திகில் கிளப்பும் திருவண்ணாமலை.. தொடர்ந்து மூன்றாவது இடத்தில் மண்சரிவு.. அச்சத்தில் உறைந்த மக்கள்
திருவண்ணாமலை: திருவண்ணாமலையில் பெய்த கனமழை காரணமாக மண் சரிவு ஏற்பட்டுள்ள நிலையில் மீட்புப் பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ஏற்கனவே இரண்டு இடங்களில் மண்சரிவு ஏற்பட்ட நிலையில், தென்கிழக்கு பகுதியில் சுமார் ஆயிரம் அடி மலை உச்சியில் இருந்து மூன்றாவது இடத்தில் மண் சரிவு ஏற்பட்டுள்ளதால் பொதுமக்கள் கடும் அச்சமடைந்துள்ளனர்.
திருவண்ணாமலையில் பெய்து வரும் தொடர் கனமழையின் காரணமாக, வ.உ.சி. நகர் பகுதியில் மண் சரிவு ஏற்பட்டுள்ளது. இதில், ராட்ச பாறை சரிந்துள்ளதுள்ளதால் மலை அடிவாரத்தில் உள்ள வ.உ.சி. நகர் மக்களின் வீடுகளின் மேல் மண் சரிந்துள்ளது. 35 டன் எடை கொண்ட ராட்சதப் பாறை, சுமார் 20 அடி சரிந்து மண் குவியல்கள் வீடுகளை மூடியுள்ளது.

இந்த மண் சரிவு காரணமாக ராஜ்குமார் என்பவரின் வீடு முழுவதுமாக மண்ணுக்குள் புதைந்துள்ளது. மேலும், 2 வீடுகளும் மண் சரிவுக்குள் சிக்கியுள்ளன. அந்த 2 வீடுகளில் குடியிருந்தவர்கள் உடனடியாக வெளியேறியதால் மண்ணில் புதையாமல் தப்பியுள்ளனர். ராஜ்குமாரின் வீட்டுக்குள் அவரது மனைவி மீனா, அவர்களது குழந்தைகள் 2 பேர் மற்றும் அருகில் உள்ள வீடுகளைச் சேர்ந்த பிள்ளைகள் 3 பேர் என மொத்தம் 7 பேர் இருந்ததாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில், வீட்டுக்குள் இருந்தவர்களின் நிலை என்ன என்பது இதுவரை தெரியவில்லை. தொடர்ந்து கனமழை பெய்து வந்ததால் அவர்கள் வெளியே எங்கேயும் செல்லாமல் வீட்டுக்குள் இருந்துள்ளனர். அந்த வீட்டில் கெளதம், இனியா என்ற 2 சிறுவர்கள் இருப்பதால் பக்கத்து வீடுகளைச் சேர்ந்த தேவிகா, வினோதினி உள்ளிட்ட 3 பேர் அங்கு விளையாடுவதற்காக வந்துள்ளனர். இந்த நிலையில், ராட்சதப் பாறை சரிந்து ராஜ்குமாரின் வீட்டின் மேல் மண் சரிந்துள்ளது.
காவல் துறையினர், தீயணைப்புத் துறையினர், பேரிடர் மீட்புத் துறையினர், மாவட்ட அதிகாரிகள் உள்ளிட்டோர் மீட்புப் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். மலைப் பாதை என்பதாலும், இடர்பாடுகள் அதிகம் இருப்பதாலும் வாகனங்களை கொண்டு செல்ல முடியாததால் மீட்புப் பணிகளை மேற்கொள்வதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து விட்டுவிட்டு மழை பெய்து வருகிறது.
இந்நிலையில், தற்போது திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலின் தெற்குப் பகுதியில் சுமார் 1000 அடி மலை உச்சியில் பலத்த சப்தம் கேட்டுள்ளது. இதைத்தொடர்ந்து, அப்பகுதியில் தொடர்ந்து மண் சரிவு ஏற்பட்டு வருகிறது. இப்பகுதி எப்போதும் பச்சைப் பசேலென காட்சியளிக்கும் நலையில், தற்போது மண் குவியல்களாக காணப்படுகிறது. பேரிடர் மீட்புக் குழுவினர் மற்றும் அதிகாரிகள் அப்பகுதிக்கு விரைந்துள்ளனர்.
அந்தப் பகுதி பாதியளவு வனப் பகுதியாகும், குடியிருப்பு பகுதியாகவும் அமைந்துள்ளது. வெகுதொலைவில் அப்பகுதி இருக்கும் நிலையில் தொடர்ந்து மண் சரிவு ஏற்பட்டு வரும் நிலையில் தொடர் கண்காணிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பொதுமக்கள் யாரும் பதட்டப்பட வேண்டாம் எனவும், பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் உள்ள மக்கள் முகாம்களில் தங்கவைக்கப்பட்டும் வருகின்றனர்.












Click it and Unblock the Notifications