அடுத்த ஐபிஎல் தொடரில் தல தோனி.. சிஎஸ்கே நிர்வாகம் அளித்த பரபரப்பு தகவல்!
திருவாரூர்: 2023ம் ஆண்டு ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாக எம்எஸ் தோனி தொடருவாரா என்ற கேள்விக்கு, அந்த அணியின் சிஇஓ காசி விஸ்வநாதன் பதில் அளித்துள்ளார்.
சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து நட்சத்திர வீரர் தோனி ஓய்வை அறிவித்தாலும், ரசிகர்கள் மத்தியில் அவருக்கான மாஸ் ஒரு துளி கூட குறையாமல் உள்ளது. இதற்கு மிகமுக்கிய காரணம் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், அவர் ஐபிஎல் போட்டிகளில் தொடர்ந்து ஆடி வருவதும் தான்.
கடந்த ஆண்டு கேப்டன்சியை ஜடேஜாவிடம் கொடுத்தாலும், தோனியின் இடத்தை நிரப்ப முடியாமல் அவர் திணறினார். இதனால் கடைசி நேரத்தில் மீண்டும் தோனியே கேப்டன்சியை ஏற்க வேண்டிய சூழல் ஏற்பட்டது.

கேப்டனாக நீடிப்பாரா தோனி?
அதுமட்டுமல்லாமல், அடுத்த சீசனிலும் தோனி பங்கேற்பார் என்று அறிவிக்கப்பட்டது. சென்னை ரசிகர்களுக்காக சென்னை மைதானத்தில் ஒரு சீசன் விளையாடிவிட்டு, ஐபிஎல் தொடரில் ஓய்வை அறிவிக்கலாம் என்பதே அவரின் எண்ணமாக உள்ளது. இதனால் நடப்பு சீசனில் தோனி பங்கேற்பது நிச்சயம் என்று முடிவாகியுள்ளது. ஆனால் கேப்டனாக பங்கேற்பாரா என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் எழுந்தது.

சிஎஸ்கே சிஇஓ விளக்கம்
இந்த நிலையில் தோனி கேப்டன்சி செய்வாரா என்று ஏற்பட்டுள்ள குழப்பம் பற்றி சிஎஸ்கே அணியின் சிஇஓ காசி விஸ்வநாதன் விளக்கமளித்துள்ளார். திருவாரூரில் நடைபெற்ற மாவட்ட கிரிக்கெட் அசோசியேஷன் 25ம் ஆண்டு வெள்ளி விழா நிகழ்வில் சிறப்பு விருந்தினர்களாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் சிஇஓ காசி விஸ்வநாதன் மற்றும் தமிழக வீரர் சாய் கிஷோர் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இந்திய அணி பற்றி பேச்சு
இந்த நிகழ்ச்சிக்கு பின் செய்தியாளர்களை சந்தித்து சிஇஓ காசி விஸ்வநாதன் கூறுகையில், தமிழ்நாட்டு வீரர்கள் குறைவாக இந்திய அணியில் ஆடுகிறார்கள் என்று இப்போது சொல்ல முடியாது. டெஸ்ட் போட்டிகளில் அஸ்வின் இருக்கிறார். ஒருநாள் போட்டிகளில் தினேஷ் கார்த்திக், அஸ்வின் ஆகியோர் இருக்கிறார்கள்.

சாய் கிஷோர்
அடுத்ததாக சாய் கிஷோர் அணியில் இடம்பெறுவார். நிறைய தமிழக வீரர்கள் ஆடிக் கொண்டுதான் இருக்கிறார்கள். வாஷிங்டன் சுந்தர் மற்றும் விஜய் சங்கர் ஆகியோர் காயம் காரணமாக சில பிரச்னைகளை சந்தித்து வருகிறார்கள். முன்பு போல் மும்பையில் இருந்து ஏழு பேர், பத்து பேர் எல்லாம் அணியில் கிடையாது.

தோனியே கேப்டன்
இப்போது எல்லா மாநிலத்தில் இருந்தும் இரண்டு பேர் இந்திய அணியில் விளையாடுகிறார்கள். டிஎன்பிஎல் தொடர் மூலம் 13 வீரர்கள் ஐபிஎல் தொடரில் விளையாடுகிறார்கள். அடுத்த ஐபிஎல் சீசனிலும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் தோனி விளையாடுவார். அணியின் கேப்டனாகவும் நீடிப்பார் என்று தெரிவித்தார். இந்த நிகழ்ச்சியில் பல்வேறு கிரிக்கெட் போட்டிகளில் வெற்றிபெற்ற மாவட்ட கிரிக்கெட் அணியினருக்கு தமிழக வீரர் சாய் கிஷோர் கோப்பையை வழங்கினார்.












Click it and Unblock the Notifications