுள்ளார்.
திருவண்ணாமலையில் உள்ள மலை எல்லா யுகங்களிலும் அழியாமல் இருப்பதாகவும், இம்மலையானது சிவபெருமானே என்றும் சைவர்கள் நம்புகிறார்கள். இங்கு ஆண்டுதோறும் கார்த்திகை தீபத்திருவிழா நடைபெறும். இந்த ஆண்டு கார்த்திகை தீபத்திருவிழா கடந்த 17ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. 7ஆம் நாளான நேற்றைய தினம் மகா தேரோட்டம் நடைபெற்றது.
26ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை கார்த்திகை தீப திருவிழாவின் சிகர நிகழ்ச்சியாக அதிகாலை 4 மணிக்கு கோயில் கருவறை முன்பு பரணி தீபம் ஏற்றப்படுகிறது. அதனைத் தொடர்ந்து அன்று மாலை 6 மணிக்கு அண்ணாமலையார் கோயில் பின்புறம் உள்ள 2,668 உயர மலை மீது மகா தீபம் ஏற்றப்பட உள்ளது.
இதனிடையே பரணி தீபம் மற்றும் மகா தீப தரிசனம் செய்வதற்கான டிக்கெட்டுகள் இன்று காலை விற்பனை செய்யப்படுகிறது.
இதில் அதிகாலை 4 மணிக்கு நடைபெறும் பரணி தீபத்தை காண ரூ.500 கட்டணத்தில் 500 பேருக்கு அனுமதிச்சீட்டு வழங்கப்பட உள்ளது. இதேபோல் மாலை 6 மணிக்கு நடைபெறும் மகா தீப நிகழ்வில் கலந்து கொள்ளும் வகையில் ரூ.600 கட்டணத்தில் 100 பேருக்கும், ரூ.500 கட்டணத்தில் 1000 பேருக்கும் ஆன்லைனில் அனுமதிச்சீட்டு வழங்கப்படுகிறது.
சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்புப்படி, தீபத்திருநாளான 26.11.2023 அன்று 2500 பக்தர்கள் மட்டும் அண்ணாமலையார் மலை மீது ஏற நிபந்தனைகளிடன் அனுமதி அளிக்கப்பட்டு வருகிறது. மலையேறும் பக்தர்கள் www.annamalaiyar.hrce.tn.gov என்ற இணைய தளம் வாயிலாக இன்று காலை 10 மணி முதல் அனுமதிச்சீட்டு பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மலையேறும் பக்தர்களுக்கு மாவட்ட நிர்வாகம் சார்பில் பல நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளது. அதாவது, நவம்பர் 26 ஆம் தேதி காலை 05.00 மணிக்கு திருவண்ணாமலை நகரம் செங்கம் சாலை கலைஞர் கருணாநிதி அரசுக் கலை கல்லூரி வளாகத்தில் சிறப்பு மையம் திறக்கப்பட்டு முதலில் வரும் 2500 பக்தர்களுக்கு முன்னுரிமை என்ற அடிப்படையில் வரிசைப்படி (Queue System) புகைப்படத்துடன் கூடிய அனுமதி சீட்டு வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறைந்தபட்சம் 18 வயது நிரம்பியவர்கள் முதல் 60 வயதுக்குட்பட்டவர்கள் மலையேற அனுமதிகப்படுவார்கள் என்றும், 26 ஆம் தேதி பிற்பகல் 2 மணி வரை மட்டுமே பக்தர்கள் மலை ஏறுவதற்கு அனுமதிக்கப்படுவார்கள் என்றும் கூறப்பட்டுள்ளது. அதேபோல் மலை ஏறும் பக்தர்கள் எளிதில் தீப்பிடிக்க கூடிய பொருட்களை கொண்டு செல்ல அனுமதியில்லை எனவும், தண்ணீர் பாட்டில் மட்டுமே எடுத்து செல்ல அனுமதிக்கப்படும் நிலையில் அதனை திரும்ப கொண்டு வர வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.












Click it and Unblock the Notifications