திருவண்ணாமலை மகா தீபம்; மலையேற பக்தர்களுக்கு அனுமதி இல்லை - அமைச்சர் சேகர்பாபு
திருவண்ணாமலை: ஃபெஞ்சல் புயல் நேரத்தில் பெய்த கனமழை காரணமாக திருவண்ணாமலை மலையடிவாரத்தில் மண்சரிவு ஏற்பட்டது. இதில் 7 பேர் உயிரிழந்தனர். இந்நிலையில், கார்த்திகை தீப திருவிழாவின் போது திருவண்ணாமலையின் மேல் ஏற்றப்படும் மகா தீபத்திற்கு உடன் செல்ல பக்தர்களுக்கு அனுமதியில்லை என்று அமைச்சர் சேகர்பாபு கூறியுள்ளார்.
ஒவ்வொரு ஆண்டும் திருவண்ணாமலை தீப திருவிழாவின் போது, 2668 அடி உயர மலை உச்சியில் மகா தீபம் ஏற்றப்படும். இதில் பங்கேற்க 2,500 பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்படும். இவர்கள் அனைவருக்கும் உடல் பரிசோதனை செய்யப்பட்டு அனுமதி அட்டைகள் வழங்கப்படும். இந்த ஆண்டும் பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டிருந்தது. ஆனால் கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு பெய்த கனமழை நிலைமையை அப்படியே தலைகீழாக மாற்றிவிட்டது.

வங்கக்கடலில் உருவாகியிருந்த புயல் கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு மரக்காணம் பகுதியில் கரையை கடந்திருந்தது. புயல் கரையை கடந்தாலும் அது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழந்து மெதுவாக தமிழக பகுதியை கடந்தது. இதனால் உள் மாவட்டங்களில் கனமழை பெய்தது. குறிப்பாக திருவண்ணாமலை மாவட்டத்தில் பெய்த மழை காரணமாக, மலையில் மண் சரிவு ஏற்பட்டது. இதனால் மலை அடிவாரத்தில் உள்ள வ.ஊ.சி நகரின் 11வது தெரு கடுமையாக பாதிக்கப்பட்டது. மண்சரிவின்போது சுமார் 11 டன் எடை கொண்ட பாறை விழுந்ததால் 2 வீடுகள் சேதமடைந்துள்ளன.
மண்சரிவையடுத்து உடனடியாக மீட்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டன. உள்ளே 7 பேர் வரை சிக்கியிருப்பதாக அஞ்சப்பட்டதால் பொக்லைன் உதவியால் மீட்பு பணிகளை மேற்கொள்ள முடியவில்லை. எனவே மீட்பு படையினர் அதிகரிக்கப்பட்டு துரிதமாக பணிகள் நடைபெற்றது. இறுதியாக ஒவ்வொரு நபரின் உடல்கள் மீட்கப்பட்டன. மொத்தமாக 7 பேரும் சடலமாக மீட்கப்பட்டனர். இந்த சம்பவத்தையடுத்து பக்தர்கள் மலைக்கு அனுமதிக்கப்படுவார்களா? என்று கேள்வி எழுந்தது."
இதற்காக புவியியல் வல்லுநனர் குழுவினர் ஆய்வை நடத்தி அறிக்கையை சமர்பிக்க அரசு உத்தரவிட்டிருந்தது. இந்த அறிக்கையின் அடிப்படையில் பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்களா? என்பது குறித்து முடிவெடுக்கப்படும் என இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு அறிவித்திருந்தார். இதனையடுத்து ஆய்வுகள் தீவிரப்படுத்தப்பட்டன. இன்று இந்த ஆய்வு முடிவுகள் குறித்தும், அனுமதி குறித்தும் அமைச்சர் செய்தியாளர்களை சந்தித்திருந்தார்.
இதில் ஆய்வின் அடிப்படையில் பக்தர்களுக்கு மலையேற அனுமதியில்லை என்று கூறியுள்ளார். மேலும் மகா தீபத்திற்கு தேவையான நெய் உள்ளிட்டவற்றை மலையடிவாரத்திலிருந்து உச்சிக்கு கொண்டு செல்ல 300 நபர்களை மட்டுமே பயன்படுத்த முடிவெடுக்கப்பட்டிருப்பதாகவும் கூறியுள்ளார். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகவே பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டிருக்கிறது என்று கூறியுள்ளார்.
வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி தற்போது வலுப்பெற்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாறியிருக்கிறது. இதனால் திருவண்ணாமலை, வேலூர் உள்ளிட்ட உள் தமிழக மாவட்டங்களிலம் கனமழை பெய்யும் என எச்சரிக்கப்பட்டிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications