மாசி மாத பௌர்ணமியில் திருவண்ணாமலை கிரிவலம்.. இதுதான் சரியான நேரமாம்.. தவறவிடாதீங்க
திருவண்ணாமலை கிரிவலம் குறித்து கோயில் நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது
திருவண்ணாமலை: திருவண்ணாமலையில் கிரிவலம் மேற்கொள்ள உகந்த நேரம் எது என்பதை அருணாசலேஸ்வரர் கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.
ஒவ்வொரு பௌர்ணமியன்றும் கிரிவலம் செல்வது பக்தர்களின் வழக்கம். நினைத்தாலே முக்தி தரும் திருவண்ணாமலையானது சிவபெருமானின் பஞ்சபூத தலங்களில் ஒன்றாகும். எட்டு திசையிலும் அஷ்ட லிங்கங்களை கொண்ட எண்கோண வடிவில் அமைந்துள்ள மலையை சுற்றி வருவது கோடி புண்ணியமாகும். பொதுவாக எல்லா நாட்களிலும் இம்மலையை பக்தர்கள் சுற்றி வந்தாலும், பௌர்ணமி அன்று சுற்றி வருவது சிறப்பானதாக கருதப்படுகிறது.

எனவே ஒவ்வொரு பௌர்ணமியன்றும் கிரிவலம் செல்ல வரும் பக்தர்களின் கூட்டம் அதிகமாக காணப்படும். சிவபெருமானே மலையாக கருதப்படுவதால் பக்தர்கள் மலை கிரிவலமாக சுற்றி வருகின்றனர். இவ்வாறு கிரிவலம் வர இரண்டு பாதைகள் உண்டு. ஒன்று மலையையொட்டி உள்ள மண் பாதை. மற்றொன்று மக்கள் சரளமாக பயன்படுத்தும் நகரை ஒட்டியுள்ள பெரிய பாதை. இந்த இரண்டு பாதைகளில் பெரிய பாதையில்தான் பக்தர்கள் அதிகமாக கிரிவலம் வருகிறார்கள்.
அதேபோல கிரிவலம் வருவதெற்கென சில வழிமுறைகள் பின்பற்றப்படுகிறது. மலையை சுற்றி நடக்கும் போது இடதுபுறமாகதான் செல்ல வேண்டும். ஏனெனில் இந்த மலை அடிவாரத்தில் இன்னமும் சித்தர்கள் வாழ்ந்து வருவதாக நம்பப்படுகிறது. எனவே அவர்கள் வலதுபுறம் இருப்பார்கள். அவர்களை தொந்தரவு செய்யாமல் இருக்கவே பக்தர்கள் இடதுபுறமாக நடக்க வேண்டும் என்று சொல்லப்படுகிறது. அதேபோல வேகமாகவோ, ஒருவரை ஒருவர் இடித்துக்கொண்டோ நடக்கக்கூடாது. பொறுமையாக சிவனை மனதில் நிலை நிறுத்தி அவரின் கருணையில் லயித்து சிவாயநம, நமசிவாய என உச்சரித்து நடக்க வேண்டும்.
இவ்வாறு நடக்கும் போது ரமணமகரிஷி, சேஷாத்திரி சுவாமிகள், விசிறி சாமியார் போன்றோரின் முக்தி தலங்களை பக்தர்கள் தரிசித்தவாறு நடக்கலாம். தேவையற்ற பேச்சுக்களை தவிர்த்து திருமுறைகளை உச்சரித்தவாறு நடப்பது என்பது கூடுதல் மன அமைதியையும், பலனையும் கொடுக்கும். எடுத்த எடுப்பிலேயே கிரிவலத்தை தொடங்காமல் அண்ணாமலையாரையும், உண்ணாமுலை அம்பிகையையும் தரிசித்து அதன் பின்னர் கிரிவலத்தை தொடங்க வேண்டும். நாம் சுற்றிவருவது 260 கோடி வருடங்கள் பழமையான மலையை என்பதை உணர்ந்தால் அதன் பரவசம் நமக்கு தானாகவே புரிந்துவிடும்.
இவ்வளவு சிறப்புகள் இருக்கும் இந்த மலையை பௌர்ணமி நாளில் வலம் வருவதைவிட மாசி மாத பௌர்ணமியில் வலம் வருவது கூடுதல் பலன்களை கொடுக்கும். இந்த கிரிவலத்திற்கு எப்படி இவ்வளவு வழிமுறைகள் இருக்கிறதோ, அதேபோலதான் எந்த நேரத்தில் கிரிவலத்தை தொடங்க வேண்டும் என்பதிலும் சில வழிமுறைகள் இருக்கின்றன. அதன்படி மாசி மாத பௌர்ணமி நாளை(மார்ச் 06) மாலை 5.39 மணிக்கு தொடங்கி நாளை மறுநாள் இரவு (மார்ச் 07) இரவு 7.14 மணியளவில் முடிவடைகிறது. எனவே இந்த நேரத்தில் கிரிவலம் வருவது சிறந்தது என்று அருணாசலேஸ்வரர் கோயில் நிர்வாகம் கூறியுள்ளது.












Click it and Unblock the Notifications