கார்த்திகை தீபம்.. திருவண்ணாமலை மகா தீபம் தரிசன டிக்கெட்.. ஆன்லைனில் எப்போது, எப்படி பெறுவது?
திருவண்ணாமலை: டிசம்பர் மாதம் 13ம் தேதி திருக்கார்த்திகை கொண்டாடப்படுகிறது. உலகப் புகழ் பெற்ற திருவண்ணாமலை அண்ணாமலையர் திருக்கோவிலுக்கு பல லட்சம் பக்தர்கள் கிரிவலம் வருவது வழக்கம். இந்நிலையில் அப்படி திருவண்ணாமலை மகா தீப தரிசனத்தை காண விரும்பும் பக்தர்களுக்கு சிறப்பு டிக்கெட்டுகள் வழங்கப்படுவது வழக்கம். இதற்கான ஆன்லைன் டிக்கெட்டுகள் டிசம்பர் 10-ந்தேதி வினியோகிக்கப்பட இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
திருவண்ணாமலையில் அண்ணாமலையார் அமர்ந்திருக்கும் மலை என்பது பஞ்ச பூத தலங்களில் அக்னி பிழம்பாக வீற்றிருக்கும் மலையாகும். இதன் காரணமாக அருணாச்சலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை மகாதீபம் ஏற்றும் நிகழ்வு மிகவும் பிரசித்தியுடன் கொண்டாடப்படுகிறது. ஈசனை நாடி வரும் பக்தர்களின் புனித தலமாக திருவண்ணாமலை உள்ளது. பொதுவாகவே திருவண்ணாமலைக்கு தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருவார்கள். குறிப்பாக பௌர்ணமி நாட்களில் கிரிவலம் வருவது மிகவும் பிடிக்கும். அதிலும் கார்த்திகை தீபத் திருவிழாவில் திருவண்ணாமலையில் ஏற்றப்படும் மகா தீபத்தை கிரிவலம் வந்து காண்பதற்காக நாடு முழுவதிலும் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் வருவார்கள்.

திருக்கார்த்திகை நாளில், திருவண்ணாமலையில் மகா தீபம் ஏற்றப்பட்ட பின்னரே அனைத்து வீடுகளிலும் தீபம் ஏற்றப்படுவது வழக்கம் ஆகும். திருவண்ணாமலை அருணாச்சல மலை மீது ஏற்றப்படும் மகா தீப ஒளியை நேரில் காண்பதை பாக்கியமாக பலர் கருதுகிறார்கள்.. அந்த வகையில், திருக்கார்த்திகை தீபத் திருவிழா அடுத்த மாதம் (டிசம்பர்) 13-ந்தேதி நடக்கிறது.'
அன்றைய தினம் அதிகாலையில் அருணாசலேஸ்வரர் கோவிலுக்குள் பரணி தீபம் ஏற்றப்படும். பின்னர் மாலையில் மகா தீபம் ஏற்றப்படும். இந்த மகாதீபம் ஏற்றப்படும் நிகழ்வை காண்பதற்காக பல லட்சம் பேர் வருவார்கள். இதன் காரணமாக திருவண்ணாமலை நகர் முழுவதுமே பக்தர்கள் வெள்ளத்தில் மிதக்கும். அப்படி வரும் பக்தர்கள் இப்போதே ஓட்டல்கள் மற்றும் தங்கும் விடுதிகளை முன்பதிவு செய்துவிட்டார்கள். பல லட்சம் பேர் வர உள்ள நிலையில், அவர்களுக்கு தேவையான வசதிகளை செய்யும் பணியில் மாவட்ட நிர்வாகமும், அறநிலையத்துறையும் ஈடுபட்டு வருகிறது.

ஒரே நேரத்தில் பல லட்சம் பேர் வந்தால், கோயிலில் கூட்ட நெரிசல், பாதுகாப்பு பிரச்சனை ஏற்படும் என்பதால். பரணி தீபம் மற்றும் மகா தீபத்தின்போது கோவிலுக்குள் பக்தர்கள் முன்பதிவின் அடிப்படையில் அனுமதிக்கப்படுவார்கள். இதற்கான டிக்கெட் ஆன்லைன் மூலம் வினியோகிக்கப்படுவது வழக்கம். பரணி தீபத்தை காண 500 பேருக்கும், மகா தீபத்தை காண 1,100 பேருக்கும் ஆன்லைன் மூலம் அனுமதி டிக்கெட் வழங்கப்படும். ஆன்லைனில் உரிய கட்டணம் செலுத்தி, அனுமதி டிக்கெட்டை பெற்றுக் கொள்ள முடியும்.
இதில் பரணி தீப தரிசன நிகழ்வை காண வருபவர்கள் அதிகாலை 2.30 மணிக்கும், மகா தீபத்தை காண வருபவர்கள் பிற்பகல் 3.30 மணிக்கும் வரவேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஆன்லைன் டிக்கெட்டுகள் வருகிற 10 அல்லது 11-ந்தேதி வினியோகிக்கப்பட இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. ஆன்லைன் டிக்கெட் பெற்றவர்களை தவிர, கட்டளைதாரர்கள் மற்றும் உபயதாரர்கள் 5,200 பேருக்கு பரணி தீபத்தை காணவும், 8 ஆயிரம் பேர் மகா தீபத்தை காணவும் அனுமதி வழங்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications