அதிமுகவுக்கு துரோகம் செய்தவர்கள் அட்ரஸ் இல்லாமல் போய் விட்டார்கள்! மாஜி மந்திரி காமராஜ் சாடல்!
திருவாரூர்: அதிமுகவுக்கு துரோகம் செய்தவர்கள் அட்ரஸ் இல்லாமல் போய் விட்டார்கள் என அக்கட்சியின் முன்னாள் அமைச்சர் காமராஜ் பேசியிருக்கிறார்.
சசிகலா, டிடிவி தினகரன், ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரை மனதில் வைத்தே முன்னாள் அமைச்சர் காமராஜ் இத்தகைய கருத்தை வெளியிட்டிருக்கிறார்.
மின் கட்டண உயர்வை கண்டித்து அதிமுக சார்பில் நடைபெறவுள்ள ஆர்ப்பாட்டம் குறித்த ஆலோசனைக் கூட்டத்தில் அவர் இதனை பேசியிருக்கிறார்.

மின் கட்டணம்
மின் கட்டண உயர்வை கண்டித்து வரும் 27-ஆம் தேதி புதன்கிழமை அன்று தமிழகம் முழுவதும் அதிமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என அறிவித்துள்ளார் அக்கட்சியின் இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி. இதையடுத்து முன்னாள் அமைச்சர்களும், அதிமுக மாவட்டச் செயலாளர்களும் ஆர்ப்பாட்டத்தை வெற்றிபெற வைப்பது தொடர்பான ஆலோசனைக் கூட்டங்களை மாவட்டந்தோறும் நடத்தி வருகின்றனர்.

திருவாரூர் மாவட்டம்
அந்த வகையில் திருவாரூர் மாவட்ட அதிமுக அலுவலகத்தில் முன்னாள் அமைச்சர் காமராஜ் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அதில் திருவாரூர் மாவட்டத்தை சேர்ந்த கட்சியினர் பலர் பங்கேற்றனர். அப்போது பேசிய காமராஜ், அதிமுகவுக்கு துரோகம் செய்தவர்கள் அட்ரஸ் இல்லாமல் போய் விட்டார்கள் என பொத்தாம் பொதுவாக தெரிவித்தார். மேலும், அதிமுகவை யாராலும் அழிக்க முடியாது எனக் கூறிய அவர், எடப்பாடி பழனிசாமி தலைமையை ஏற்றுள்ள தாங்கள் தான் உண்மையான அதிமுக எனப் பேசினார்.

யாரை மனதில் வைத்து
மன்னார்குடி திவாகரன், சசிகலா, டிடிவி தினகரன், ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரை மனதில் வைத்தே முன்னாள் அமைச்சர் காமராஜ் இத்தகைய கருத்தை வெளியிட்டிருக்கிறார் எனத் தெரிவிக்கப்படுகிறது. ஒரு காலத்தில் சசிகலா மற்றும் அவரது சகோதரர் திவாகரன் ஆகியோரது தீவிர ஆதரவாளராக வலம் வந்த காமராஜ், அரசியல் காலசக்கர சூழற்சியில் தனது நிலைப்பாட்டை மாற்றியிருக்கிறார்.

சூடுபிடிக்கும் விசாரணை
இதனிடையே மாஜி மந்திரி காமராஜ் தொடர்புடைய நிறுவனங்களில் நடத்தப்பட்ட ஐடி ரெய்டில் பல்வேறு ஆவணங்கள் கைப்பற்றப் பட்டிருக்கின்றன. அதன் அடிப்படையில் விசாரணை சூடு பிடிக்கத் தொடங்கியிருப்பது கவனிக்கத்தக்கது.












Click it and Unblock the Notifications